Thursday, December 4, 2014

மறுபடியும் முதலிலிருந்து


பள்ளமென மெல்லமாய்,
கோடிட்டுக் காட்டிய இடமெல்லாம்,
மேடிட்டுக் காட்டிட - எடுத்தோம்
கவிழ்த்தோம் என்று
கொட்டிக் கவிழ்க்க,
பள்ளமாய் இருந்த இடம் - இன்று
மெல்ல மெல்ல,
மேடாகிப் போக...
மீண்டும் முதலிருந்து ஆரம்பமானது...

பள்ளமென மெல்லமாய்...

Tuesday, November 25, 2014

சாப்பாட்டு ராமன்

இந்தப் பதிவினை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தது ஒரு வார நாளிதழில் கேட்கப்பட்டு இருந்த ஒரு கேள்வி. அந்த நாளிதழில், கேள்வி-பதில் பகுதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இதோ.

கேள்வி: சமைப்பது எப்படி ஒரு கலையோ, அது போல, அந்த சமயலை ருசிப்பதும் (சாப்பிடுவதும்) ஒரு கலைதானே?
பதில்: அதெப்படி கலையாகும். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

பதிலைப் படித்தவுடன் எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் சாப்பிடுவதும் ஒரு கலைதான் என்ற ஒருவித நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். சமையலை ரசிக்கும் நானும், ரசிகன் என்கின்ற வகையில் ஒருவித கலைஞனே (சாப்பாட்டு ராமன்). ஆதலால் இப்படிப்பட்ட ஒரு பதிலைப் பார்த்ததும் ஒருவித ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், அந்தக் கேள்வி-பதிலானது எனக்கு இந்தப் பதிவினைப் பதிவதற்கு ஏதுவாக அமைந்தது.

அது என்னன்னு தெரியல, இந்த உலகம் சாப்பாட்டிற்கும்,சாப்பாடு செய்தவர்க்கும் கொடுக்கும் மரியாதையினை, அந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுபவருக்குக் கொடுப்பது இல்லை. அன்னத்தைப் பழிக்காதே என்று சொல்பவர்கள்தான். "நல்லா கொட்டிக்கோ, தின்னுக்கிட்டே இரு, பசி தாங்க மாட்டாரோ துரை, சாப்பாட்டு ராமா' என்றெல்லாம் கரித்தும் கொட்டுகிறார்கள்.

சமைப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விலாவரியாக, பல புத்தகங்கள் வந்து உள்ளன. ஆனால், அந்தச் சமையலைப் பற்றி விமர்சிக்க வேண்டுமென்றால் எவரேனும் ஒருவர் அதை ருசித்துப் பார்த்துத்தானே ஆக வேண்டும். எப்பேற்பட்ட கலையாக இருந்தாலும் அதைப் பிறர் உணர முடிந்தாலன்றி அதன் திறம் வெளியில் தெரிவதில்லை. அதற்கு, இந்த சமையல் கலையும் விதிவிலக்கல்ல.

சமையலைப் பற்றி பல புத்தகங்கள் வந்திருப்பதைப் போல, எப்படியெல்லாம் அனுபவித்துச் சாப்பிட வேண்டும் என்பதற்கும் புத்தகம் எழுதப்பட்டால், அதை வாங்குவதற்கும் என்னைப் போன்றோர் இருக்கத்தான் செய்வார்கள். சமையல் என்பது ஓவ்வொரு பகுதிக்கும் வேறுபடும். அது அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களது உணவின் தாகத்தைப் பொறுத்தும், தாகம் தீர்க்கும் தண்ணீரின் சுவை பொறுத்தும், மண்ணில் விளையும் பயிர் பொறுத்தும், கிடைக்கப் பெறும் பொருள் பொறுத்தும் நிர்ணயிக்கப்படும். ஆனால், ஒருவரது நா சுவையானது, என்னதான் முதலில் மண் வாசனை மாறாது, உணவை உண்டு வந்திருந்தாலும், அவர்கள் செல்லும் பகுதிக்கேற்ப, நாவானது புதுப்புது சுவைகளை மனதில் நிறுத்திக் கொள்ளும்.

நாவிற்கும், நாசிக்கும் ருசி தெரியாமல், சமையல் எனும் ஒரு கலை பிறந்திருக்க வாய்ப்பில்லை.

நமது முன்னோர்கள் கேப்பைக் கூழ், கம்புக் கூழ் என்று பலதரப்பட்ட கூழ்ம நிலை உணவுகளை எடுத்துக் கொண்டனர். அதனால்தான் என்னவோ, அவர்கள் சாப்பாடினைச் சாப்பிடும்போது அவர்களது கைகளை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். அதாவது, சோற்றினை ஐந்து விரல்களால் நன்றாகப் பிசைந்து, அப்படியே அதனை உள்ளங்கைகளில் உருட்டி, திரட்டி உருண்டை செய்து அப்படியே வாயில் போட்டு நன்றாக மென்று தின்றார்கள். ஆனால், இன்றைய நமது தலைமுறையினரோ, உள்ளங்கை வரை இருந்த சோற்றுடனான உறவினை வெறும் விரல் வரை மட்டுமே வைத்து இருக்கிறோம். அள்ளித் தின்னாமல் நுனிப் புல் மேய்வதைப் போல, மெதுவாக கிள்ளித் தின்கின்றோம். இன்னும் சிலரோ, அதையும் நிறுத்திவிட்டு கரண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் சாப்பிட்டுவிட்டு அதன் சுவையினை வர்ணிப்பதைக் கேட்டாலே, சிலருக்கு அந்த உணவைச் சாப்பிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு அவர் அனுபவித்ததை, சுவைக்க சுவைக்க எடுத்துக் கூறுவார்கள், கேட்பவர்களைச் சுவைக்கத் தூண்டும் அளவிற்கு. அதே நேரம், சுவைத்த உணவு பிடிக்காவிட்டாலும், அவர்கள் அதை வர்ணிப்பதில் இருந்தே அந்த உணவைப் புசிக்க வேண்டுமென்ற பசி அடங்கிவிடும் பலருக்கும்.

உதாரணமாக, "Discovery" தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர், தான் வழியில் தென்படும் சிலவற்றை உணவாக உட்கொள்வதை வர்ணிப்பதை எடுத்துக் கொள்ளலாம். அவருக்குப் பிடித்திருந்தால், "இந்தச் சுவையானது வான் கோழியின் இறைச்சியினைப் போலவே அற்புதமாக இருக்கிறது, மேலும் நான் இதை நன்றாக தீயில் சுட்டுவிட்டதால் இதிலிருந்து ஒருவித நறுமணமும் வருகிறது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்பார். மற்றொரு வேளையில் "இந்தப் புழுவினைச் சாப்பிடும்போது, ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. அது எப்படி இருக்கிறது என்றால்? ஒருவாரம் துவைக்காத "socks" துணியினை தண்ணீரில் கரைத்து வைத்தால் எந்த அளவிற்கு துர்நாற்றம் அடிக்குமோ, அது போன்றதொரு துர்நாற்றம் எனது நாசியில் தெரிகிறது" என்பார். இப்படிப்பட்ட விளக்கம் கொடுத்த பிறகு எவருக்கேனும் அதைச் சுவைக்கத் தோன்றுமா?

அநேகமாக பலரும், சில விசயங்களை எடுத்துக் கூறுவதற்கு சாப்பாட்டின் சுவையினைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். எனது பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் அடிக்கடி ஒன்றைக் கூறுவார். ஏதாவது முக்கியமான பகுதியினைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, "நான் சொன்னதெல்லாம் உங்க மனசுல எப்படி பதியனும் தெரியுமா? இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டா எப்படி, தொண்டையில சிக்காம வழுக்கிக்கிட்டு போகுதோ, அந்த மாதிரி உங்க மனசுல உடனே மிக எளிமையா போகனும்" என்று சொல்வார். இதுபோன்ற பல சம்பவங்களை அடுக்கிக் கூற இயலும். சாப்பிடும் உணவை நன்றாக அனுபவித்து சாப்பிடுவதால்தான், அவர்கள் மனதில் இந்த சுவையானது  பதிந்து போய் இருக்கிறது. "பசு மரத்தாணி" என்பதை மாற்றிக் கூறியவர் இவர்தான். இவர் சொன்ன உதாரணம் எவ்வயதில் படிப்பவருக்கும் பொருந்தும்.

எப்படிச் சிலர், தம் உணவினை அழகாக வர்ணிக்கிறார்களோ, அதைப் போலவே சிலர் தாம் சாப்பிடும் உணவை அழகாக சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தாலே, நமக்கும் சாப்பிடத் தோன்றி விடும்.

சிறு வயதில் என்னுடைய தந்தை, ஆட்டுக்கறி சாப்பிடுகையில் "என்னய்யா எலும்பையெல்லாம் சாப்பிடாம வச்சு இருக்க?" என்பார். அத என்ன பன்றது என்று மனதுக்குள் கேள்வி எழும் முன் அவர் செய்து காண்பித்தது இன்னும் நினைவிருக்கிறது.. அப்படியே வாயில் வைத்து சுவைத்து ஒரு உறிஞ்ச வேண்டும் என்று சொல்வார். ஆனால், எனக்கு என்னவோ வெறும் காத்துதான் வந்தது.

சமைத்தவர் மனம் மகிழ வேண்டுமென்றால், அவர் தனது சமையலைப் புசிப்பவரைக் கண்டால் மட்டுமல்ல, அவர்களது ஒரு சில நல் விமர்சனங்களே அவ்ர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை.

மே மாதம்,கஜினி,சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் டீ சாப்பிடுவதைக்கூட அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இப்போ சொல்லுங்க, சமைப்பது எப்படி ஒரு கலையோ, சாப்பிடுவதும் ஒரு கலைதானே.?

இதைப் படித்துவிட்டு, 'கரிசக் காட்டு பூவே' படத்தில் நெப்போலியன் அவர்கள் "சாப்பிடுவது எப்படின்னு செஞ்சு காண்பித்தேன்" என்று பக்கத்தில் இருப்பவரது இலையினைக் காலி செய்யாதிருந்தால் போதும்.

சமைக்கும் உணவின் வாசமானது அன்றோடு மறைந்தாலும், சுவைத்த உணர்வானது என்றும் மனதில் நீங்காது நிற்கும்.

Friday, November 21, 2014

கோழிக் குஞ்சும் கோடீஸ்வரனும்

சில நாட்களுக்கு முன்பாகவே இதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இதைப் பற்றிய ஞாபகம் வரவே இதனை இப்போது பதிவு செய்கிறேன். தற்போது அலைபேசி மற்றும் தனக்கென தனியாக மின்னஞ்சல் வைத்து இருக்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பமானது சாமானிய மக்களைச் சென்றடையும் வகையில் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்திக் கொண்டுள்ளது. "எங்களது லாட்டரியில், உங்களது பெயருக்கு லட்சுமியே காட்சி தந்து இருக்கிறார்.ஆகவே உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப் போகிறார். உங்களுக்கு 100000 ருபாய் கிடைக்க உள்ளது, தொடர்புக்கு... " என்று ஒரு முகவரியும் கொடுத்து நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து இதுபோன்ற மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் வரக்கூடும். அநேகமாக எல்லோரும், இதனைப் பெற்று இருப்போம் என்று எண்ணுகிறேன். இது எவ்வளவு பெரிய மோசடி வேலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது ஒருபுறம் என்றால், சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இப்படியாக ஒரு போட்டி நடக்கும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால், அவர்கள் அதற்குப் பரிசாக பணம் தருவார்கள்.

கேள்வி: ஒன்றோடு பூஜ்ஜியத்தைக் கூட்டினால் எவ்வளவு?

Option A: ஒன்னு
Option B: பன்னு
Option C: திண்ணு

(இந்த கேள்வி - பதில் உபயம்: நண்பர் வீரா)

இதற்கு நமக்கு விடை தெரிந்தால், அவர்களைத் தொடர்பு கொண்டு பதிலைச் சொல்லி பரிசை அள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், தொடர்பு கொள்ளும் எண்ணுக்கு நிமிடத்திற்கு 10 ரூபாய் வரை வசூல் செய்வார்கள். மேலும், தொடர்பானது உடனே கிடைத்து விடாது, கிட்டத்தட்ட 10, 15 நிமிட காத்திருப்பிற்குப் பிறகுதான் கிடைக்கும். பரிசுத் தொகையின் மதிப்பைவிட, நமது செலவு கூடுதலாகச் சென்றுவிடும் சில நேரங்களில்.

டிக்கெட்டு 5 ரூபாய், பூ 50 ரூபாய்... நல்லா ஓட்டுங்கய்யா உங்க வண்டிய...

இதை 'நூதனத் திருட்டென்று' சொல்வதா, அல்லது 'வியாபார காந்தம்' என்று சொல்வதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சற்று இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், எனக்கு பட்டென்று ஒன்று உரைத்தது. எனது சிறு வயதில், இதே போன்றதொரு வியாபாரத்தை கண்டது நினைவுக்கு வந்தது.

எனது சிறு வயதில், எமது ஊரின் கடைத் தெருவின் மையத்தில் ஒரு மிதி வண்டியில் நான்கைந்து கூடைகளில் பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகளை எடுத்துக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருப்பார்கள். அப்போது, தனியாக ஒரு கோழிக் குஞ்சினை விலைக்கு வாங்கினால் அதன் விலையானது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே. அதைக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதை, அதை விற்பவரே செய்வார். ஒவ்வொன்றும் 25 பைசா மதிப்புள்ள 5 ரூபாய் அளவிற்கு சீட்டுக்கள் (சிகரெட் அட்டையில், எண்கள் எழுதப்பட்டிருக்கும் அட்டை) கொடுப்பார். அனைத்து சீட்டுக்களும் விற்று முடிந்தவுடன் அவர், அந்த சீட்டுக்களையெல்லாம் ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி ஒரு சீட்டினை எடுப்பார். (அவரிடம் தனியாக அதே எண்களுடைய சீட்டுக்கள் இருக்கும்). அப்படி எடுத்த சீட்டின் எண்ணானது யார் வைத்து இருக்கிறாரோ அவருக்கு ஒரு கோழிக் குஞ்சினைக் கொடுத்துவிடுவார். வாங்கியவருக்கோ இலாபம், விற்றவருக்கோ கொள்ளை இலாபம். ஓ... இதுதான் கொள்ளை இலாபமோ?

வாங்கியவருக்கும் மகிழ்ச்சி, விற்றவருக்கும் மகிழ்ச்சி... பின்ன என்ன 'உடனே... வித்திடு...'

இப்பொழுது மேற்சொன்ன நிகழ்வையும் முன்னர் சொன்ன நிகழ்வையும் உங்களால் பொருத்திப் பார்க்க இயலும் என்றெண்ணுகிறேன். இப்பொழுது இந்தக் கொள்ளை இலாபத்தைப் பாருங்கள்...

"கோடிகளை" பரிசாகத் தரும் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நமது கைபேசியிலிருந்து பதில் அனுப்ப வேண்டும். அதற்கு தனியாக, அதிகமான ரூபாயானது நமது கைபேசியின் இருப்பிலிருந்து கழியும். இந்த நிகழ்வினில் சில கோடி மக்கள் பங்கு பெறுவதற்காக முற்பட்டால், மொத்தப் பணமும் எவ்வளவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? மேலும், பலதரப்பட்ட விளம்பரங்களிலிருந்தும் அவர்களுக்குப் பணமானது கிடைக்கும். இந்தப் பணத்தின் ஒரு சிறு தொகையினையே பரிசாகக் கொடுப்பர். ஒருவரிடம் வாங்கி மற்றொருவரிடம் கொடுப்பது (முழுவதையும் அல்ல). எதுவாயினும் அவரும் மகிழ்ச்சி, இவரும் மகிழ்ச்சி. ஆனால் இதற்கு உபயோகிக்கப்பட்ட யோசனையானது அந்தக் கோழிக் குஞ்சுகளை விற்றவரைப் போலவே இருக்கிறது என்றால் அது மிகையல்ல...

Thursday, November 20, 2014

என்னடா விளம்பரம்?

தொலைக்காட்சியினைத் தவிர்த்து நமது நாளானது அமைய இயலாது என்று சொல்லும் அளவிற்கு இந்த தொலைக் காட்சியானது நம்மோடு ஐக்கியமாகிவிட்டது. என்னதான் மொக்கை நிகழச்சியாக இருந்தாலும் அதில் விளம்பரம் செய்வதற்கென்று பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கென்றும் சிலர் இருக்கத்தான் செய்வோம். சிலர், எதோ ஒன்றைப் பார்த்து பொழுதைக் கழிப்பதற்காகப் பார்க்கலாம். சிலரோ, தினமும் அதைப் பார்ப்பதற்காக காத்திருந்தும் பார்க்கலாம். சிலருக்கோ, அதைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையினால் பார்க்கலாம். இதில் வேறு வழியில்லாமல் பார்ப்பவர்களது நிலைமைதான் பரிதாபமானது. அதாவது, உதாரணமாக வீட்டில் இருக்கும் சுட்டிகள் எப்போது பார்த்தாலும் "Cartoon" நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விருப்பப்படி, நாமும் அதைப் பார்ப்பதற்கு உள்ளாகிறோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நம்முடைய யாவரது விருப்பமும் இல்லாமல், தானாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள்.  அது நேயர் விருப்ப நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்கும் விளம்பரம் உண்டு. "VJ" இல்லாமல் கூட நிகழ்ச்சிகள் இருக்கக் கூடும், ஆனால் விளம்பரங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. (செய்திகள் உட்பட). செய்திகளையே ஒரு விளம்பரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் தற்போது, அதைப் பற்றியெல்லாம் பின்னர் எழுதலாம்.

"நீரின்றி அமையாது உலகு" என்பது போல, "விளம்பரமின்றி அமையாது தொலைக்காட்சி நிகழ்வு" என்பது இன்றைய நிலை. தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் என்றும்கூட சொல்லலாம்.

தற்போதைய விளம்பரங்கள் என்று மட்டுமல்ல, விளம்பரம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, இந்த விளம்பரங்களுக்காகத்தான் அதிகமாக மனித மூளையானது செயல்பட்டு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால், அதைப் பார்த்துத் தொலைக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருப்பதால், அதைப் பற்றிய எனது எண்ணத்தின் வடிவமே இந்தப் பதிவு.


விளம்பரம்1:

முன்பெல்லாம், ஊட்டச்சத்து பானத்தின்(?) விளம்பரமானது எப்படி இருந்தது?

குழந்தையானது சாப்பாட்டிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருப்பது போல காண்பிப்பார்கள். பின்னர், "குழந்தைகள் சாப்பாட்டினைச் சரியாகச் சாப்பிடுவது கிடையாது. அதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்றாட ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. இதற்காகத்தான் நாங்கள் தருகிறோம் 'டுபாக்கூர் பானம்', இதனால் உங்கள் குழந்தைகள் சரியான ஊட்டச் சத்துக்களைப் பெறுவார்கள்.."

இப்படியாக இருந்த அந்த விளம்பரமானது தற்போது இப்படி வந்து நிற்கிறது.

"இன்னிக்கி இந்த டுபாக்கூர் ஊட்டபானம் கொடுத்தீர்களா?"
"இல்லியே, நாளைக்கு கொடுக்கிறேன்".

அதாவது, மறைமுகமாக, அவர்களது பானத்தைத்தான் அனைவரும் வாங்குவதாகவும், அதை அவர்கள் சரியாகக் கொடுக்க மறு(ற)ப்பதாகவும் ஒரு மாயையினை உருவாக்குகிறார்கள். என்னவொரு புத்திசாலித்தனம்?

வரகு, திணை, கேப்பை, கம்பு, சோளம் என்று சிறுதானியங்கள் பலவற்றை, பலவிதங்களில் உண்டு தின்று, தினவெடுத்த தேகம் கொண்டு வலம் வந்த நம்மிடம் ஊட்டச் சத்துக் குறைபாட்டைக் கூறுகிறார்கள். காலக் கொடுமை... கடைசியாக "கடலை மிட்டாய் சாப்பிடுங்கள், அது உடலுக்கு நல்லது" என்று சொல்லுமளவிற்கு வந்துவிட்டது இன்றைய நிலை.

விளம்பரம்2:

ஒரு அம்மணி மணக்க, மணக்க முகப்பூச்சு பூசிக் கொள்வதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம். அதனால், அந்த தன்னம்பிக்கையினை எப்படி வெளிப்படுத்துகிறார் தெரியுமா? பக்கத்து வீட்டு ஆடவனைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போய் கல்யாணம் செய்துகொள்ள அவரை அழைப்பதாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப் போடு, இதுவல்லவோ, "சரியான துவக்கம், தன்னம்பிக்கைக்கான வித்து"

விளம்பரம்3:

தரையினைச் சுத்தமாக்கும், கிருமிகளை அழிக்கும், கழிப்பறையினைச் சுத்தமாக்கும் என்று பலவாறாக விளம்பரப்படுத்தப்படும் பலவகையான பொருள்களும் சுத்தம் செய்வது 99.99%. அது என்ன கணக்கு? அந்த விளம்பரத்திலேயே, அவர்கள் கிருமிகளை அழிப்பதாகக் காண்பிக்கும் படத்தில் ஒரேயொரு புழு,கிருமி மட்டும் அழிக்கப்படாமல் இருக்கும். ஓ... அதுதான், 99.99% சுத்தமா? எவரேனும், இவர்கள்மீது 'கிருமிகள் அழியவில்லை' என்று வழக்குத் தொடர்ந்தால்கூட, அந்த 0.01% கிருமிதான் இதற்குக் காரணம் என்று கைவிரித்து விடுவார்களோ?

ஒரு டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கையில் ஒளிபரப்பானது அந்த விளம்பரம். "உங்கள் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருங்கள், கழிப்பறையினைப் பயன்படுத்துங்கள்". அமர்ந்திருந்த பலரும் முணுமுணுக்கிறார்கள், "இவய்ங்களுக்கு வேற வேலையே இல்லையா, இதையே திருப்பி, திருப்பி போடுறானுக. இந்த அரசியல்வாதிகள் சுத்தம் செய்றது ஒரு நாளைக்குத்தான், தினமும் சுத்தம் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். எல்லாம் ஒரு விளம்பரம்தான்" என்றார்கள். சொல்பவர் எவராய் இருந்தால் என்ன, நல்லதைச் சொன்னால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே. ஒளிபரப்பாகும், பல கீழ்தரமான விளம்பரங்களெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, இவர்களை நோக்கி, "வாருங்கள் முன்னேறுவோம், சுத்தம் செய்வோம்" என்று அனபாக ஒரு கோரிக்கை வைத்தால் உடனே வெடித்து விடுகிறார்கள். நல்லா நடத்துங்கப்பா... இப்படியே இருங்க, நாம சீக்கிரம் முன்னேறிவிடுவோம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, "என்னடா விளம்பரம்?" அப்படின்னு மனசு அடிச்சுக்குது.

Wednesday, November 19, 2014

நித்தம் நித்தம்...

மை கொஞ்சம் பூசிய
விழி கொண்டு
என் மெய் கொஞ்சம் - முத்தத்தின்
வழி எழுதிடு...

என் இதழ்களைப்
பற்றிப் பற்றி,
பற்றிக் கொண்ட
நெருப்பினில் பூத்த நீராய்
வியர்த்திடும் உன் இதழ்களை,
என் தோள்களில்,
உன் கரம் - பற்றி பற்றி,
சிவந்திட்ட இடங்களில்
அவ்வியர்வை கொண்டு
முத்தடம் பதித்திடு...

கண் விழித்திருக்கையிலேயே
நிழலாடிடும்
நினைவுகளில்,
கனவுகளின் கற்பனைகளில்,
கண்டிடும் அனைத்தையும்
மொத்தமாய்
முத்தமாய்
நித்தமுமாய் கொடுத்திடு...!!!

Tuesday, November 18, 2014

படமும் சிறு கவியும்


துள்ளித் திரிகையில்,
அள்ளித் திரிகின்றனர் சிலர்...

அள்ளி உண்ணும் வேளையில்
கிள்ளி உண்கின்றனர் சிலர்...

Monday, November 17, 2014

கவிதையென...


என்னால் - இந்நாள்,
முன்னால் விரியும்
எண்ணத்தில்
எழும் கருத்தை...

அருவாய் உருவான
கருவை,
உருவாய் வடித்திட...

தருவாய்,
வருவாய் என நல்-
வார்த்தை தேடி அழைகையில்..

கெஞ்சிய நெஞ்சம் கூட,
'கொஞ்சம் பொறு'
'கொஞ்சம் பொறு' என்கையில்...

பார்த்தது, கேட்டது
நுகர்ந்தது,
உணர்ந்தது, சுவை
அறிந்தது - என
ஐம்புலன்களும் அறிந்துணர்ந்த...

அறிவுக்கெட்டிய
நல் வார்தைகளையெல்லாம்,
சேர்த்து சேர்த்து...

சேர்த்தவைகளயெல்லாம் ஒன்றாய்
கோர்த்து கோர்த்து...

கோர்த்தவை,
கருவின் உருவாய் வருமா?
அல்லது
அருவமாய்ப் படுமா?
வனப்பைக் குறைத்திடுமா? எனக்
கேள்விகள் பல கேட்டு, கேட்டு...

பார்த்து பார்த்து,
மீண்டும் மீண்டும்,
படித்துப் பார்த்து...

கருவின் உருவாய்(வை) தருவிக்கிறேன்
கவிதையென நான்...

Friday, November 14, 2014

ராசாவின் இசையிலே: அடுக்கு மல்லி

ஆவாரம் பூ படத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று. வெகு நாட்களாகவே இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆகையில் இன்று இதனைப் பதிவு செய்கிறேன்.

இந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதற்கு வழக்கமான காரணங்களில் ஒன்று - இளையராஜாவின் இசையில் அமைந்தது.

பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய சில பாடல்களில், தானாகவே சில இடங்களில் சிரிப்பையும், இதர சில சிணுங்கல்களையும் கொடுத்திருப்பார். அப்படிக் கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாலு அவர்கள் இளையராஜாவின் இசையில் தானாகவே இதைச் செய்வார். சில சமயங்களில், இருவருக்கும் இதில் கருத்து வேறுபாடும் இருந்ததுண்டு எனவும் எங்கோ படித்த/கேட்ட ஞாபகம் உண்டு.

பாடல் ஆரம்பமானது, ஒரு மெல்லிய பூங்காற்றாக, வீசும் தென்றலாய் ஒரு புல்லாங்குழலின் இசையில் இந்தப் பாடலானது ஆரம்பிக்கும். பிறகு பின்னணி இசைக் குழுவின் ஒலியானது, கடல் அலைகள் போலவே ஒலிக்கும். படத்தின் களமானது, மீனவப் பகுதி என்பதால் இந்த மாதிரியானது இசையினைச் சேர்த்துக் கொண்டாரா? அல்லது பாடலின் சுவைக்காக சேர்த்துக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் பாடலினைக் காட்சியோடு பார்ப்பவர்களுக்கு அந்தப் பாடலோடு ஒன்றிப் போய்விடுகின்ற அளவிற்கு இந்த இசையானது அமைந்து இருக்கும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு பின்னால் இந்தப் பாடலைக் காட்சியாகப் பார்ப்பவர்களுக்கும் இந்தப் பாடலின் காட்சியோடு ஒன்றிப் போய்விட முடியும்.

பாலு அவர்கள் பாடலின் முதல் சில வரிகளைப் பாடுவார்.

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு தாலாட்டு போலவே இருக்கும். மிக மிக எளிமையான வரிகளோடு இந்தப் பாடலானது பதியப்பெற்று இருக்கும். ஆனால், இந்தப் பாடலின் தாக்கம் மிக அதிகம் பேரைக் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல.

வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டானங்கே மொட்டுப் போல ரோசா

கதைப் படி, கதையின் நாயகன் சிறு பிள்ளைத்தனமான மன வளர்ச்சியில் உள்ளவனாகக் காட்டி இருப்பார்கள். இந்த வரிகளின் மூலமாக, அவனை அவனே 'கெட்டிக்காரன்' என்று சொல்லிக் கொள்ளச் செய்து சந்தோசப்படுத்தியிருப்பார் பாடலாசிரியர். பொதுவாகவே பலராலும், வெறுக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற ஒருவருக்கு எவரேனும் ஆதரவு கரம் நீட்டினால் அவர்கள் மீது பேரன்பு பெருகும். மேலும் தன்னையும் மதிப்பதற்கு ஆள் உண்டு என்பதாலேயே அவர்களது தன்னம்பிக்கையும் கூடும். இதற்குப் பேருதாரணமாக நமது மகாபாரதத்தில் வரும் 'கர்ணன்' கதாப்பாத்திரத்தைக் குறிப்பிடலாம்.

சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா

இந்த வரிகளைப் பாடியவுடன், பாலு அவர்கள் இலெசான சிரிப்பினை இசையாக்கி இருப்பார். எனக்கு இந்தப் பாடலின் இடையே பாலு அவர்கள்  இலேசாக சிரிக்கும் குரலில் அப்பொடியொரு ஈர்ப்பு உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தப் பாடலுக்கு அது உயிர்ப்பூட்டுவதாய் அமைந்ததாகவே உணர்கிறேன். இந்தச் சிரிப்பினை பாலு அவர்கள், தாமாகவே சேர்த்துக் கொண்டாரா?அல்லது இவர் குழந்தை போன்ற மன நிலையில் இருப்பதால், தன்னவள் இப்படிச் சொன்னதும் அதை அவன் வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமென்பதற்காக இந்தச் சிரிப்பினைச் சேர்த்தார்களா என்று தெரியவில்லை. அற்புதமாக இருக்கும்...

இந்த வரிகளைப் பற்றி எழுதியே தீர வேண்டும்.

சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும் எப்போதும்

இந்த வரியின் முதல் வரியின் பொருளை, இரண்டாம் வரியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கவிதை, கவிதை...

Thursday, November 13, 2014

கைகளில் ஏந்திடும் எம் உலகம்


யாம் பெற்றெடுத்த என் தாயே...
சேயாய் வந்த தாயே...

உன்
சின்னஞ் சிறு
சிணுங்கல்களுக்கெல்லாம்
மொழியாக்கம் செய்யச் செய்த
மழலையே...

எழுவாய்,
அழுவாய், சிரிப்பாய்,
விழிப்பாய்,
கழிப்பாய், துயில்வாய் என
நீ பயில்வதையெல்லாம்
எம்மைப் பயிலச் செய்யும்
பாலமுதே...

புரள்வாய், தவழ்வாய்
எழுவாய் - விழுவாய்
என - உன்
அடுத்தடுத்த
தருணங்களை எல்லாம்
தரிசித்திட
தவமிருந்து
காத்திருக்கிறேன்...

உன்
உள்ளங்கையில்
என் விரல்
தொட்டதும்
தொட்டாச் சிணுங்கையாய்
தானாய் மூடிக் கொள்ளும்,
கைகள், தானாக என் விரல்
பற்றி நடந்திடும்
காலத்திற்காக காத்திருக்கிறேன்...!!!

Wednesday, November 12, 2014

என்னோடு பயணியுங்கள் - 2

எனது ஊருக்குச் சென்னையில் இருந்து, முந்திய தினம் இரவு இரயிலில் பயணப்பட்டு அதிகாலை 5 மணியளவில் மதுரையினை அடைந்திருந்தேன். எப்பொழுதும் போலவே அன்றும், எனக்குப் பிடித்தமான "ஷ்ரி வாரி பவனில்" அற்புதமான, சுவையான ஒரு டீயினைக் குடிப்பதற்காக சென்றேன். அங்கு குடித்த தம்ளர்களை வைப்பதற்காக, கடையின் வெளியில் அகன்ற, பெரிய பாத்திரம் வைத்து இருப்பார்கள். மணக்க, மணக்க ஒரு டீயினைக் குடித்துவிட்டு நகர்ந்தேன். அந்தக் கடையினைக் கடந்ததும் "பிரேமா விலாஸ்" கடையிலிருந்து ஒரு குரல் ஒலித்ததுபோல இருந்தது. "அண்ணே, என்னண்ணே, என்னைப் பார்த்தும், பார்க்காத மாதிரிப் போறீங்க" அப்படின்னு அந்த நேரத்தில்கூட சூடாக இருக்கும், கடையிலிருக்கும் அல்வா அழைப்பது போன்ற பிரம்மை. "திரும்ப ஊருக்குப் போகும்போது, கண்டிப்பா வர்ரேன்னு" சொல்லிக்கிட்டு பெரியார் நிலையத்திற்குச் சென்றேன்.

சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு வந்தது "காரியாபட்டி" செல்லும் பேருந்து. அதில் ஏறி பயணப்பட்டேன். பேருந்தில் கூட்டம் ஏதும் இல்லாதிருந்தது. நான் பேருந்தின் கடைசி இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் அந்த தாழ்தளப் (மிதவைப்) பேருந்தின் பின்பக்க தானியங்கிக் கதவினைக் கவனித்தேன். நமது பழையை தமிழ் படங்களில், இறுதிக் காட்சிகளில் கதாநாயகர்களைக் கயிற்றால், இரு கைகளையும் கட்டி வைத்ததுபோல, அந்தக் கதவின் இரு புறமும் பல சுற்றுகள் கொண்ட கயிறு மற்றும் கம்பியால் பிடித்து(பிணைத்து) வைத்து இருந்தார்கள். அட அதுகூடப் பரவாயில்லை, ஒரு கதவின் ஓரத்தில் ஒரு அடி அகலம் மற்றும் உயரம் கொண்ட ஒரு முண்டுக் கல்லையும் வைத்து இருந்தார்கள். அடப் பாவிகளா,  அது சரி,, நம்ம தலையில கல்லத் தூக்கிப் போடாம இருந்தாங்களேன்னு நினைத்துக் கொண்டு சமாதானமாகிக் கொண்டேன்.

வண்டி புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு முன்னால் அமர்ந்து இருந்தவர் "அவனியாபுரம்" என்று சொல்ல அதற்கு நடத்துனர் "அவனியாபுரம் உள்ளே வண்டி போகாது, சுட்காட்டுல இறங்கிக் கொள்கிறீர்களா" என்றார் பட்டென்று, எனக்கு பக்கென்று இருந்தது.

"யேய்... யேய்ய்ய்... என்ன பேசுற, காலங்காத்தால, ஒருத்தன சுடுகாட்டுக்குப் போகச் சொல்றாரேன்னு எனக்கு ஒரே அதிர்ச்சி" சரிதான், சைத்தான் பஸ்-ல வருதுன்னு தோணுச்சு.

ஆனால் எனக்கு முன்னால் இருந்தவர் எந்தவொரு கோபம் கொள்ளாமல், பின்னால் வந்த வண்டியினைக் காண்பித்து, அந்த வண்டி போகுமான்னு கேட்க, அவரும் ஆம் என்று தலையசைத்தார். பின்னர்தான், சுடுகாட்டுக்கருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளதென்று எனக்கு விளங்கிற்று. கொஞ்ச நேரத்துல மனச கலவரப்படுத்திட்டானுவளே...

அடுத்ததாக, மண்டேலா நகரில் இறங்கி, அருப்புக்கோட்டைப் பேருந்தில் பயணப்பட்டேன். உட்காருவதற்கு இடம் கிடைக்காததால், நின்று கொண்டு பயணிக்க வேண்டியதாகியது.

பேருந்தில்

வைகைக் கரை காற்றே நில்லு...
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு...
மன்னன் மனம் வாடுதென்று...
வஞ்சிதனைத் தேடுதென்று...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைப் பார்த்தால்.. நீயும்.. காதோரம் போய் சொல்லு

பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"ஆகா, ஆகா, ஆககாஆ...." எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு என்று மனதிற்குள் பெருத்த சந்தோசம். இத்தனை நாட்களாக, மழை எதுவும் இல்லாமல் வறண்டு கிடந்த வைகையில, இப்பொழுது மழை பெய்து இருப்பதால் இந்தப் பாடலுக்குப் பொறுத்தமாக இருந்தது. இது அரசுப் பேருந்துதானா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. என் சந்தேகத்தை தீர்க்கும்விதமாக, அடுத்த பாடலாக "சோதனை மேல், சோதனை போதுமடா சாமி" ஒலித்தது. இப்பொழுதுதான், இது அரசுப் பேருந்துதான் என்பது உறுதிப்பட்டது. நிற்போர் பலரும், இந்தப் பாடலைக் கேட்டதும் ஒரு விதமான எரிச்சல் கலந்த புன்னகை பூத்தனர். "பாவம், டிரைவருக்கு என்ன சோகமோ?" என்று ஒருவர் முனுமுனுத்தார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், திடீரென இளையராஜா பாடலுக்குத் தாவியிருந்தார்.

ஆவாரம்பூ படத்திலிருந்து ஒலித்தது அந்தப் பாடல்...

அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை....
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

"அப்பப்பா.... அருமைய்யா..." அப்படின்னு ரசித்துக் கொண்டிருக்கையிலேயே அருப்புக்கோட்டை வந்துவிட்டது. இங்கிருந்து, எனது ஊருக்குச் செல்லும் பேருந்து வருவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்தமையால், அங்கொரு டீ சாப்பிட முடிவெடுத்தேன்.

"மாப்ளே...! எதிர் பக்கம் இருக்கும் கடையில டீ நல்லா இருக்கும், அந்த நிறுத்தத்திற்கு அருகிலிருக்கும் கடையில் டீ நல்லா இருக்காது" என்று எனது மாமா சொன்னது ஞாபகம் வந்தது.

அந்தக் கடையில் டீ குடித்த பிறகுதான் தெரிந்தது, அவர் வேண்டாமென்ற கடையில் எவ்வளவு மோசமாக டீ இருக்குமென்று... (இதுவே மிக மோசம், அப்போ அது). டீ சாப்பிட்டு முடிப்பதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது, அதில் ஏறி எனது ஊருக்குப் பயணப்பட்டேன். வழக்கம்போல, "அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரில்தான் அடுத்த நிறுத்தம். இடையில வேற டிக்கெட் இருந்தா ஏறாதீங்க" என்று நடத்துனர் கூவிக் கொண்டிருந்தார். வண்டி சென்றபோது, அவர் எங்கெல்லாம் நிற்காது என்று சொன்னாரோ அங்கெல்லாம் நின்றுதான் சென்றது... "இதுக்குத்தான் அந்தக் கூவலா? எப்பொழுதுதான் இதை மாற்றுவார்களோ?" என்று நொந்து கொண்டே ஊர் சென்று சேர்ந்தேன்.

Tuesday, November 11, 2014

மொட்டைக்கும் முழங்காலுக்கும்

வெகு நாட்களாகவே எனக்கு "மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது" என்றால் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அதற்கு விடை காணவே இந்தப் பதிவினை பதிவு செய்கிறேன். இதைப் படித்துவிட்டு மொட்டை எது? முழங்கால் எது? என்றெல்லாம் கேள்விகள் என்னை நோக்கி வராது என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்.

ஊரிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, பேருந்தில் ஒலித்தது இந்தப் பாடல்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
சென்னை வந்ததும் நோலன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுப் படத்தை பார்த்துவிடுவதென்ற முடிவோடு கிளம்பியிருந்தேன். அது என்னன்னு தெரியல, அவருடைய முந்தைய படமான "Inception"க்கும், இந்தப் பாட்டிற்கும் ஒரு முடிச்சுப் போட வேண்டுமென்று எண்ணம் எழுந்தது.



இவரது இயக்கத்தில் வெளிவந்து பலரது தூக்கத்தையும் கெ(கொ)டுத்த படம்தான் "Inception". இந்தப் படத்திற்கும் இந்தப் பாடலுக்கும் எப்படி முடிச்சுபோடுவதென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் இருக்கும் கயிறு கொண்டு திரித்திருக்கிறேன், பிடித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பாடலின் வரிகளுக்கும், படத்திற்கும் இருக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை - "கற்பனை".

கனவுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் இல்லையென்று நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது, அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்திருப்பார். ஒரு கனவிற்கு கதை திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் "Inception" படம். ஒரு நகைச்சுவைக்கு பாடல் எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...".

சில சமயங்களில் நமக்கு வரும் சில கனவுகள், சம்பந்தப்பட்டவைகளாகவும் சில கனவுகள் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமலும் இருக்கும். அதைபோலவே, இந்தப் பாடல் வரிகளும் அப்படித்தான்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னுயானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டுகதையிலதானே இப்போ காணுது பூமி
"மரபணு மாற்றம்" என்கின்ற பெயரில் விளைவிக்கப்படும் காய்கறிகளை இதற்குப் பேருதாரணமாகச் சொல்லலாம்.
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு...
மொத்தம்... இருபத்து ஆறு...!
இந்த வரிகளைப் போலவே, சிக்கலானதாக "Inception" படத்தின் திரைக்கதையும் இருக்கும். அதாவது, ஒரு கனவிற்குள் சென்று, அங்கிருந்து இன்னொரு கனவிற்கு சென்று அங்கிருந்து மற்றொன்று என்று ஒரு சிக்கலான திரைக்கதையில் படமானது பயணிக்கும். நாம் எடுத்துக் கொண்ட இந்தப் பாடலின் வரிகள்கூட இப்படித்தான் இடியாப்பச் சிக்கலாய், நகைச்சுவையாக இருக்கும்
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா...
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா...
பாடலின் நடுவில் குமரியின் குரலாய் வந்து, கிழவியாய் தரிசனம் தரும் பெண்ணும், இந்தப் படத்தில் உயிராய் உரவாடிய மனைவியின் இழப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது, இந்த வரிகளில் உள்ளதைப் போலவே, நமது கற்பனைகளுக்கு எட்டியபடி, கனவிற்குள் வரும் இடங்களை எண்ணத்திற்கேற்ப கட்டமைத்துக் கொள்ளும்படியான காட்சியமைப்புகள் இருக்கும்.



இவையெல்லாவற்றுகும் முத்தாய்ப்பாக பாடலின் இறுதிக் காட்சியில், கழுதையானது கணைத்துக் கொண்டிருப்பதோடு அந்தப் பாடலானது நிறைவடையும். அந்தப் பாடல் பிடிக்காமல், அது கணைக்கிறதா, அல்லது அவர் அந்தப் பாடலில் சொன்னதெல்லாம் கேட்கச் சகிக்காமல் கணைக்கிறதா? என்பதை காட்சிப்படுத்தியவர் சொல்லியிருக்கமாட்டார். அதைப் போலவே, "Inception" படத்திலும் கடைசிக் காட்சியில் அந்தப் பம்பரமானது சுழன்று கொண்டு இருப்பதோடு நிறைவடையும். அதாவது, அதுவரை நடந்த அனைத்துமே கனவா? படம் முழுவதுமே கனவா? அல்லது எந்தப் பாதிவரை கனவு? என்பதை சொல்லியிருக்கமாட்டார். இதையெல்லாம் நமக்குப் பின்னால்வரும் சந்ததிகள் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று இயக்குனர் அதை நம்மிடமே விட்டுவிடுவார்.

அப்பப்பா, எங்கையோ ஆரம்பித்து ஒருவழியாக முடித்துவிட்டேன். மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்...

மரம் வளர்ப்போம்

சமீபத்திய வனத்துறையினரின் செயல்பாடு மிகவும் பாராட்டுகுறியதாகவே இருக்கிறது. கடந்த வாரம், பள்ளிக்கரனையின் சதுப்பு நிலப் பகுதியில் பூவரசம் மரங்களை சாலையின் ஒரங்களில் நடவு செய்ய முடிவு செய்து அதைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நேற்றைய தினத்தில், தேவையான அளவு மரங்கள் நடப்பட்டு இருந்தன. இன்று பார்க்கையில், அதற்கு சிறிய அளவில் முள் வேலியினை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.

"...பலவகையான தினங்களைக் கொண்டாடும் விதமாக, எங்கேயோ ஓர் மூலையில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன" என்று செய்தியாகக் கேட்டுக் கேட்டு சலித்துப் போன எனக்கு, இன்று நேரில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் போலவே, தற்போது அகன்று விரிந்திருக்கும் நமது தேசிய நெடுஞ்சாலையி(களி)ன் நடுவிலோ அல்லது இரு மருங்கிலோ இவ்வாறான, நமது சூழலுக்குப் பயனுள்ள (மழை மேகங்களை ஈர்த்து மழையினைத் தரவல்லது இந்த பூவரச மரம்) மரங்களை நடவு செய்தால் மிக்க நன்றாக இருக்கும்.

நீங்கள் வசிக்கும் இடத்தில் ஒரு மரம் வளர்க்க இடம் இருந்தால், உங்கள் மனதில் இதற்கென ஒரு இடம் அளித்து, ஏதேனும் ஒரு மரம் வளருங்கள்.

Monday, August 25, 2014

பெயர் வைக்கக் காத்திருந்த கவியே



இரு மெய் சேர்ந்(த்)த
உயிர் மெய்யே;

எம்
மெய் அழுத்தங்களால்,
அழுத்தமாய்
பதிந்த
உயிரே,
உறவாய் வந்த
வரவே;

எம்பால் கொண்ட
அன்பால்,
அன்பால் கொண்ட
களிப்பால்,
பாலுறவு கொடுத்த
பால் உறவே;

தந்தையெனும் உறவைப்
பெற்றுத்துத் தந்த - யாம்
பெற்றெடுத்த
செல்வமே... செல்லமே;

சொந்தமாய் - எம்மிருவரின்
சந்தமாய்
சந்திச் சுவை சேர்க்க இணைந்திட்ட
பந்தமே;

சிப்பியில் உதித்த முத்தே,
எம் பெயர் தாங்கிச் செல்ல,
எம்முள்
தேங்கித் தழைத்த
தளிரே;

மதிபோல் ஒளிரும்
முகம் - உன் அன்னை யின்
அகமோ?

உதட்டோரம்
உதிர்த்திடும்
வினோதப் புன்னகை,
உன் தந்தையின் குணமோ?

பூவினுள் வளர்ந்து
பூவையாய் விளைந்த
பூவே;

ஈரைந்து திங்கள் முன்பே,
பெயர் எழுதப்படாது எழுதி வைத்த,
பெயர் வைக்கக் காத்திருந்த கவியே!!!

Wednesday, August 13, 2014

கொஞ்சு(ச)ம் தமிழ் பேசுவோமா?

நமது தமிழ் நாட்டில் சமீபத்தில் எழுப்பப்பட்ட தன்மானப்பிரச்சனைகளில் ஒன்றான வேட்டி கலாச்சரத்திற்கு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். அதாவது, நமக்கு நாமே அங்கீகாரம் தேடிக்கொள்ளும் அவல நிலையில் நம்முடைய நிலைமை இருக்கிறது. வெகு நாட்களாகவே இதனை பற்றி ஏதாவதொரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்த பதிவு இது.

முதலில் தமிழர்களாகிய நாமே நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என எதையும் நினைத்துப் பார்ப்பது கிடையாது. நம்மை நாமே கிண்டல் செய்வதுதான் அதிகம், குறிப்பாக, இறை வழிப்பாட்டைப் பற்றியும், உடை அலங்காரம் பற்றியும், பொது இடங்களில் தமிழில் பேசுவது கூட இதில் அடங்கும்.

அடுத்த முறை உங்களுக்கு வட மாநிலத்திலிருந்து, போன் வந்தால் அதில் பேசுபவர் எந்த மொழியில் பேசுகிறார் என்று கவனித்துப் பாருங்கள். அவர் முதலில் இந்தியில்தான் பேச ஆரம்பிப்பார். பின்னர் நாம் அவரிடம் "Comfortable in English" என்று சொன்னால் மட்டுமே அவர் ஆங்கிலத்திற்கு தாவுவார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நமது தமிழ் நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் அனைத்தும் (Marketing Calls) எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலத்தில் ஒரு நிமிடம் பட படவென்று பேச ஆரம்பிப்பார்கள். நாம் தமிழில் பதில் சொன்ன பிறகும்கூட சிலர் ஆங்கிலத்திலேயே தொடர்வார்கள்.

இப்படி தொலைபேசி உரையாடல் என்று மட்டும் அல்ல, "தமிழ் தொலைக்காட்சிகள்" என்று பெயரளவில் தமிழைத் தாங்கி நிற்கும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், பலரும் பேசுவது ஆங்கிலம்தான். இதில் விதி விலக்கு என்று பார்த்தால் அது "மக்கள்" தொலைக்காட்சி மட்டுமே. முற்றிலும் மாற்று மொழி கலப்பில்லாது தமிழ் பேசும் ஒரு தொலைக்காட்சி. இந்த வரிசையில் அடுத்து நமது கவனத்தை ஈர்ப்பவை, இப்போது சமீப காலங்களாக தமிழ் பேச ஆரம்பித்திருக்கும் சில ஆங்கிலத் தொலைக்காட்சிகள். இவை தமிழில் ஒளிபரப்ப ஆரம்பித்த பிறகு இதற்கான வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தத் தொலைக்காட்சிகளின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால் அதில், நாம் பேச மறந்த (மறுத்த) பல அழகிய தமிழ் சொற்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்.  அவற்றில் ஒரு சில,

"அந்த மலையின் விளிம்பில் இருக்கும் அந்த இடத்திற்குச் சென்றால், நமக்கு ஏதாவது கிடைக்கும்".
"காலணிகளைக் கலற்றிவிட்டு என்னால் நடக்க முடியவில்லை"

சில நிகழ்ச்சிகளில் எதுகை மோனையில் உரை நடையினை மிகப் பிரமாதமாக அமைத்து இருப்பார்கள்.

"இந்த பிரேசிலின் கடற்கரைக் காட்சி ஒரு சித்திரம், இங்கு நாம் வந்தது சரித்திரம்".

"வீட்டில் மனைவி கரித்துக் கொட்டினால், இந்த இடத்திற்கு வந்து பழங்களை பறித்துக் கொட்டிக்கலாம்"

சரி இதையெல்லாம்கூட விட்டுவிடலாம். இவர்கள் தமிழ் நிகழ்ச்சிகளின்போது, இடையிடையேதான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று. ஆனால், உலகமயமாக்கலில், நமது தமிழகத்தில் பல கடைகளைத் திறந்திருக்கும் அந்நிய கடைகளில் பெரும்பாலும் பணியமர்த்தப்பட்டு இருப்பவர்கள் தமிழ் பேசாதோர்தான் (அறியாதோர்). அந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இது என்ன கொடுமை? அவர்கள் வந்திருப்பது நமது இடத்திற்கு, கடை வைத்திருப்பது நமது இடத்தில், வியாபாரம் செய்வது நம்மிடத்தில். ஆனாலும் அவர்களுக்குத் தமிழ் மொழி தெரிந்திருக்க அவசியமில்லை, வாங்கச் செல்லும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டுமா? இங்கிருக்கும் அனைத்து அந்நிய கடைகளிலும் தமிழ் பேசும் ஒருவராவது வாடிக்கையாளரைக் கவனிப்பதற்கு பணியமர்த்தப்பட வேண்டும்.

பிரபல கறிக்கடைக்குச் சென்றால் அங்கு இருப்பவர் நம்மிடத்தில் கேட்பது என்ன தெரியுமா?

"Dining or Take away Sir?" என்பார்கள். ஏன்டா, சின்ன கடைகளில்கூட, பார்சலுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள், நீங்க ஏன்டா இன்னமும் அதே இடத்துல நிக்கிறீங்கன்னு கேட்கத் தோனுது. இந்தக் கேள்விகளைக் கேட்பது யாரு தெரியுமா,

கவுண்டமணி: உன் பேரு என்ன?
செந்தில்: Sugarcane Thousand
கவுண்டமணி:?!?!

புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இதை, அவர்களது தவறு என்று சொல்ல வரவில்லை, இவர்கள் இப்படியாகவே பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும், நமது மண்ணிற்கு வந்தால், நம்மவர்களின் மொழிக்கே முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பது எனது கருத்து. உள்ளே தமிழில் ஒரு எழுத்தைக்கூட பார்க்க முடியாத இடத்தில், ஒரு தமிழ் வார்த்தையினை எதிர்பார்ப்பது தவறுதான்போலும்.

பிற மொழிகளின் பயன்பாட்டைத் தவிர்க்க முற்படாவிட்டாலும், தமிழ் மொழியினைத் தவிர்ப்பதை தவிர்க்கலாமே.

Wednesday, August 6, 2014

மெய்யினில் மெய்யாய் தந்திட வாராய்

கொஞ்சமாய் சிரித்து
என்னை நிறைய
சிறை பிடித்திட வாராய்...

கொஞ்சமாய் அழுது
என்னை நிறைய
அழச் செய்திட வாராய்...

கொஞ்சமாய் கொஞ்சி
என்னை நிறைய
கெஞ்சிடச் செய்திட வாராய்...

கொஞ்சமாய் அழுக்காகி
என்னை நிறைய
அழுக்காக்கிட வாராய்...

செல்லமாய்,
மெல்லமாய் உதைத்து,
மெல்ல என் இதயம்
தழுவிட வாராய்...

கொஞ்சம்
கொஞ்சும் கைகள் கொண்டு
கொஞ்சமாய் என்
கரம் பிடித்திட வாராய்...

உன் மெய்யினைச் சேரும் என்று
பொய்யாய்,
உன் தாய் வழி
உன்னைச் சேர்ந்திடும்
உனக்காய் நான் தந்த
என் முத்தங்கள் எல்லாம்
உன்
மெய்யினில்
மெய்யாய் தந்திட,
மெய் தரிசனம் தந்து வாராய்...

Friday, August 1, 2014

கலக்கிட்டடா காபி

அலுவலகத்தில்
காபி குடிக்கும் நேரமெல்லாம்
உன் ஞாபகமே - எப்படி
மறப்பேன்?

நேரங்கெட்ட
நேரத்திலெல்லாம் காபி கேட்கும்
என்னை - வாய் மொழியாலேயே
ஆற்றிவிடும் உன்னைப் போலவே - இந்த
காபி மெசினும்
கொக்கரிப்பதால் எப்படி மறப்பேன்...

Friday, July 25, 2014

உள்ளம் கேட்குமே 'more'!

'வேலை தெரிஞ்சவன்டா, வேலை இல்லாதவன்டா...' என்னடா இவன் பாட்ட மாத்திப் பாடுறேன்னு நினைக்கிறீங்களா? நிலைமைக்குத் தக்கவாறுதான பாட முடியும். இப்படித்தாங்க சில நேரங்களில் நமது/எனது நிலைமை இருக்கிறது. கணிணித் துறையில் மட்டுமல்ல, அநேகமாக எல்லாத் துறைகளிலும், தொழிகளிலும்கூட சில நாட்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும்.

நாம அடிச்ச 'code' இவ்வளவு நல்லாவா வேலை செய்யுதுன்னு, சில நேரங்களில் நமக்கே சந்தேகம் வரும் அளவிற்கு, Client-கிட்ட இருந்து ஒரு mail-ம் வராத நேரங்களில் எனது/நமது பொழுது போக்குகளைப் பற்றிய பதிவு இது.

நானும் எவ்வளவு நேரம்தான் வலைதளத்திலேயே சிக்கிக் கொண்டிருக்க முடியும், முக வலைதளத்தில், புதிய பதிவுகளை எதிர் நோக்கி, Refresh பட்டன் அழுத்தி,அழுத்தி அந்த பட்டனே சோர்ந்து போய்விடும் அளவிற்கு பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. சில நேரங்களில் பயங்கர Bore அடிக்கும், சில நேரங்களில் Bore பயங்கரமா அடிக்கும்.

ஆனா இந்த நேரத்துல, "உங்களுடைய சேவை எங்களுக்குத் தேவை" என்று யாராவது வந்து கேட்டுவிட்டால் போதும். "வாயா மகராசா, உன்னைதான் தேடிக்கிட்டு இருந்தேன், இதோ வந்திட்டேன்...' என்று கிளம்பிவிட வேண்டியதுதான்.

Mail-க்கு வேலையில்லாதபோது, சிறிது நேரத்தை பாட்டிற்கும் கொடுப்பது எனது வழக்கம்.

நான் இப்படி நேரத்தினைப் போக்குவதற்காக காதில் Head phone மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அருகிலிருக்கும் மற்றொரு Team-இல் இருப்பவரிடம் பலர் கூடுவார்கள். அதிலிருந்தே தெரிந்து போகும், எதோ பிரச்சனை என்று. அவருக்கு வருவது, கொஞ்சம் இங்கு வந்தால் என்ன என்று மனம் இலேசாக அடித்துக் கொள்ளும். அவர்கள் ஒரே பரபரப்பாக இருக்கும் அந்த நேரத்தில் நான் மட்டும், ஜாலியாக, பாடல் கேட்டுக் கொண்டும், ஏதோ ஒரு வலைதளத்தைப் பார்த்துக் கொண்டும் இருப்பதைக் கவனிப்பார்கள். அப்பொழுது அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் தெரியுமா? நாட்டாமை படத்தில் கவுண்டமணி அவர்கள் கேட்பது போலத்தான் இருக்கும்

"யாருடா இவன், இவ்வளவு அமளி துமுளி நடக்குது, இங்க உட்கார்ந்து இப்படி ஜாலியா பாட்டு கேட்டுட்டு இருக்கான்னு"  நினைத்துக் கொள்(ல்)வார்கள்.

"சத்திய சோதனை. அது ஒன்னும் இல்லீங்க, எங்க Manager-தான், எங்க Project-க்கு 'AD Support' இல்லைன்னு சொல்லிவிடக் கூடாதுன்னு, எனக்கு பில்லிங்க் கொடுத்து இந்த Project-ல வச்சிருக்காங்கன்னு" அவங்ககிட்ட எப்படிச் சொல்வேன்.

இப்படிப்பட்ட நிலைமைகளில், கவுண்டமனி அவர்கள் ஒரு படத்தில், கலயாண வீட்டில், "டேய் யாராவது சண்டைக்கு வாங்கடா" அப்படிங்கிற மாதிரியான நிலைமையில், எனக்கு' "யாராவது ஒரு defect சொல்லுங்க, யாராவது ஒரு Mail அனுப்புங்க' அப்படின்னு உள்ளம் கேட்குமே more.

Thursday, July 24, 2014

விதைக்குதவா விதைகள்

சமீப காலமாக அதிகரித்து வரும் BT ரக விதைகளை பற்றிய பதிவுதான் இது. இந்த வகை ரகங்களிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு புதிய செடியையோ, மரத்தையோ வளர்த்திட இயலாது. இந்த விதைகளை, வியாபாரம் செய்யும் கம்பெனிகளிடம் மட்டுமே இவை கிடைக்கும்.

 

ஆயிரமாயிராய் கனிகள் தரலாம்,
ஆயிரமாயிராய் வணிகம் தரலாம்,
ஆயினும்
ஒரு மரமேனும்
ஒரு செடியேனும்
விளைந்திட
விதை தந்திடுமா இந்த ரகம்?

அதை மாற்றி இதை மாற்றி
அன்னத்திலும் மாற்றம் செய்து,
சோற்றினில் விசம் வைக்க
சேற்றினில் வீசப்படுகின்றன விதைகள்...

அடுத்த தலைமுறைக்கு விவசாயம் இருக்காது,
அடுத்த தலைமுறைக்கு விவாசாயி இருக்க மாட்டார்கள் - என்று
அறுதியிட்டு சொல்லிக் கொள்ளும் வரிசையில்,
'அடுத்த தலைமுறைக்கு
விதைகூட கிடைக்காது' என்ற
வரிகளிலும் சேர்ந்திடுமோ?

விளைந்து வளர ஒரு
விதையேனும்
பற்றிப் படர ஒரு கொடியேனும்
கிடைக்காது போகும்
காலம் முன்னே விழித்துக் கொள்வோம்!

Tuesday, July 22, 2014

ஹே ராம்...

மு.கு: ஹே ராம் - இந்தப் படத்தின்மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பின் நூற்றில் ஒரு பங்கினைத்தான் இங்கே ஒரு துரும்பாகப் பதிவு செய்கிறேன். 'ஹே ராம்' எனும் படத்தினைப் பற்றிய பதிவுகளில் ஒரு துரும்பாகவேனும் எனது இந்தப் பதிவு இருக்க வேண்டுமென்று இந்தப் பதிவினை நான் பதிவு செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும், திருத்திக் கொள்வேன்...

2000 - பிப்ரவரி மாதம், அந்த சமயத்தில் இந்தப் படம் வெளிவந்தது கூட பலருக்குத் தெரியாது. அந்தள விற்குப் படம் பயங்கரத் தோல்வியடைந்தது. அப்பொழுது எங்கள் பகுதியில், புதுப் படங்களைப் பார்க்க வேண்டுமென்றால் வெகுதூரம் செல்ல வேண்டும், என்னால் அப்போது அப்படத்தைப் பார்க்க இயலாமல் போனாலும் அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பிருந்தது. அந்தப் படத்தின் பாடல்களைக் கேசட்டில் பதிவு செய்து அவ்வப்போது கேட்பதுண்டு, அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்குமே தனித்தனியாக பல பதிவுகளை எழுதலாம் உருகி, உருகி... இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட முன்றாண்டுகளுக்குப் பிறகே என்னால் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது.


இந்தப் படத்தினை டீவியில் ஒளிபரப்பினால், பைத்தியக்காரனாய்ப் பார்க்கும் சில ரசிகர்களில் நானும் ஒருவன். படத்தின் நீளத்தைக் கேட்டவுடனே பலரும் படம் பார்க்கும் ஆவலைக் குறுக்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தப் படமானது கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியது.

படத்தின் ஆரம்பக் காட்சியானது, வயது முதிர்ந்த 'சாகேத் ராமின்'  இறுதி கால கட்டத்திலிருந்து தொடங்கும். அவரின் பின்னோட்டமாக நமக்கு முன்னால் படம் விரிந்து செல்லும். ஒவ்வொரு காட்சியிலும் கமலது முயற்சி மட்டுமல்ல, இந்தப் படத்தில் பங்கு பெற்ற எல்லோரது முயற்சியும் தெரியும் அளவிற்கு அத்தனை நேர்த்தியாக படமானது பயணிக்கும். குறிப்பாக அந்தப் படத்திற்கெனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலர், ஆடைகள், இடங்கள், ஆட்கள் என அனைத்தும் அழகாக,ஆழமாக இருக்கும்.. மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் படமானது, சாகேத் ராமின் முதல் மனைவியின், மரணத்திற்கு முன்னும் பின்னும், படுவேகத்தில் பயணிக்கும். அந்த வேகத்திற்கு அணை போட்டு தடுப்பது போல, சாகேத் ராமிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

இதனிடையே இரண்டு பாடல்களைப் படமானது கடந்து வந்திருக்கும், அதிலும் குறிப்பாக,
 நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
 நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
 அயராத இளமை சொல்லும் நன்றி, நன்றி...
ஆகா, எவ்வளவு ஒரு அற்புதமான பாடல். அப்படியே, ஒரு சோக இழை பின்னூட, காதல் ரசம் சொட்ட சொட்ட, விரக தாகம் தவிக்க தவிக்க, இசையினைக் கொட்டி, பாட்டாய் வடித்து... அடப் போங்க ராசா சார், உங்களை இந்தப் பாடல் இசை அமைத்ததற்கு பாரட்ட எனக்குத் தெரியவில்லை என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை... ஒன்றுமில்லை, ஒரேயொரு இசைக் கருவி கொண்டு பட்டையினைக் கிளப்பியிருப்பார்.

முதல் மனைவியின் மரணத்திற்குக் காரணம் அடுத்த மதத்தவர்களே, என்று மூளை சலவை செய்யப்படுவார் மேலும் இதற்கெல்லாம் ஆணி வேர் காந்தியென்றும் துண்டிவிடப்படுவார். பின்னர் காந்தியினைக் கொல்வதற்கும் மூளைச் சலவை செய்யப்பட்டு, அந்தக் கூட்டத்தினரின் சேர்கையோடு படம் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ராம நவமியில், அடுத்ததாக வரும் அந்தப் பாடல்.
இசையில் தொடங்குதம்மா.. விரக நாடகமே,
வசந்தம் கண்டதம்மா, வாழும் வாலிபமே...
ஆனால் படத்தோடு பார்க்கும்போது, அப்படி ஒரு பாடல் வருவதாகவே தெரியாது, அது அந்தப் படத்தோடு ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைத் தனியாகக் கேட்கும்போது, இதற்காக இளையாராஜாவும், இந்தப் பாடலையும் பாடிய அஜய் சக்கரவர்த்தியும் எப்படி இந்தப் பாடலோடு ஒன்றிப் போனார்கள் என்பதை உணர முடியும். எனக்கு, இந்தப் பாடலைப் பாடியவரைப் பற்றிய வேறு விவரம் தெரியாது, ஆனால், இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு உயிரோட்டமாகப் பாடியிருக்க இயலாது. மயக்கும் குரலில், மயங்கடித்திருப்பார் இவர். சில இடங்களில் பாடல் பாடுபவர் இசைக்காகப் பணிந்து போவார், சில இடங்களில் பாடுபவருக்காக இசையானது பணிந்து போகும். குறிப்பாக இந்த வரிகளில்
தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
இசைக்கும் வாயுண்டு என்பது இந்தப் பாடலைக் கேட்டால் புரியும். பிச்சுட்டீங்க ராசா சார்.

இதற்குப் பின்னர் சாகேத் ராம், தனது மனைவியிடமிருந்து பிரிந்து செல்லும்போது ஒரு கடிதம் எழுதி விட்டுச் செல்வார். அந்தக் கடிதம்கூட ஆயிரம் கவிதை சொல்லும், அதிலும் குறிப்பாகக் கடைசி வரிகள்... எப்படித்தான் இப்படியெல்லாம் முடியுதோ
 நீ எனக்கு வாய்த்தது, நான் செய்த புண்ணியம் என்றும்...
 நான் உனக்கு வாய்த்தது நீ என்றோ செய்த பாவம் என்றும் கொள்க...
பின்னர், அவர் தன் பூணூல் அறுத்து, காந்தியினைக் கொல்ல முனைவதும், பின்னர் நடக்கும் மற்றுமொரு மதக் கலவரத்தில் தன் மதத்தவராலேயே, தனது ஆறுயிர் நண்பன் கொல்லப்படுவதைக் கண்டதும் இது நாள்வரை, அடுத்த மதத்தவர்கள் மட்டும்தான் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற எண்ணத்திலிருந்து மாறுபடுகிறார். காந்தியினைக் கொல்லும் எண்ணத்திலிருந்தும் விடுபட்டு அவரிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் முன் காந்தி கோட்சேயால் சுட்டுக் கொல்லபடுகிறார்.

இத்தோடு, படமானது பின்னோட்டத்திலிருந்து நிகழ் காலத்திற்கு மீண்டும் பயணிக்கிறது. அப்போதும் அங்கு கலவரம்தான் இரு பிரிவினருக்கிடையே. நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் சாகேத் ராம், அந்தக் கலவரத்தால், மருத்துவமனை செல்ல இயலாமல் இறந்துபோக, கலவரமும் கட்டுக்குள் வருகிறது. இறுதியாக, அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்துவது தன் நாட்டிற்காகப் பாடுபடும் ஒரு முஸ்லீம் அதிகாரி என்பதை அவரின் பெயர் என்னவென்று சொல்வதோடு அந்தக் கலவரக் காட்சி நிறைவு பெறும். இந்திய ஒருமைப்பாட்டை இதைவிட நாசூக்காகக் காடுவது எப்படி?

படம் முடியும் தருவாயில், அவரது சேகரிப்புகளை, காந்தியின் பேரன் பார்வையிடுவதோடு படம் முடிவடையும், அப்போது அந்தப் பாடலானது ஒலிக்கும், கமலும் அவரது மகள் ஸ்ருதியும் பாடியிக்கும் அந்தப் பாடல்...

... ராம் ராம்... ராம் ராம்
நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு
அன்பெனும் ஓர் சொல் இது
ஆத்திகம் சொல் இன்பமாய்
இங்கே யாரும் இல்லையே

Monday, July 21, 2014

உன் குத்தமா? என் குத்தமா?

சில பொருட்கள் வாங்குவதற்காக அருகிலிருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்குச் சென்றிருந்தேன், அநேகமாக பல சூப்பர் மார்க்கெட்டுகளிலும் MRP விலையினை விடக் குறைவாக விற்பது கிடையாது. வெகு சிலப் பொருட்களை மட்டுமே அவர்கள் குறைத்து விற்பார்கள். அந்தப் பொருட்கள் என்னவென்று அறிந்து வாங்குவது என் வழக்கம். மற்ற பொருட்களை எங்கள் பகுதியிலிருக்கும் சிறிய கடையிலேயே வாங்கிக் கொள்வேன்.

அன்றும் அப்படித்தான், சரி வெளியில் செவ்வாழை 15 ரூபாய் அளவில் விற்பதால், இங்கு என்ன விலையென்று பார்க்கலாம் என்று தேடினேன். அப்பொழுதான் பழ வகைகள் எல்லாம் வந்து கொண்டிருந்தன. எனவே, அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணிடம், "செவ்வாழை இருக்கா?" என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண், "என்னண்ணா?" என்றார். நானும் "செவ்வாழைப் பழம் வந்திருச்சா?, எங்க இருக்கு?" என்றேன். உடனே அவர், அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணிடம், "ஏண்டி, செவ்வாழைன்னா, என்னது டீ" என்று கேட்க, அவரும், "அதான்டீ 'Red Banana' என்று சொல்லிக்கொண்டே என்னிடம் "அதானண்ணா?" என்று கேட்க நானும் ஆமென்று தலையாட்டினேன்.
அவர் கேட்டது எனக்கு "STD-ன்னா வரலாறுதான?" என்பதுபோல இருந்தது. :(
கடைக்கு முதலாளியாய் இருக்கும் அந்த அம்பானிக்கு செவ்வாழையென்றால் என்னவென்றுத் தெரிய வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இது அவரது மொழியல்ல. ஆனால் கடையில் வேலை செய்யும் நமது இந்த அம்மணிக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

எனக்குத் தமிழில் சில வார்த்தகளைப் பேசுவது, சொல்வதென்றால் அவ்வளவு பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையும், வாழை ரகத்தில் ஒன்றுமான செவ்வாழையினை என்னவென்று தெரியாத அவரை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. சச்சினைத் தெரியாதுன்னு சொன்ன மாதிரி இதுவும் நமக்கொரு/எனக்கொரு பெரிய பிரச்சனையாகவேபட்டது.

மனதுக்குள்ளே 'உன் குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல' என்ற பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது.

Friday, July 18, 2014

ரிசல்ட் எப்போ வரும்? ...வருமா?

மூன்று தினங்களுக்கு முன்பு (15-07-2014), அதிகாலை(?) சரியாக 6.45 மணிக்கு என்னுடைய அலைபேசியில் நான் ரிங்க் டோனாக வைத்திருக்கும் பாடல்களில் ஒன்றான, காதல் பரிசு படத்திலிருந்து அந்தப் பாடலின் இசை ஒலித்தது "ஏ..ய்.. உன்னைத்தானே..... ஏ..ய் உன்னைத்தானே"... மறுமுனையில் அழைத்தது எனது நண்பன் ரமேஷ்.

கால் அட்டென்ட் செய்து அந்த செல்போனை, எனது காதுகளில் படுக்க வைத்துக் கொண்டே"சொல்றா" என்றேன்.

ரமேஷ்: "என்னடா தூங்குறியா?"
நான்: "ம்ம்ம்... இல்ல... -----" சென்சார் கட்.
தூங்குறவன நடுவுல எழுப்புறவனக்கூட விட்டுறலாம், ஆனா, எழுப்பி விட்ட பிறகு "என்ன தூங்குறியா?"ன்னு கேக்குறவன மட்டும் விடக் கூடாது. அதாவது, "தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு". இங்கு வள்ளுவர் புண் என்று 'எழுப்புவதையும்', வடு என்று "தூங்குறியா?"ன்னு கேட்பதையும் குறிப்பதாக சொல்கிறார் என்று நாம் கொள்ளவேண்டும்.
ரமேஷ்: "சரி, தம்பி, எங்க அக்காவுக்கு "TRB Result" பார்க்கனும், உடனே பார்த்து சொல்லு"
நான்: " 'TRB யா? அப்படின்னா?"
ரமேஷ்: "TRB - Teachers Recruitment Board. வெப் சைட் அட்ரெஸ் சொல்லவா?" (Apprentice -- a.. p.. p. அந்த மாதிரி இருந்தது)
நான்: "அதெல்லாம் வேண்டாம், நான் பார்த்துட்டு சொல்றேன்". 'எல்லாம் அந்த 'Google' இருக்கானே அவன் பாத்துக்குவன்னு நினைச்சிக்கிட்டேன்'.
ரமேஷ்: "டேய், தூங்கிறாத..." மறுபடியும் அழுத்தினான்.

நான் "சரிடா, சரிடா"ன்னு சொல்லிட்டு அப்படியே, செல்போனை காதுல வச்சிட்டே தூங்கிட்டேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கழித்து, "டேய், சோனமுத்தா, எந்திரிடா,எந்திரி"ன்னு என்னுடைய உள்ளுணர்வு எழுப்பிவிட்டது. எழுந்து சென்று லேப் டாப் எடுத்துவரச் சோம்பேறிப்பட்டுக் கொண்டு, மொபைலிலேயே பார்க்க முயற்சித்தேன்.

அந்த தளத்திற்கு சென்றால், எல்லாம் பழைய ரிசல்ட்டாகப் பட்டது. கண்ணுக்குத்தெரிந்தவரை, 2014ஐப் பார்க்க முடியவில்லை. சரியென்று, கடந்த ஆண்டாக இருக்கக்கூடும் என்றெண்ணி, 2013 என்று குறிப்பிடப்பட்ட "Link"ஐ கிளிக் செய்து உள்ளே சென்றால் ஒன்றும் வரவில்லை. 'சரி, இது வேலைக்காகாது என்றெண்ணி எனது லேப்டாப்பை எடுத்து வந்து, அமர்ந்து தேடத் தொடங்கினேன்.

எப்படியோ ஒருவழியாக மதிப்பெண் பட்டியல்வர, அவனுக்கு போன் செய்து விவரம் சொன்னால், அவன் சொன்னான் "டேய், அது போன வருச ரிசல்ட்". அதுக்கு நான் சொன்னேன், "டேய், வேற எதுவும் 2014ன்னு போட்டு ரிசல்ட் இல்லடா". உடனே அவன் சொன்னான், "அடப்பாவி, அந்த தளத்தில், 'Direct Recruitment of B.T. Assistant 2012-2013 இருக்கான்னு பாரு' என்றான்.

நான்: "ஆமாடா, இருக்கு, ஆனா 2012ன்னு இருக்கே".
ரமேஷ்: "அதுலதான், பார்த்துச் சொல்லு"

சரியென்று அதில் சென்று, அவனுக்கு விவரத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு போனை வைத்தேன். 2012க்குப் பிறகு, 2013, 2014ன்னு ரெண்டு வருசம் வந்திருச்சே. 2012க்கே இப்போதான் ரிசல்ட் வருதுன்னா, இந்த வருசத்துக்கு எப்போ வரும்னு ஒரு நிமிடம் மலைத்துப் போய்விட்டேன். ...இந்த வேகத்துல போனா விளங்கிடும்... ரிசல்ட் எப்போ வரும்? ...வருமா?

Thursday, July 17, 2014

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை-2

நான்கு நாட்களாக, "Online"-இல் எனது "Account"லிருந்து தவறுதலாக கழிக்கப்பட்ட பணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன், இன்னும் வந்தபாடில்லை. எது எதற்கோ கட்டுப்பாடும், விதிமுறைகளும் வரையறுக்கிறார்கள். இந்த மாதிரியான, பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஏன் தெளிவான, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளை விதிக்கக்கூடாது. அவர்களுக்கு பணம் செலுத்துவது மட்டும், சில நிமிடங்களில், ஏன் சில நொடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால், அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால், அந்தத் தவறானது அவர்களுடையாதாகவே இருந்தாலும் (உதாரண்மாக "Server" பழுதடைவது) நமக்குத் திருப்பித் தருவதென்றால் பல நாட்கள் இழுத்தடிப்பது.
இதில், நாம் "Online"-இல் பேருந்துக்கு முன் பதிவு செய்யும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், நமக்கு வரும் பதில் என்ன தெரியுமா? "இன்னும் 21 பணி நாட்களுக்குள் உங்களது பணம் உங்களது "Account"-இல் திரும்பச் செலுத்தப்படும்" என்பதுதான். அடப்பாவிகளா?, என்னடா இது கொடுமை?

ஒருவேளை, நமது "Account"-இல் இருப்பதே ஒராயிரம்தான் என்கிறபோது, அத்தகைய சூழலில், வேறேதேனும் டிக்கெட்டினை நம்மால் பதிவு செய்ய முடியாமலே போய்விடும் அல்லவா? அந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒருவேளை நாம் அவர்களைத் தொடர்பு கொண்டால் அதற்கு அவர்கள், "எங்களது பக்கத்தில் இருந்து நாங்கள் உங்களது பணத்தினை திரும்பச் செலுத்துவதற்குத் தேவையானதைச் செய்துவிட்டோம், அது உங்களது "Account'-இல் வருவது உங்களது வங்கியினைப் பொறுத்து" என்பார்கள். அப்படியென்றால், அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தப் பணமானது எங்கு செல்கிறது. எது எதற்கோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள், இதற்கும் தொடர்ந்தால் தகும். இதற்காக ஒரு "" நாம் பதிவு செய்தால் நமக்குத் தகவல் கிடைக்குமா என்பது சந்தேகமே?
"Low Speed Internet"-ல கூட "Ticket book" செய்து விடலாம். ஆனால், நம்முடைய பணத்தை திரும்பப் பெற "High Speed Internet" வச்சிருந்தாலும் முடியாது. :)
இப்பொழுது நாவல் பழம் சீசன் என்பதால், அநேகமாக எல்லாப் பழக் கடைகளிலும் இந்தப் பழங்களைக் காண முடிகிறது. இன்றைய பழங்களைப் பார்த்தால் எதோ அந்த நாவல் பழத்திற்கு "obesity" வந்தது போல இருக்கின்றன. ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு, இரட்டைக் குழல் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டவினைப் போலவே தோற்றமளிக்கின்றன. அதிலும் குறிப்பாக எந்தவொரு பழமும் அழுகிய நிலையில் இருப்பதில்லை (எத்தனை நாட்கள் ஆனாலும் இப்படியேதான் இருக்குமோ?) "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதற்குப் பொறுத்தமாக இந்தப் பழங்களைச் சொல்லலாம். ஆமாம் இப்பொழுது வருவெதல்லாம் முற்றிலும் மரபு மாற்றப்பட்ட நாவல் பழங்களே, எனக்கு அதில் என்னென்ன தீமை இருக்கிறது என்றெல்லாம் தெரியாது, ஆனால் கண்டிப்பாக சுவை கிடையாது. இப்படியே இதனை நாம் தொடர்ந்து ஊக்குவித்தால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பெரிய மஞ்சள் வாழைப் பழம் தமிழகத்தில் வேரூன்றிய நிலைதான் இந்தப் பழத்திற்கும் ஏற்படும்.

ஆடி மாதம் ஆரம்பமாகிவிட்டது, அந்தத் தள்ளுபடி, இந்தத் தள்ளுபடியென்று ஆளாளுக்கு விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், உண்மையான தள்ளுபடி எதுவென்று சில-பெரு நிலக் கிழார்களைக் கேட்டால் விளங்கும். வருடா வருடம், ஆடித் தள்ளுபடி வேண்டுமென்றால் பொய்த்துப் போகலாம், ஆனால், விவசாய்க் கடன் தள்ளுபடி மட்டும் பொய்த்துப் போகாது. என்ன செய்வது, உதவி, உண்மையில் தேவைப்படுகின்ற ஒரு விவசாயிக்கு உதவ வேண்டுமென்றால் 10இல் 9 பேருக்கு தாராளம் காட்டித்தான் ஆகவேண்டும். விவசாய நிலங்களுக்கு, மின்சாரம் இலவசமாகக் கிடைக்கின்றது. கிணற்றுத் தண்ணீருக்கு மோட்டார் பொருத்திக் கொள்ள மானியம் கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் இலவசங்களையும், மானியங்களையும் பெற்றுக் கொள்ளும் சில பெரு நிலக் கிழார்கள், அந்தத் தண்ணிரை வயலுக்குப் பாய்ச்சுகிறார்களோ இல்லையோ, அதை விற்றுக் காசாக்கிவிடுகிறார்கள்.

எல்லாம் பண மயமாகிவிட்ட இந்தச் சூழலில், ஏதாவது ஒன்றை நாம் சந்தைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது அதைப் பற்றிய விளம்பரம். அவர்களது நிகழ்ச்சி முதல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் வரை, எல்லாத்தையுமே விளம்பரம் செய்யும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும்போதே இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். "Welcome back to ... Presents.. Co-presented... powered by..." அப்பப்பா தாங்கமுடியல, நிகழ்ச்சிக்கு இடையில் வந்து சென்ற விளம்பரங்களிலிருந்து மாறி, விளம்பரத்திற்காகவே நிகழ்ச்சி என இன்றைய நிலையானது மாறிவிட்டது. "Marketing boss, marketing... Packaging boss packaging..."

சில தொலைக்காட்சிகளில், "Hidden Camera" வைத்துக் கொண்டு பொது மக்களைக் கலாய்த்துக் கொள்வதைப் பதிவு செய்து, பின்னர் அதை "Edit" செய்து மொக்கை வாங்கியவர்கள் எனத் தனித்தனியாக பிரித்து அதற்கெனெ "Music" கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். எதுவும் அடுத்தவர் மனம் புன்படாதவரைப் பிரச்சனையில்லை. இது தற்போதெல்லாம் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. உதாரணமாக ஒரு நிகழ்வு " நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒருவர், வழியில் வரும் ஒருவரிடம், அவர் அவசரமாக "Phone" செய்ய வேண்டுமென்று அவரிடம் "Phone"-ஐப் பெற்றுக் கொண்டு பின்னர் யாருக்கோ "Phone" செய்து அவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். அவனவன் ஆயிரத்தெட்டு வேலையாகச் செல்லும்போது, அடுத்தவருக்கு உதவவேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் கொடுத்து உதவினால், இது போன்ற மொக்கையர்கள், அவர்களை மொக்கையாக்கினால், பின்னாளில் உண்மையாகவே எவரேனும் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அவர் ஒரு கணம் யோசிக்கத்தானே செய்வார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் தகும். (இதையே அடிப்படையாக வைத்து பார்த்திபன் அவர்கள் "குடைக்குள் மழை" எடுத்தது அனைவரும் அறிந்ததே).

வருடா வருடம் சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மனது, மற்ற விலைவாசிகளின் விலை உயர்வினை மட்டும் குற்றம் சொல்வது எதனால் என்பது விளங்கவில்லை. விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மா நில அரசுகளின் கடமைதான். ஆனால், இந்த அரசுகளின் கட்டுப்பாடுகளில் இல்லாத, தவிர்க்க முடியாத சில,பல காரணங்களுக்காக விலை உயர்த்தப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ரயில் கட்டணம் உயர்ந்த அதே வேளையில்தான், இரயில்வே ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கும், இங்கிருந்து எடுத்து அங்கே கொடுப்பதுதான். "எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவராகிறது". இதுக்குப் பேருதான் போட்டு வாங்குறதோ?.


அது என்னன்னு தெரியல, "Visibility" இந்த வார்த்தை என்னுடைய காதுகளுக்கு எட்டும்போதெல்லாம் எனக்கு கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்தக் காட்சிதான் நினைவில் வந்து செல்கிறது.

"....அதுவும் அந்தத் தவில்காரர் காதுல விழுற மாதிரி சொல்லு..." (இப்போ நினைச்சாலும் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது)

ஆடி ஒன்னு

...என் தாத்தாவின் நினைவாக இந்தப் பதிவு...



இன்னாரின் பேரன் என்று,
உன் பெயரை முன்னிறுத்தியே,
ஊரார்க்கு அடையாளப்படுத்தப்பட்டோம்...

நம் பரம்பரையின் - கோவணம்
தாங்கிய கடைசி வாரிசு நீதான்,
கடைசியாய் ஏர் கொண்டுழுதவனும் நீதான்...

உன் ஆயுள் முடியும் முன்னே,
எம்மை ஆயுள் கைதியாக்கி,
மாலையும் கழுத்துமாய் பார்க்க தீராத
ஆசை கொண்டாய் - உனக்கென்ன
அவசரமோ, மாலையினை
உன் உடல்மேல் சூட ஆசைகொண்டு,
உறங்கச் சென்றாயோ
உறவுகள் விட்டு,
உடல் விட்டு,
மண் தொட்டு விண் தொட - எம்
கால்கட்டுப் பார்க்காமல்,
கால்கட்டிச் சென்றாயே...

ஆண்டு ரெண்டு
ஆகிப்போச்சு,
ஆடி ஒன்னில் ,
ஆக்கி வைத்த
ஆட்டுக் கறி நீ தின்னு
ஆழ்ந்த உறக்கம் சென்று,
ஆடியில் ஆடித்தான்போனோம்,
ஆனபோதும் மனம்
ஆர்ப்பரிக்கிறது உனை மீண்டும் காண
ஆசை கொண்டு...

Tuesday, July 15, 2014

விளையாத விலை


வான் பார்த்து,
மண் பார்த்து, நல்
விதை பார்த்து,
விளைந்துவரும் பயிர் பார்த்து,
வீணாய் வளர்ந்திடும்,
களை பெயர்த்து,
காலம் பார்த்து அறுத்த
கதிர்களை - நல்
களம்
பார்த்து பயிர் பிரித்து - இங்கனம்,
பார்த்துப் பார்த்து
விதை வைத்து
விளைவிக்கத் தெரிந்தவனுக்கு,
விலை வைத்து
விற்கத் தெரியவில்லையே...

Monday, July 14, 2014

உயிர் மெய்யின் கற்பனையாய்


புது வரவான,
உறவினை வரவேற்க - பழைய
உறவுகளுக்கெல்லாம்,
தலைமுறை தழைத்ததென,
தகவல் சொல்லி
வந்தோரெல்லாம்,
வயிற்றில் நத்தையினைபோல்,
சுமை கொண்ட உன்
கைகளில் மேலும்
சுமை சேர்த்து - சொல்லாமல்
வந்தவர்கூட சொல்லிக்கொண்டு
செல்ல - சாங்கியமாய் நீ மட்டும்,
சொல்லாது சென்ற அந்த நாள் முதல்,
பசலை நோய்கொண்டு,
தனிமையில் நாம்
தனித்திருந்த நாட்களையெல்லாம் - இன்று
நான் மட்டும் தனித்திருந்து,
நாம்
கூடிக் கழித்த அந் நாட்களையெல்லாம்
கூட்டிக்கழித்து,
எந்நாள் உன்முகம் காண்போம் என்று,
நாட்காட்டி கிழித்துப் பழகி,
முபோழுதும்
உயிர்மை தாங்கிய,
உயிர் மெய்யின் கற்பனையாய் இருக்கிறேன்...

Tuesday, July 8, 2014

உதிரிக் கவிகள்


என் 'இதழ் பிடித்த' கவி,
என் இதழில் படிந்த கவி,

படிக்கின்ற இதழ்கள்-
பிடித்திட்ட கவி,

பிடித்திட்ட விரல்கள்
பற்றிய கவி,

பற்றிக் கொண்ட
நெஞ்சங்களின் கவி,

நெஞ்சங்களின்
நெஞ்சார்ந்த
மோகங் கொண்ட கவி,

மோகத்தில் தாகம்
தணித்த கவி,

தணிந்தும்
தணியாதிருந்த
கூடல் கொண்ட கவி-எனக்

கவியணைத்தையும் சேர்த்திட்ட,
உதிரிக் கவிகள்...

Thursday, July 3, 2014

உச்சத்தின் மிச்சம்


அந்திப்போர்
அன்றாடம் புரிந்து,
அன்றென்றும் இறவாத
ஆசையில்,
அன்றென்றும் பிறவாத
சலிப்பினில்,
இழந்தும் பெற்ற,
பெற்றும் இழந்த
களிப்பினில்,
கல்விகொண்டு கற்காத
கலவியினை,
மோகத்தில் கொஞ்சம்,
தாகத்தில் கொஞ்சம்,
நெஞ்சங் கொண்ட
காதலில் கொஞ்சம்,
அங்கம் கொண்ட
காமத்தில் கொஞ்சம்-என
கலந்துண்டு கற்று,
முதுநிலை தொட்டு,
சந்திப்(பு) பிழையில்லாது,
அந்திப்போரின் அந்தமாய்,
அங்கப் பிணைவின்
அங்கமாய்,
உச்சத்தின் மிச்சம்,
தங்கப் பேழையில்,
தங்கித் தழைத்ததென்ற
தகவலில், மனம்
தங்கித் திளைத்திட்டது...

Tuesday, July 1, 2014

நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க-III

"நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க" - இதன் மூன்றாவது (III)  பாகத்திற்கு இந்தப் பதிவு மிகப் பொறுத்தமாக இருக்குமென்பதால், இதனை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். பிரம்ம முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த அந்த இளங்காலைப் பொழுதில், நானும் எனது நண்பன் சுப்ரமணியும் கீழ் திருப்பதியிலிருக்கும் அலிபரியிலிருந்து மேல் திருப்பதிக்கு மெல்ல மெல்ல வேகமெடுத்து படியேறிக் கொண்டிருந்தோம். காலை நான்கு மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிட்டது எங்களது இந்த பாதயாத்திரை. ஆங்காங்கே இருந்த சில சுவாமி சிலைகளுக்கு அருகில், சிலர் ஆரத்தித் தட்டுக்களை வைத்துக் கொண்டு இருந்தனர், சிலர் அவர்களிடம் சென்று திலகமிட்டுக் கொண்டு காசுகளை இழந்து வந்தனர். அதுதான் நாங்கள் முதன் முதலாக, திருப்பதிக்கு கீழிருந்து நடந்து செல்வது. எத்துனை தூரமென்பதும் தெரியாது, எத்துனை படிகள் என்பதும் தெரியாது.
தெரியாமல் ஒரு செயலில் நாம் இறங்கும்போது, அது எப்போது நிறைவு பெறும் என்ற கேள்வியானது நமது முதுகில் ஏறிக் கொண்டுவிடும். அன்று மலையேறும்போதும் இந்தக் கேள்வியானது எங்களது முதுகில் ஏறிச் சவாரி செய்தது. 
ஆரம்பத்தில் வேகமெடுத்த எங்களது கால்கள் சிறிது நேரத்திற்கெல்லாம், "இதெல்லாம் உனக்குத் தேவையா" என்பது போல, வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், பத்து நிமிடங்கள் நடந்தும் சில நிமிடங்கள் உட்கார்ந்தும் சென்று கொண்டிருந்தோம். ஒரு வழியாக 500 படிகளைக் கடந்து விட்டோம், பின்பு வந்த வரலாற்றை எங்களது கைப்பேசிகளில் படங்களாகப் பதிவு செய்து கொண்டோம். சரி, இன்னும் 500 அடி தூரம்தான் இருக்குமென்று எங்களுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடங்கினோம். கிட்டத்தட்ட 750 அடிகள் கடந்ததும் நாங்கள் மிகவும் கலைத்துவிட்டோம். பின்னால், திரும்பிப் பார்த்தால், கீழ் திருப்பதியானது, வெள்ளியினைப் பூமியில் கொட்டியது போல மின்னிக் கொண்டிருந்தது. முன்னோக்கிப் பார்த்தால், படிகள் எல்லாம் வளைந்து,உயர்ந்து சென்றது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை, அதன் முடிவு தெரியவில்லை.

மெதுவாக மனதினைத் தேற்றிக் கொண்டு, மெது மெதுவாக பயணத்தைத் தொடங்கினோம். திடீரெனெ, முன் சென்ற பலரும் வேகமெடுத்தனர், "ஆகா!, நெருங்கிவிட்டோமென்ற" மகிழ்ச்சியில் நாங்களும் வேகமெடுத்தோம். அங்கே, அனைவரும் டிக்கெட் கொடுக்கும் இடத்தினை மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள். சிலர், தண்ணீர் குடித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்களும் வேகமாகச் சென்று வரிசையில் நின்று எங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டோம். பிறகுதான் தெரிந்தது, இந்த இடத்திலிருந்து (காளி கோயில்) இன்னும் பல மைல்கள்கள் செல்லவேண்டுமென்று., அப்போது மணியானது ஆறினை நெருங்கிக் கொண்டிருந்தது.

காளி கோயிலைத் தாண்டும்போது, நீண்ட வரிசையில் பல உணவகங்கள் இருந்தன, எல்லாம், திரைச் சீலைகளையும், தார்ப்பாய்களையும் மேல் தளங்களாகக் கொண்டிருந்த, திறந்த வெளிக்கடைகள்தான். அங்கே, அநேகமாக எல்லாக் கடைகளிலும், ஆவி பறக்க இட்லி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆவி பறக்கும் இட்லியினைக் கண்டவுடன், வயிறு கிறங்க ஆரம்பித்துவிட்டது. சரி, அப்படியே சில பல இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டுச் செல்ல முடிவெடுத்து ஒரு கடையினில் நுழைந்தோம், மன்னிக்கவும் அமர்ந்தோம்.

என்ன விலையென்றெல்லாம் கேட்காமல் 'இட்லியென்று' மட்டும் சொல்லிவிட்டு காத்திருந்தோம். உடனே, இட்லிக் கொப்பறையிலிருந்து இட்லிகளைச் சூடாகக் கொண்டுவந்து தந்தார்கள். அதைக் கைகளில் வாங்கியதும் முதல் அதிர்ச்சி, இட்லி இந்த நிறத்திலும் இருக்குமாவென்று, இலேசாகக் கருத்து இருந்தது. மெதுவாகச் பிய்த்துப் பார்த்தால், மற்றொரு அதிர்ச்சி, இட்லி இப்படியும் கட்டியாக இருக்குமாவென்று. சரியென்று சாப்பிட்டால் அடுத்த அதிர்ச்சி, உவ்...உவ்வ்வ்வ்வே வென்று சுவையிருந்தது. சரி, ஏதாவது ஒரு இட்லியாவது நன்றாக இருக்கிறதாவென்று பார்க்க நான்கு இட்லிகளையும் சுவைத்துப் பார்த்தேன். எல்லாம் சொல்லிவைத்தாற்போல, கேவலமாக இருந்தது.
இந்த இட்லியில் நிறமில்லை,
நிறமிருந்தால் மெலிதாய் இல்லை,
மெலிதாய் இருந்தால் சுவையில்லை...
"இன்னிக்கு இவய்ங்களா?, சரிதான்" என்று சலித்துக் கொண்டேன். அருகில் என் நண்பன், பொதுவாக உண்வை வீணாக்க விரும்பாதவனென்பதால், இட்லிகளை மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் கவனித்தோம், அவர்கள் எப்படி இட்லி செய்கிறார்கள் என்று. மாவினை ஊற்றி வைத்துவிட வேண்டியது, பின்னர், யாராவது வரும்வரை, அதை அப்படியே அடுப்பில்விட்டுவிட வேண்டியது, எவரேனும் வந்தபிறகு, அல்லது கூட்டத்தாரைக் கண்டவுடன், அவர்கள் கண் முன்னால் சூடாக இருக்குமாறு ஆவி பறக்க எடுத்துத் தருவது. மேலும், அடுத்து ஒரு கூத்து நடந்தது. வெளியிலெடுத்த இட்லிகளை மீன்டும் இட்லி சட்டிக்குள் வைத்து வேக வைத்தார்கள். "அடப் பாவிகளா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?".
நண்பன் சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பினோம், எங்களுக்கு உள்ளூர மிகவும் கடுப்பாக இருந்தது, சரி இதுவும் ஒரு அனுபவம்தானென்று தேற்றிக்கொண்டோம்.

பின்னர் மணி ஏழினைத் தாண்டியபோது, டீ சாப்பிட முடிவெடுத்து ஒரு டீக்கடையில் நின்றோம். அந்தக் கடையில் டீ பாய்லருக்கு முன்பாக, பெரிய சட்டியில் இஞ்சியினை அடுக்கி வைத்து இருந்தார்கள். "இஞ்சி டீ போடுங்க" என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். எங்களுக்குத் தெரிந்தவரை அவர் இஞ்சியினைத் தட்டி, சட்டியில் இட்டதுபோலவே தெரியவில்லை, ஆனாலும் டீ வந்துவிட்டது.

குடிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் அதில் இஞ்சியினைப் போடவேயில்லையென்று. இஞ்சியினை மட்டுமா, டீத்தூள் கூடப் போடாததுபோலத்தான் இருந்தது. ஆக, வருபவர்களைக் கவருவதர்காகத்தான் இவர்கள், நம் கண்களைக் குருடாக்கி கட்சி பிழைகளை ஏற்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள்.


நீங்கள் யாராவது, திருப்பதிக்கு ந்டந்து செல்வதென்றால், இதுபோன்ற கடைகளில் ஏமாந்துவிடாதீர்கள். நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க...


பி.கு: இப்பொழுது இதே போன்றதொரு கண்கட்டு வித்தைகளை நமது மெரினா கடற்கரை டீக் கடைகளிலும் பார்க்கலாம். பெரும்பாலும், எல்லோரது கடைகளிலும் கடைக்கு வெளியே அனைவரது பார்வைக்கும் படும்படி, "1 கிலோ ப்ரூ பாக்கெட்" வைத்து இருக்கிறார்கள். நான், ஏற்கனவே ருசி கண்ட பூனை என்பதால், அந்தக் கடைகளைத் தவிர்த்துவிட்டேன், யாருக்காவது இந்தக் கடைகளில் அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Friday, June 27, 2014

It-அதுBut-ஆனால்What-என்ன?

தமிழ் சொற்கள் தற்போதைய தொழில் நுட்பத்தை, எவ்வாறு இணைக்கின்றன என்ற என் கேள்விக்குப் பதிலாய் பிறந்தது இந்தப் பதிவு,


கவிதை - ZIP Files
கட்டுரை - UnZip Files
களவும் கற்று மற - Temple Run App
கற்றது கையளவு - Smart Phone

உழுதுண்டு வாழ்வாரே - Hay Day App
உடையது விளம்பேல் - Don't share your ATM Pin with others

சொன்னைதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை - Talking Tom App
யாதும் ஊரே யாவரும் கேளீர் - Roaming Free

Wednesday, June 25, 2014

செத்துப் பிழைப்பவன்


நொடியினில் பிறந்து,
நொடியினில் வாழ்ந்து,
நொடிகையில் பிரசவித்து,
நொடிதனில் நொடிந்திடும்,
நொடிக்கு நொடி செத்துப் பிழைத்திடும்,
இறக்கையில் பிறந்திடும் நொடியே...

Tuesday, June 24, 2014

தூக்கம் எரிந்த இரவு


அன்றொரு நாள் இரயில் பயணத்தில்,
மணி இரவு பத்தினை நெருங்கிய வேளையில்,
அவரவர் இருக்கைகளில் - அவரவர்கள்,
அரைநாள்
அமரராகத் தயாராகிய வேளையில்,
ஏற்கனவே எனக்கென
ஒதுக்கப்பட்ட தாழ்தளப் படுக்கையினை,
உயர்வயதுப் பயணிக்கு
ஒதுக்கிவிட்டு,
அப்பொழுதான் உணவுண்ண
ஆரம்பித்த அந்தப் பெரியவர்களுக்கு மத்தியில்,
நடுத் தளத்தினை எழுப்பி,
நான் துயில்கொள்ள
நடு நிசியாகிவிடுமோவென்று,
எம் பகுதியில் மட்டும்,
எம்மையே வெறித்துப் பார்த்தபடி
எரிந்துகொண்டிருந்த விளக்கோடு,
என் தூக்கமும் எரிந்து கொண்டிருந்தது...

Monday, June 23, 2014

இதையெல்லாமா எழுதுவாய்ங்க?


முன் குறிப்பு: இந்தப் பதிவானது உங்களுக்குள்ளேயே இருக்கட்டும், வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம், படித்தவுடன் மனதிலிருந்து அழித்து விடவும்.

சில நேரங்களில் ஒரு கட்டுரை அல்லது ஒரு நிகழ்வினைப் பற்றி எழுதும்போது, நமக்கு சில சந்தேகங்கள் வந்துவிடும் இதைப் பற்றி நாம் எழுதலாமா வேண்டாமா என்று? இதை எழுதினால், யாராவது கவனிப்பார்களா? அப்படியே கவனித்தாலும் இது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்குமா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் மனதிற்குள் எழும். எனக்கும் அப்படித்தான் இந்த பதிவினை எழுதும் முன், மிகப் பெரிய விவாதமே என் மதிற்குள் நடந்துவிட்டது. ஒரு வழியாக, இந்தக் கேள்விகளையெல்லாம் சரிகட்டிவிட்டு எழுத ஆரம்பித்தேன்.

"காற்றுக்கும், கருத்துக்கும்தான் வேலியே இல்லை என்று", இதனை எழுதியேதீர வேண்டுமென்று, எழுதுவதற்கு முன்பிருந்த தீவிரமான மன நிலையானது, எழுதும்போது சாந்தமடைகிறது, தீவிரமடைய மறுக்கிறது. ஆரம்பித்தவுடன்தான் எனக்குக் குழப்பமாக இருந்தது இதை எப்படி, எதிலிருந்து ஆரம்பிப்பது என்று. சரி, ஆனது ஆகிவிட்டது இன்னும் ஐந்தாறு வரிகள்தானே, எழுதித் தீர்த்துவிடலாம் என்றால் மனமானது இலேசாக பயம் கொள்கிறது. ஏனென்றால், இதைப் படித்துவிட்டு, இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றொரு குழப்பமான மன நிலை வேறு. பிறகுதான் யோசித்துப் பார்த்தால், இந்த வளைதளமானது பலரும் பார்த்துச் செல்வதுதானே. பின்னர் இதில் எப்படி இரகசியம் காக்கப்படுமென்று உரைத்தது. இருந்தாலும் பரவாயில்லையென்று, இந்தப் பதிவினைப் பதிவு செய்துவிட்டேன். இனிமேல் இந்த இரகசியம் காக்கப்படுவது உங்களது கைகளில்தான் உள்ளது.

இதைப் படித்துவிட்டு பிறரிடம் சொல்லிவிடாதீர்கள், அடித்துக் கேட்பார்கள், அப்பொழுதும் சொல்லிவிடாதீர்கள்... 

Friday, June 20, 2014

என்ன ஒரு வில்லத்தனம்?


இன்று  (20-06௨014) நடந்த சம்பவம் இது. நானும் எனது அலுவலக நண்பரும், "மதிய விருந்து உணவினை" முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் திரும்பி கொண்டிருந்தோம். மதிய வெயில் மண்டையினைப் பிழந்தது, 'உண்டே களைத்திருந்த' எங்களுக்கு மிகுந்த தாகமாகிவிட்டது. சரி, அலுவலகத்தின் எதிரிலிருக்கும் பழச்சாறு கடைக்குச் சென்று ஒரு 'எலுமிச்சை சோடா' சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று அந்தக் கடைக்குச் சென்றோம். எனது நண்பர், தனக்கு எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

"ஒரு Lime சோடா with Salt" என்று சொன்னேன், அதற்கு அவர், "கரண்ட் இல்லா" என்றார்.

"சரிங்க, எனக்கு "Ice வேண்டாம்" என்று சொன்னேன்.

அதற்கு அவர், "கரண்ட் இல்லா, சோடா இல்லா" என்றார்.

"அட ராமா, இவருக்கு தமிழ் வேற தெரியாதா? சோடா இல்லைன்னு சொல்றதுக்கே இவ்வளவு இழுவையா" என்று மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டு, "சரி, ஒரு "Sweet Lime போடுங்க, அத, 'Ice' இல்லாம போடுங்க" என்றேன். சரியென்று மண்டையினை ஆட்டிவிட்டுச் சென்றார். பொதுவாக, சாத்துக்குடி சாப்பிடுவது, "மிக்சியில்" அடித்து குடிப்பதைவிட, அதைப் பிழிந்து சர்க்கரை சேர்த்து கலக்கிக் குடித்தால் அதன் சுவையும், மணமும் மாறாமல் இருக்கும். மாறாக மிக்சியில்அடித்துவிட்டால், அது நுரைத்துவிடும். அதன் மணமும், சுவையும் குறைந்துவிடும். எல்லா பெரிய பழச்சாறு கடைகளிலும், மிக்சியில் அடித்துத்தான் இதனைக் கொடுப்பார்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே இதனை இது போன்ற கடைகளில் குடிப்பதுண்டு. இன்று, இதற்கான நேரமென்று நொந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட 10 நிமிட இடைவேளைக்குப் பிறகு, "Juice" வந்தது. தொட்டுப்பார்த்தால் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. அதை அவரிடம் காண்பித்து, "Ice இல்லாமத்தான் கேட்டேன்" என்றேன். அதற்கு அவர், "ஓ, 'Ice' இல்லாம இன்னொன்னோ?" என்றார்.

"இல்லீங்க, நான் கேட்டது ஒன்னே ஒன்னுதான், அதனால, "Cooling இல்லாம போட்டு கொண்டுவாங்க" என்றேன். அதை நேராக எடுத்துச் சென்று, மீண்டும் "மிக்சியில்" ஊற்றி சிறிது நேரம் ஒடவிட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர், அதை ஊற்றி எடுத்துக் கொண்டுவந்து தந்தார்கள் "இப்போ, "Cooling" இருக்காது" என்று சொன்னார் அவர். அதற்கு நான் "இதை நீங்களே, வச்சிக்குங்க" என்று கடுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன். நம்மல ரோட்டுக் கடையிலதான் எமாத்துறான்னா இவனுமா என்று நொந்து கொண்டேன்.  நல்லவேளை, அப்படியே வாயுக்குள்ள வச்சிக்கிட்டு, "Cooling" போன பிறகு குடிக்கச் சொல்லாம போனானுவளே" என்று எண்ணிக் கொண்டு இடத்தைக் காலி செய்தேன்.

"'Sir'க்கொரு ஊத்தாப்பம் " நகைச்சுவை காட்சிபோல ஆகிவிட்டது இன்றைய எனது நிலை. கடை நடத்துகிறார்களாம் கடை... 

Thursday, June 19, 2014

ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...


'லிஃப்டில்' ஒருவர் இறங்கியவுடன்,
சில நொடிகள்
தாமதத்திற்குப் பின்,
தானாக மூடிக்கொள்ளும்,
தானியங்கிக் கதவுக்குக்கூட காத்திராமல்,
தானாக இயக்கி,
நொடிகளை நொடியாக்க
முயற்சிக்கும் முயற்சி,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

கால்கடுக்க பேருந்துக்காக
நிற்கையில், நிறுத்தத்தில்
நிற்காமல் செல்லும்
பேருந்துகளை வசைபாடும் நான்,
பேருந்தில் அமர்ந்து செல்கையில்,
அவசரமாகச் செல்லவேண்டிய சூழலில்,
ஒவ்வொரு நிறுத்தமாக, நின்று செல்லும்
பேருந்தை வசைபாடுவது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

ஒருவழிப் பாதையில்,
எதிர்திசையில்
எதிர்வருபவரைக் கண்டு
மனதிற்குள் வசைபாடும் நான்,
சுற்றிச்சென்றால், கால விரயமென்று
ஒருவழிப் பாதையில் - எதிர்திசையில்
ஒருஓரமாகச் செல்லும்
என்னை முறைத்துப் பார்ப்பவர்களை
மனதிற்குள் திட்டிக்கொள்ள்வது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

உண்ணும் உணவின் விலை-அதன்
உற்பத்தி விலையினைவிட
பன்மடங்கு அதிகம் எனத்
தெரிந்தும், உறபத்தியினைப்பற்றி
சிந்திக்க மனம் மறுப்பது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

செடியோ,கொடியோ வளர்த்தால்
எம் வீட்டிற்கு உணவாகும்;
மரம் வளர்த்தால்,
என் சந்ததிக்கும்
வலு சேர்க்கும் - இவையெல்லாம் தெரிந்தும்,
கண்ணிற்கு மட்டும் அழகாய் காட்சிதரும்,
சீமைச் செடிகளை வளர்ப்பது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

தவறெனத் தெரிந்தும்,
தவறுகளைத் தவறாமல்
செயவது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...