Tuesday, November 25, 2014

சாப்பாட்டு ராமன்

இந்தப் பதிவினை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தது ஒரு வார நாளிதழில் கேட்கப்பட்டு இருந்த ஒரு கேள்வி. அந்த நாளிதழில், கேள்வி-பதில் பகுதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இதோ.

கேள்வி: சமைப்பது எப்படி ஒரு கலையோ, அது போல, அந்த சமயலை ருசிப்பதும் (சாப்பிடுவதும்) ஒரு கலைதானே?
பதில்: அதெப்படி கலையாகும். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

பதிலைப் படித்தவுடன் எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் சாப்பிடுவதும் ஒரு கலைதான் என்ற ஒருவித நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். சமையலை ரசிக்கும் நானும், ரசிகன் என்கின்ற வகையில் ஒருவித கலைஞனே (சாப்பாட்டு ராமன்). ஆதலால் இப்படிப்பட்ட ஒரு பதிலைப் பார்த்ததும் ஒருவித ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், அந்தக் கேள்வி-பதிலானது எனக்கு இந்தப் பதிவினைப் பதிவதற்கு ஏதுவாக அமைந்தது.

அது என்னன்னு தெரியல, இந்த உலகம் சாப்பாட்டிற்கும்,சாப்பாடு செய்தவர்க்கும் கொடுக்கும் மரியாதையினை, அந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுபவருக்குக் கொடுப்பது இல்லை. அன்னத்தைப் பழிக்காதே என்று சொல்பவர்கள்தான். "நல்லா கொட்டிக்கோ, தின்னுக்கிட்டே இரு, பசி தாங்க மாட்டாரோ துரை, சாப்பாட்டு ராமா' என்றெல்லாம் கரித்தும் கொட்டுகிறார்கள்.

சமைப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விலாவரியாக, பல புத்தகங்கள் வந்து உள்ளன. ஆனால், அந்தச் சமையலைப் பற்றி விமர்சிக்க வேண்டுமென்றால் எவரேனும் ஒருவர் அதை ருசித்துப் பார்த்துத்தானே ஆக வேண்டும். எப்பேற்பட்ட கலையாக இருந்தாலும் அதைப் பிறர் உணர முடிந்தாலன்றி அதன் திறம் வெளியில் தெரிவதில்லை. அதற்கு, இந்த சமையல் கலையும் விதிவிலக்கல்ல.

சமையலைப் பற்றி பல புத்தகங்கள் வந்திருப்பதைப் போல, எப்படியெல்லாம் அனுபவித்துச் சாப்பிட வேண்டும் என்பதற்கும் புத்தகம் எழுதப்பட்டால், அதை வாங்குவதற்கும் என்னைப் போன்றோர் இருக்கத்தான் செய்வார்கள். சமையல் என்பது ஓவ்வொரு பகுதிக்கும் வேறுபடும். அது அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களது உணவின் தாகத்தைப் பொறுத்தும், தாகம் தீர்க்கும் தண்ணீரின் சுவை பொறுத்தும், மண்ணில் விளையும் பயிர் பொறுத்தும், கிடைக்கப் பெறும் பொருள் பொறுத்தும் நிர்ணயிக்கப்படும். ஆனால், ஒருவரது நா சுவையானது, என்னதான் முதலில் மண் வாசனை மாறாது, உணவை உண்டு வந்திருந்தாலும், அவர்கள் செல்லும் பகுதிக்கேற்ப, நாவானது புதுப்புது சுவைகளை மனதில் நிறுத்திக் கொள்ளும்.

நாவிற்கும், நாசிக்கும் ருசி தெரியாமல், சமையல் எனும் ஒரு கலை பிறந்திருக்க வாய்ப்பில்லை.

நமது முன்னோர்கள் கேப்பைக் கூழ், கம்புக் கூழ் என்று பலதரப்பட்ட கூழ்ம நிலை உணவுகளை எடுத்துக் கொண்டனர். அதனால்தான் என்னவோ, அவர்கள் சாப்பாடினைச் சாப்பிடும்போது அவர்களது கைகளை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். அதாவது, சோற்றினை ஐந்து விரல்களால் நன்றாகப் பிசைந்து, அப்படியே அதனை உள்ளங்கைகளில் உருட்டி, திரட்டி உருண்டை செய்து அப்படியே வாயில் போட்டு நன்றாக மென்று தின்றார்கள். ஆனால், இன்றைய நமது தலைமுறையினரோ, உள்ளங்கை வரை இருந்த சோற்றுடனான உறவினை வெறும் விரல் வரை மட்டுமே வைத்து இருக்கிறோம். அள்ளித் தின்னாமல் நுனிப் புல் மேய்வதைப் போல, மெதுவாக கிள்ளித் தின்கின்றோம். இன்னும் சிலரோ, அதையும் நிறுத்திவிட்டு கரண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் சாப்பிட்டுவிட்டு அதன் சுவையினை வர்ணிப்பதைக் கேட்டாலே, சிலருக்கு அந்த உணவைச் சாப்பிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு அவர் அனுபவித்ததை, சுவைக்க சுவைக்க எடுத்துக் கூறுவார்கள், கேட்பவர்களைச் சுவைக்கத் தூண்டும் அளவிற்கு. அதே நேரம், சுவைத்த உணவு பிடிக்காவிட்டாலும், அவர்கள் அதை வர்ணிப்பதில் இருந்தே அந்த உணவைப் புசிக்க வேண்டுமென்ற பசி அடங்கிவிடும் பலருக்கும்.

உதாரணமாக, "Discovery" தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர், தான் வழியில் தென்படும் சிலவற்றை உணவாக உட்கொள்வதை வர்ணிப்பதை எடுத்துக் கொள்ளலாம். அவருக்குப் பிடித்திருந்தால், "இந்தச் சுவையானது வான் கோழியின் இறைச்சியினைப் போலவே அற்புதமாக இருக்கிறது, மேலும் நான் இதை நன்றாக தீயில் சுட்டுவிட்டதால் இதிலிருந்து ஒருவித நறுமணமும் வருகிறது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்பார். மற்றொரு வேளையில் "இந்தப் புழுவினைச் சாப்பிடும்போது, ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. அது எப்படி இருக்கிறது என்றால்? ஒருவாரம் துவைக்காத "socks" துணியினை தண்ணீரில் கரைத்து வைத்தால் எந்த அளவிற்கு துர்நாற்றம் அடிக்குமோ, அது போன்றதொரு துர்நாற்றம் எனது நாசியில் தெரிகிறது" என்பார். இப்படிப்பட்ட விளக்கம் கொடுத்த பிறகு எவருக்கேனும் அதைச் சுவைக்கத் தோன்றுமா?

அநேகமாக பலரும், சில விசயங்களை எடுத்துக் கூறுவதற்கு சாப்பாட்டின் சுவையினைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். எனது பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் அடிக்கடி ஒன்றைக் கூறுவார். ஏதாவது முக்கியமான பகுதியினைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, "நான் சொன்னதெல்லாம் உங்க மனசுல எப்படி பதியனும் தெரியுமா? இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டா எப்படி, தொண்டையில சிக்காம வழுக்கிக்கிட்டு போகுதோ, அந்த மாதிரி உங்க மனசுல உடனே மிக எளிமையா போகனும்" என்று சொல்வார். இதுபோன்ற பல சம்பவங்களை அடுக்கிக் கூற இயலும். சாப்பிடும் உணவை நன்றாக அனுபவித்து சாப்பிடுவதால்தான், அவர்கள் மனதில் இந்த சுவையானது  பதிந்து போய் இருக்கிறது. "பசு மரத்தாணி" என்பதை மாற்றிக் கூறியவர் இவர்தான். இவர் சொன்ன உதாரணம் எவ்வயதில் படிப்பவருக்கும் பொருந்தும்.

எப்படிச் சிலர், தம் உணவினை அழகாக வர்ணிக்கிறார்களோ, அதைப் போலவே சிலர் தாம் சாப்பிடும் உணவை அழகாக சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தாலே, நமக்கும் சாப்பிடத் தோன்றி விடும்.

சிறு வயதில் என்னுடைய தந்தை, ஆட்டுக்கறி சாப்பிடுகையில் "என்னய்யா எலும்பையெல்லாம் சாப்பிடாம வச்சு இருக்க?" என்பார். அத என்ன பன்றது என்று மனதுக்குள் கேள்வி எழும் முன் அவர் செய்து காண்பித்தது இன்னும் நினைவிருக்கிறது.. அப்படியே வாயில் வைத்து சுவைத்து ஒரு உறிஞ்ச வேண்டும் என்று சொல்வார். ஆனால், எனக்கு என்னவோ வெறும் காத்துதான் வந்தது.

சமைத்தவர் மனம் மகிழ வேண்டுமென்றால், அவர் தனது சமையலைப் புசிப்பவரைக் கண்டால் மட்டுமல்ல, அவர்களது ஒரு சில நல் விமர்சனங்களே அவ்ர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை.

மே மாதம்,கஜினி,சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் டீ சாப்பிடுவதைக்கூட அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இப்போ சொல்லுங்க, சமைப்பது எப்படி ஒரு கலையோ, சாப்பிடுவதும் ஒரு கலைதானே.?

இதைப் படித்துவிட்டு, 'கரிசக் காட்டு பூவே' படத்தில் நெப்போலியன் அவர்கள் "சாப்பிடுவது எப்படின்னு செஞ்சு காண்பித்தேன்" என்று பக்கத்தில் இருப்பவரது இலையினைக் காலி செய்யாதிருந்தால் போதும்.

சமைக்கும் உணவின் வாசமானது அன்றோடு மறைந்தாலும், சுவைத்த உணர்வானது என்றும் மனதில் நீங்காது நிற்கும்.

Friday, November 21, 2014

கோழிக் குஞ்சும் கோடீஸ்வரனும்

சில நாட்களுக்கு முன்பாகவே இதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இதைப் பற்றிய ஞாபகம் வரவே இதனை இப்போது பதிவு செய்கிறேன். தற்போது அலைபேசி மற்றும் தனக்கென தனியாக மின்னஞ்சல் வைத்து இருக்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பமானது சாமானிய மக்களைச் சென்றடையும் வகையில் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்திக் கொண்டுள்ளது. "எங்களது லாட்டரியில், உங்களது பெயருக்கு லட்சுமியே காட்சி தந்து இருக்கிறார்.ஆகவே உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப் போகிறார். உங்களுக்கு 100000 ருபாய் கிடைக்க உள்ளது, தொடர்புக்கு... " என்று ஒரு முகவரியும் கொடுத்து நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து இதுபோன்ற மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் வரக்கூடும். அநேகமாக எல்லோரும், இதனைப் பெற்று இருப்போம் என்று எண்ணுகிறேன். இது எவ்வளவு பெரிய மோசடி வேலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது ஒருபுறம் என்றால், சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இப்படியாக ஒரு போட்டி நடக்கும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால், அவர்கள் அதற்குப் பரிசாக பணம் தருவார்கள்.

கேள்வி: ஒன்றோடு பூஜ்ஜியத்தைக் கூட்டினால் எவ்வளவு?

Option A: ஒன்னு
Option B: பன்னு
Option C: திண்ணு

(இந்த கேள்வி - பதில் உபயம்: நண்பர் வீரா)

இதற்கு நமக்கு விடை தெரிந்தால், அவர்களைத் தொடர்பு கொண்டு பதிலைச் சொல்லி பரிசை அள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், தொடர்பு கொள்ளும் எண்ணுக்கு நிமிடத்திற்கு 10 ரூபாய் வரை வசூல் செய்வார்கள். மேலும், தொடர்பானது உடனே கிடைத்து விடாது, கிட்டத்தட்ட 10, 15 நிமிட காத்திருப்பிற்குப் பிறகுதான் கிடைக்கும். பரிசுத் தொகையின் மதிப்பைவிட, நமது செலவு கூடுதலாகச் சென்றுவிடும் சில நேரங்களில்.

டிக்கெட்டு 5 ரூபாய், பூ 50 ரூபாய்... நல்லா ஓட்டுங்கய்யா உங்க வண்டிய...

இதை 'நூதனத் திருட்டென்று' சொல்வதா, அல்லது 'வியாபார காந்தம்' என்று சொல்வதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சற்று இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், எனக்கு பட்டென்று ஒன்று உரைத்தது. எனது சிறு வயதில், இதே போன்றதொரு வியாபாரத்தை கண்டது நினைவுக்கு வந்தது.

எனது சிறு வயதில், எமது ஊரின் கடைத் தெருவின் மையத்தில் ஒரு மிதி வண்டியில் நான்கைந்து கூடைகளில் பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகளை எடுத்துக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருப்பார்கள். அப்போது, தனியாக ஒரு கோழிக் குஞ்சினை விலைக்கு வாங்கினால் அதன் விலையானது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே. அதைக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதை, அதை விற்பவரே செய்வார். ஒவ்வொன்றும் 25 பைசா மதிப்புள்ள 5 ரூபாய் அளவிற்கு சீட்டுக்கள் (சிகரெட் அட்டையில், எண்கள் எழுதப்பட்டிருக்கும் அட்டை) கொடுப்பார். அனைத்து சீட்டுக்களும் விற்று முடிந்தவுடன் அவர், அந்த சீட்டுக்களையெல்லாம் ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி ஒரு சீட்டினை எடுப்பார். (அவரிடம் தனியாக அதே எண்களுடைய சீட்டுக்கள் இருக்கும்). அப்படி எடுத்த சீட்டின் எண்ணானது யார் வைத்து இருக்கிறாரோ அவருக்கு ஒரு கோழிக் குஞ்சினைக் கொடுத்துவிடுவார். வாங்கியவருக்கோ இலாபம், விற்றவருக்கோ கொள்ளை இலாபம். ஓ... இதுதான் கொள்ளை இலாபமோ?

வாங்கியவருக்கும் மகிழ்ச்சி, விற்றவருக்கும் மகிழ்ச்சி... பின்ன என்ன 'உடனே... வித்திடு...'

இப்பொழுது மேற்சொன்ன நிகழ்வையும் முன்னர் சொன்ன நிகழ்வையும் உங்களால் பொருத்திப் பார்க்க இயலும் என்றெண்ணுகிறேன். இப்பொழுது இந்தக் கொள்ளை இலாபத்தைப் பாருங்கள்...

"கோடிகளை" பரிசாகத் தரும் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நமது கைபேசியிலிருந்து பதில் அனுப்ப வேண்டும். அதற்கு தனியாக, அதிகமான ரூபாயானது நமது கைபேசியின் இருப்பிலிருந்து கழியும். இந்த நிகழ்வினில் சில கோடி மக்கள் பங்கு பெறுவதற்காக முற்பட்டால், மொத்தப் பணமும் எவ்வளவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? மேலும், பலதரப்பட்ட விளம்பரங்களிலிருந்தும் அவர்களுக்குப் பணமானது கிடைக்கும். இந்தப் பணத்தின் ஒரு சிறு தொகையினையே பரிசாகக் கொடுப்பர். ஒருவரிடம் வாங்கி மற்றொருவரிடம் கொடுப்பது (முழுவதையும் அல்ல). எதுவாயினும் அவரும் மகிழ்ச்சி, இவரும் மகிழ்ச்சி. ஆனால் இதற்கு உபயோகிக்கப்பட்ட யோசனையானது அந்தக் கோழிக் குஞ்சுகளை விற்றவரைப் போலவே இருக்கிறது என்றால் அது மிகையல்ல...

Thursday, November 20, 2014

என்னடா விளம்பரம்?

தொலைக்காட்சியினைத் தவிர்த்து நமது நாளானது அமைய இயலாது என்று சொல்லும் அளவிற்கு இந்த தொலைக் காட்சியானது நம்மோடு ஐக்கியமாகிவிட்டது. என்னதான் மொக்கை நிகழச்சியாக இருந்தாலும் அதில் விளம்பரம் செய்வதற்கென்று பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கென்றும் சிலர் இருக்கத்தான் செய்வோம். சிலர், எதோ ஒன்றைப் பார்த்து பொழுதைக் கழிப்பதற்காகப் பார்க்கலாம். சிலரோ, தினமும் அதைப் பார்ப்பதற்காக காத்திருந்தும் பார்க்கலாம். சிலருக்கோ, அதைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையினால் பார்க்கலாம். இதில் வேறு வழியில்லாமல் பார்ப்பவர்களது நிலைமைதான் பரிதாபமானது. அதாவது, உதாரணமாக வீட்டில் இருக்கும் சுட்டிகள் எப்போது பார்த்தாலும் "Cartoon" நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விருப்பப்படி, நாமும் அதைப் பார்ப்பதற்கு உள்ளாகிறோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நம்முடைய யாவரது விருப்பமும் இல்லாமல், தானாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள்.  அது நேயர் விருப்ப நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்கும் விளம்பரம் உண்டு. "VJ" இல்லாமல் கூட நிகழ்ச்சிகள் இருக்கக் கூடும், ஆனால் விளம்பரங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. (செய்திகள் உட்பட). செய்திகளையே ஒரு விளம்பரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் தற்போது, அதைப் பற்றியெல்லாம் பின்னர் எழுதலாம்.

"நீரின்றி அமையாது உலகு" என்பது போல, "விளம்பரமின்றி அமையாது தொலைக்காட்சி நிகழ்வு" என்பது இன்றைய நிலை. தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் என்றும்கூட சொல்லலாம்.

தற்போதைய விளம்பரங்கள் என்று மட்டுமல்ல, விளம்பரம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, இந்த விளம்பரங்களுக்காகத்தான் அதிகமாக மனித மூளையானது செயல்பட்டு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால், அதைப் பார்த்துத் தொலைக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருப்பதால், அதைப் பற்றிய எனது எண்ணத்தின் வடிவமே இந்தப் பதிவு.


விளம்பரம்1:

முன்பெல்லாம், ஊட்டச்சத்து பானத்தின்(?) விளம்பரமானது எப்படி இருந்தது?

குழந்தையானது சாப்பாட்டிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருப்பது போல காண்பிப்பார்கள். பின்னர், "குழந்தைகள் சாப்பாட்டினைச் சரியாகச் சாப்பிடுவது கிடையாது. அதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்றாட ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. இதற்காகத்தான் நாங்கள் தருகிறோம் 'டுபாக்கூர் பானம்', இதனால் உங்கள் குழந்தைகள் சரியான ஊட்டச் சத்துக்களைப் பெறுவார்கள்.."

இப்படியாக இருந்த அந்த விளம்பரமானது தற்போது இப்படி வந்து நிற்கிறது.

"இன்னிக்கி இந்த டுபாக்கூர் ஊட்டபானம் கொடுத்தீர்களா?"
"இல்லியே, நாளைக்கு கொடுக்கிறேன்".

அதாவது, மறைமுகமாக, அவர்களது பானத்தைத்தான் அனைவரும் வாங்குவதாகவும், அதை அவர்கள் சரியாகக் கொடுக்க மறு(ற)ப்பதாகவும் ஒரு மாயையினை உருவாக்குகிறார்கள். என்னவொரு புத்திசாலித்தனம்?

வரகு, திணை, கேப்பை, கம்பு, சோளம் என்று சிறுதானியங்கள் பலவற்றை, பலவிதங்களில் உண்டு தின்று, தினவெடுத்த தேகம் கொண்டு வலம் வந்த நம்மிடம் ஊட்டச் சத்துக் குறைபாட்டைக் கூறுகிறார்கள். காலக் கொடுமை... கடைசியாக "கடலை மிட்டாய் சாப்பிடுங்கள், அது உடலுக்கு நல்லது" என்று சொல்லுமளவிற்கு வந்துவிட்டது இன்றைய நிலை.

விளம்பரம்2:

ஒரு அம்மணி மணக்க, மணக்க முகப்பூச்சு பூசிக் கொள்வதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம். அதனால், அந்த தன்னம்பிக்கையினை எப்படி வெளிப்படுத்துகிறார் தெரியுமா? பக்கத்து வீட்டு ஆடவனைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போய் கல்யாணம் செய்துகொள்ள அவரை அழைப்பதாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப் போடு, இதுவல்லவோ, "சரியான துவக்கம், தன்னம்பிக்கைக்கான வித்து"

விளம்பரம்3:

தரையினைச் சுத்தமாக்கும், கிருமிகளை அழிக்கும், கழிப்பறையினைச் சுத்தமாக்கும் என்று பலவாறாக விளம்பரப்படுத்தப்படும் பலவகையான பொருள்களும் சுத்தம் செய்வது 99.99%. அது என்ன கணக்கு? அந்த விளம்பரத்திலேயே, அவர்கள் கிருமிகளை அழிப்பதாகக் காண்பிக்கும் படத்தில் ஒரேயொரு புழு,கிருமி மட்டும் அழிக்கப்படாமல் இருக்கும். ஓ... அதுதான், 99.99% சுத்தமா? எவரேனும், இவர்கள்மீது 'கிருமிகள் அழியவில்லை' என்று வழக்குத் தொடர்ந்தால்கூட, அந்த 0.01% கிருமிதான் இதற்குக் காரணம் என்று கைவிரித்து விடுவார்களோ?

ஒரு டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கையில் ஒளிபரப்பானது அந்த விளம்பரம். "உங்கள் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருங்கள், கழிப்பறையினைப் பயன்படுத்துங்கள்". அமர்ந்திருந்த பலரும் முணுமுணுக்கிறார்கள், "இவய்ங்களுக்கு வேற வேலையே இல்லையா, இதையே திருப்பி, திருப்பி போடுறானுக. இந்த அரசியல்வாதிகள் சுத்தம் செய்றது ஒரு நாளைக்குத்தான், தினமும் சுத்தம் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். எல்லாம் ஒரு விளம்பரம்தான்" என்றார்கள். சொல்பவர் எவராய் இருந்தால் என்ன, நல்லதைச் சொன்னால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே. ஒளிபரப்பாகும், பல கீழ்தரமான விளம்பரங்களெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, இவர்களை நோக்கி, "வாருங்கள் முன்னேறுவோம், சுத்தம் செய்வோம்" என்று அனபாக ஒரு கோரிக்கை வைத்தால் உடனே வெடித்து விடுகிறார்கள். நல்லா நடத்துங்கப்பா... இப்படியே இருங்க, நாம சீக்கிரம் முன்னேறிவிடுவோம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, "என்னடா விளம்பரம்?" அப்படின்னு மனசு அடிச்சுக்குது.

Wednesday, November 19, 2014

நித்தம் நித்தம்...

மை கொஞ்சம் பூசிய
விழி கொண்டு
என் மெய் கொஞ்சம் - முத்தத்தின்
வழி எழுதிடு...

என் இதழ்களைப்
பற்றிப் பற்றி,
பற்றிக் கொண்ட
நெருப்பினில் பூத்த நீராய்
வியர்த்திடும் உன் இதழ்களை,
என் தோள்களில்,
உன் கரம் - பற்றி பற்றி,
சிவந்திட்ட இடங்களில்
அவ்வியர்வை கொண்டு
முத்தடம் பதித்திடு...

கண் விழித்திருக்கையிலேயே
நிழலாடிடும்
நினைவுகளில்,
கனவுகளின் கற்பனைகளில்,
கண்டிடும் அனைத்தையும்
மொத்தமாய்
முத்தமாய்
நித்தமுமாய் கொடுத்திடு...!!!

Tuesday, November 18, 2014

படமும் சிறு கவியும்


துள்ளித் திரிகையில்,
அள்ளித் திரிகின்றனர் சிலர்...

அள்ளி உண்ணும் வேளையில்
கிள்ளி உண்கின்றனர் சிலர்...

Monday, November 17, 2014

கவிதையென...


என்னால் - இந்நாள்,
முன்னால் விரியும்
எண்ணத்தில்
எழும் கருத்தை...

அருவாய் உருவான
கருவை,
உருவாய் வடித்திட...

தருவாய்,
வருவாய் என நல்-
வார்த்தை தேடி அழைகையில்..

கெஞ்சிய நெஞ்சம் கூட,
'கொஞ்சம் பொறு'
'கொஞ்சம் பொறு' என்கையில்...

பார்த்தது, கேட்டது
நுகர்ந்தது,
உணர்ந்தது, சுவை
அறிந்தது - என
ஐம்புலன்களும் அறிந்துணர்ந்த...

அறிவுக்கெட்டிய
நல் வார்தைகளையெல்லாம்,
சேர்த்து சேர்த்து...

சேர்த்தவைகளயெல்லாம் ஒன்றாய்
கோர்த்து கோர்த்து...

கோர்த்தவை,
கருவின் உருவாய் வருமா?
அல்லது
அருவமாய்ப் படுமா?
வனப்பைக் குறைத்திடுமா? எனக்
கேள்விகள் பல கேட்டு, கேட்டு...

பார்த்து பார்த்து,
மீண்டும் மீண்டும்,
படித்துப் பார்த்து...

கருவின் உருவாய்(வை) தருவிக்கிறேன்
கவிதையென நான்...

Friday, November 14, 2014

ராசாவின் இசையிலே: அடுக்கு மல்லி

ஆவாரம் பூ படத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று. வெகு நாட்களாகவே இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆகையில் இன்று இதனைப் பதிவு செய்கிறேன்.

இந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதற்கு வழக்கமான காரணங்களில் ஒன்று - இளையராஜாவின் இசையில் அமைந்தது.

பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய சில பாடல்களில், தானாகவே சில இடங்களில் சிரிப்பையும், இதர சில சிணுங்கல்களையும் கொடுத்திருப்பார். அப்படிக் கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாலு அவர்கள் இளையராஜாவின் இசையில் தானாகவே இதைச் செய்வார். சில சமயங்களில், இருவருக்கும் இதில் கருத்து வேறுபாடும் இருந்ததுண்டு எனவும் எங்கோ படித்த/கேட்ட ஞாபகம் உண்டு.

பாடல் ஆரம்பமானது, ஒரு மெல்லிய பூங்காற்றாக, வீசும் தென்றலாய் ஒரு புல்லாங்குழலின் இசையில் இந்தப் பாடலானது ஆரம்பிக்கும். பிறகு பின்னணி இசைக் குழுவின் ஒலியானது, கடல் அலைகள் போலவே ஒலிக்கும். படத்தின் களமானது, மீனவப் பகுதி என்பதால் இந்த மாதிரியானது இசையினைச் சேர்த்துக் கொண்டாரா? அல்லது பாடலின் சுவைக்காக சேர்த்துக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் பாடலினைக் காட்சியோடு பார்ப்பவர்களுக்கு அந்தப் பாடலோடு ஒன்றிப் போய்விடுகின்ற அளவிற்கு இந்த இசையானது அமைந்து இருக்கும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு பின்னால் இந்தப் பாடலைக் காட்சியாகப் பார்ப்பவர்களுக்கும் இந்தப் பாடலின் காட்சியோடு ஒன்றிப் போய்விட முடியும்.

பாலு அவர்கள் பாடலின் முதல் சில வரிகளைப் பாடுவார்.

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு தாலாட்டு போலவே இருக்கும். மிக மிக எளிமையான வரிகளோடு இந்தப் பாடலானது பதியப்பெற்று இருக்கும். ஆனால், இந்தப் பாடலின் தாக்கம் மிக அதிகம் பேரைக் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல.

வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டானங்கே மொட்டுப் போல ரோசா

கதைப் படி, கதையின் நாயகன் சிறு பிள்ளைத்தனமான மன வளர்ச்சியில் உள்ளவனாகக் காட்டி இருப்பார்கள். இந்த வரிகளின் மூலமாக, அவனை அவனே 'கெட்டிக்காரன்' என்று சொல்லிக் கொள்ளச் செய்து சந்தோசப்படுத்தியிருப்பார் பாடலாசிரியர். பொதுவாகவே பலராலும், வெறுக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற ஒருவருக்கு எவரேனும் ஆதரவு கரம் நீட்டினால் அவர்கள் மீது பேரன்பு பெருகும். மேலும் தன்னையும் மதிப்பதற்கு ஆள் உண்டு என்பதாலேயே அவர்களது தன்னம்பிக்கையும் கூடும். இதற்குப் பேருதாரணமாக நமது மகாபாரதத்தில் வரும் 'கர்ணன்' கதாப்பாத்திரத்தைக் குறிப்பிடலாம்.

சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா

இந்த வரிகளைப் பாடியவுடன், பாலு அவர்கள் இலெசான சிரிப்பினை இசையாக்கி இருப்பார். எனக்கு இந்தப் பாடலின் இடையே பாலு அவர்கள்  இலேசாக சிரிக்கும் குரலில் அப்பொடியொரு ஈர்ப்பு உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தப் பாடலுக்கு அது உயிர்ப்பூட்டுவதாய் அமைந்ததாகவே உணர்கிறேன். இந்தச் சிரிப்பினை பாலு அவர்கள், தாமாகவே சேர்த்துக் கொண்டாரா?அல்லது இவர் குழந்தை போன்ற மன நிலையில் இருப்பதால், தன்னவள் இப்படிச் சொன்னதும் அதை அவன் வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமென்பதற்காக இந்தச் சிரிப்பினைச் சேர்த்தார்களா என்று தெரியவில்லை. அற்புதமாக இருக்கும்...

இந்த வரிகளைப் பற்றி எழுதியே தீர வேண்டும்.

சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும் எப்போதும்

இந்த வரியின் முதல் வரியின் பொருளை, இரண்டாம் வரியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கவிதை, கவிதை...

Thursday, November 13, 2014

கைகளில் ஏந்திடும் எம் உலகம்


யாம் பெற்றெடுத்த என் தாயே...
சேயாய் வந்த தாயே...

உன்
சின்னஞ் சிறு
சிணுங்கல்களுக்கெல்லாம்
மொழியாக்கம் செய்யச் செய்த
மழலையே...

எழுவாய்,
அழுவாய், சிரிப்பாய்,
விழிப்பாய்,
கழிப்பாய், துயில்வாய் என
நீ பயில்வதையெல்லாம்
எம்மைப் பயிலச் செய்யும்
பாலமுதே...

புரள்வாய், தவழ்வாய்
எழுவாய் - விழுவாய்
என - உன்
அடுத்தடுத்த
தருணங்களை எல்லாம்
தரிசித்திட
தவமிருந்து
காத்திருக்கிறேன்...

உன்
உள்ளங்கையில்
என் விரல்
தொட்டதும்
தொட்டாச் சிணுங்கையாய்
தானாய் மூடிக் கொள்ளும்,
கைகள், தானாக என் விரல்
பற்றி நடந்திடும்
காலத்திற்காக காத்திருக்கிறேன்...!!!

Wednesday, November 12, 2014

என்னோடு பயணியுங்கள் - 2

எனது ஊருக்குச் சென்னையில் இருந்து, முந்திய தினம் இரவு இரயிலில் பயணப்பட்டு அதிகாலை 5 மணியளவில் மதுரையினை அடைந்திருந்தேன். எப்பொழுதும் போலவே அன்றும், எனக்குப் பிடித்தமான "ஷ்ரி வாரி பவனில்" அற்புதமான, சுவையான ஒரு டீயினைக் குடிப்பதற்காக சென்றேன். அங்கு குடித்த தம்ளர்களை வைப்பதற்காக, கடையின் வெளியில் அகன்ற, பெரிய பாத்திரம் வைத்து இருப்பார்கள். மணக்க, மணக்க ஒரு டீயினைக் குடித்துவிட்டு நகர்ந்தேன். அந்தக் கடையினைக் கடந்ததும் "பிரேமா விலாஸ்" கடையிலிருந்து ஒரு குரல் ஒலித்ததுபோல இருந்தது. "அண்ணே, என்னண்ணே, என்னைப் பார்த்தும், பார்க்காத மாதிரிப் போறீங்க" அப்படின்னு அந்த நேரத்தில்கூட சூடாக இருக்கும், கடையிலிருக்கும் அல்வா அழைப்பது போன்ற பிரம்மை. "திரும்ப ஊருக்குப் போகும்போது, கண்டிப்பா வர்ரேன்னு" சொல்லிக்கிட்டு பெரியார் நிலையத்திற்குச் சென்றேன்.

சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு வந்தது "காரியாபட்டி" செல்லும் பேருந்து. அதில் ஏறி பயணப்பட்டேன். பேருந்தில் கூட்டம் ஏதும் இல்லாதிருந்தது. நான் பேருந்தின் கடைசி இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் அந்த தாழ்தளப் (மிதவைப்) பேருந்தின் பின்பக்க தானியங்கிக் கதவினைக் கவனித்தேன். நமது பழையை தமிழ் படங்களில், இறுதிக் காட்சிகளில் கதாநாயகர்களைக் கயிற்றால், இரு கைகளையும் கட்டி வைத்ததுபோல, அந்தக் கதவின் இரு புறமும் பல சுற்றுகள் கொண்ட கயிறு மற்றும் கம்பியால் பிடித்து(பிணைத்து) வைத்து இருந்தார்கள். அட அதுகூடப் பரவாயில்லை, ஒரு கதவின் ஓரத்தில் ஒரு அடி அகலம் மற்றும் உயரம் கொண்ட ஒரு முண்டுக் கல்லையும் வைத்து இருந்தார்கள். அடப் பாவிகளா,  அது சரி,, நம்ம தலையில கல்லத் தூக்கிப் போடாம இருந்தாங்களேன்னு நினைத்துக் கொண்டு சமாதானமாகிக் கொண்டேன்.

வண்டி புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு முன்னால் அமர்ந்து இருந்தவர் "அவனியாபுரம்" என்று சொல்ல அதற்கு நடத்துனர் "அவனியாபுரம் உள்ளே வண்டி போகாது, சுட்காட்டுல இறங்கிக் கொள்கிறீர்களா" என்றார் பட்டென்று, எனக்கு பக்கென்று இருந்தது.

"யேய்... யேய்ய்ய்... என்ன பேசுற, காலங்காத்தால, ஒருத்தன சுடுகாட்டுக்குப் போகச் சொல்றாரேன்னு எனக்கு ஒரே அதிர்ச்சி" சரிதான், சைத்தான் பஸ்-ல வருதுன்னு தோணுச்சு.

ஆனால் எனக்கு முன்னால் இருந்தவர் எந்தவொரு கோபம் கொள்ளாமல், பின்னால் வந்த வண்டியினைக் காண்பித்து, அந்த வண்டி போகுமான்னு கேட்க, அவரும் ஆம் என்று தலையசைத்தார். பின்னர்தான், சுடுகாட்டுக்கருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளதென்று எனக்கு விளங்கிற்று. கொஞ்ச நேரத்துல மனச கலவரப்படுத்திட்டானுவளே...

அடுத்ததாக, மண்டேலா நகரில் இறங்கி, அருப்புக்கோட்டைப் பேருந்தில் பயணப்பட்டேன். உட்காருவதற்கு இடம் கிடைக்காததால், நின்று கொண்டு பயணிக்க வேண்டியதாகியது.

பேருந்தில்

வைகைக் கரை காற்றே நில்லு...
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு...
மன்னன் மனம் வாடுதென்று...
வஞ்சிதனைத் தேடுதென்று...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைப் பார்த்தால்.. நீயும்.. காதோரம் போய் சொல்லு

பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"ஆகா, ஆகா, ஆககாஆ...." எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு என்று மனதிற்குள் பெருத்த சந்தோசம். இத்தனை நாட்களாக, மழை எதுவும் இல்லாமல் வறண்டு கிடந்த வைகையில, இப்பொழுது மழை பெய்து இருப்பதால் இந்தப் பாடலுக்குப் பொறுத்தமாக இருந்தது. இது அரசுப் பேருந்துதானா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. என் சந்தேகத்தை தீர்க்கும்விதமாக, அடுத்த பாடலாக "சோதனை மேல், சோதனை போதுமடா சாமி" ஒலித்தது. இப்பொழுதுதான், இது அரசுப் பேருந்துதான் என்பது உறுதிப்பட்டது. நிற்போர் பலரும், இந்தப் பாடலைக் கேட்டதும் ஒரு விதமான எரிச்சல் கலந்த புன்னகை பூத்தனர். "பாவம், டிரைவருக்கு என்ன சோகமோ?" என்று ஒருவர் முனுமுனுத்தார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், திடீரென இளையராஜா பாடலுக்குத் தாவியிருந்தார்.

ஆவாரம்பூ படத்திலிருந்து ஒலித்தது அந்தப் பாடல்...

அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை....
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

"அப்பப்பா.... அருமைய்யா..." அப்படின்னு ரசித்துக் கொண்டிருக்கையிலேயே அருப்புக்கோட்டை வந்துவிட்டது. இங்கிருந்து, எனது ஊருக்குச் செல்லும் பேருந்து வருவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்தமையால், அங்கொரு டீ சாப்பிட முடிவெடுத்தேன்.

"மாப்ளே...! எதிர் பக்கம் இருக்கும் கடையில டீ நல்லா இருக்கும், அந்த நிறுத்தத்திற்கு அருகிலிருக்கும் கடையில் டீ நல்லா இருக்காது" என்று எனது மாமா சொன்னது ஞாபகம் வந்தது.

அந்தக் கடையில் டீ குடித்த பிறகுதான் தெரிந்தது, அவர் வேண்டாமென்ற கடையில் எவ்வளவு மோசமாக டீ இருக்குமென்று... (இதுவே மிக மோசம், அப்போ அது). டீ சாப்பிட்டு முடிப்பதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது, அதில் ஏறி எனது ஊருக்குப் பயணப்பட்டேன். வழக்கம்போல, "அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரில்தான் அடுத்த நிறுத்தம். இடையில வேற டிக்கெட் இருந்தா ஏறாதீங்க" என்று நடத்துனர் கூவிக் கொண்டிருந்தார். வண்டி சென்றபோது, அவர் எங்கெல்லாம் நிற்காது என்று சொன்னாரோ அங்கெல்லாம் நின்றுதான் சென்றது... "இதுக்குத்தான் அந்தக் கூவலா? எப்பொழுதுதான் இதை மாற்றுவார்களோ?" என்று நொந்து கொண்டே ஊர் சென்று சேர்ந்தேன்.

Tuesday, November 11, 2014

மொட்டைக்கும் முழங்காலுக்கும்

வெகு நாட்களாகவே எனக்கு "மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது" என்றால் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அதற்கு விடை காணவே இந்தப் பதிவினை பதிவு செய்கிறேன். இதைப் படித்துவிட்டு மொட்டை எது? முழங்கால் எது? என்றெல்லாம் கேள்விகள் என்னை நோக்கி வராது என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்.

ஊரிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, பேருந்தில் ஒலித்தது இந்தப் பாடல்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
சென்னை வந்ததும் நோலன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுப் படத்தை பார்த்துவிடுவதென்ற முடிவோடு கிளம்பியிருந்தேன். அது என்னன்னு தெரியல, அவருடைய முந்தைய படமான "Inception"க்கும், இந்தப் பாட்டிற்கும் ஒரு முடிச்சுப் போட வேண்டுமென்று எண்ணம் எழுந்தது.



இவரது இயக்கத்தில் வெளிவந்து பலரது தூக்கத்தையும் கெ(கொ)டுத்த படம்தான் "Inception". இந்தப் படத்திற்கும் இந்தப் பாடலுக்கும் எப்படி முடிச்சுபோடுவதென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் இருக்கும் கயிறு கொண்டு திரித்திருக்கிறேன், பிடித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பாடலின் வரிகளுக்கும், படத்திற்கும் இருக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை - "கற்பனை".

கனவுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் இல்லையென்று நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது, அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்திருப்பார். ஒரு கனவிற்கு கதை திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் "Inception" படம். ஒரு நகைச்சுவைக்கு பாடல் எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...".

சில சமயங்களில் நமக்கு வரும் சில கனவுகள், சம்பந்தப்பட்டவைகளாகவும் சில கனவுகள் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமலும் இருக்கும். அதைபோலவே, இந்தப் பாடல் வரிகளும் அப்படித்தான்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னுயானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டுகதையிலதானே இப்போ காணுது பூமி
"மரபணு மாற்றம்" என்கின்ற பெயரில் விளைவிக்கப்படும் காய்கறிகளை இதற்குப் பேருதாரணமாகச் சொல்லலாம்.
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு...
மொத்தம்... இருபத்து ஆறு...!
இந்த வரிகளைப் போலவே, சிக்கலானதாக "Inception" படத்தின் திரைக்கதையும் இருக்கும். அதாவது, ஒரு கனவிற்குள் சென்று, அங்கிருந்து இன்னொரு கனவிற்கு சென்று அங்கிருந்து மற்றொன்று என்று ஒரு சிக்கலான திரைக்கதையில் படமானது பயணிக்கும். நாம் எடுத்துக் கொண்ட இந்தப் பாடலின் வரிகள்கூட இப்படித்தான் இடியாப்பச் சிக்கலாய், நகைச்சுவையாக இருக்கும்
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா...
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா...
பாடலின் நடுவில் குமரியின் குரலாய் வந்து, கிழவியாய் தரிசனம் தரும் பெண்ணும், இந்தப் படத்தில் உயிராய் உரவாடிய மனைவியின் இழப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது, இந்த வரிகளில் உள்ளதைப் போலவே, நமது கற்பனைகளுக்கு எட்டியபடி, கனவிற்குள் வரும் இடங்களை எண்ணத்திற்கேற்ப கட்டமைத்துக் கொள்ளும்படியான காட்சியமைப்புகள் இருக்கும்.



இவையெல்லாவற்றுகும் முத்தாய்ப்பாக பாடலின் இறுதிக் காட்சியில், கழுதையானது கணைத்துக் கொண்டிருப்பதோடு அந்தப் பாடலானது நிறைவடையும். அந்தப் பாடல் பிடிக்காமல், அது கணைக்கிறதா, அல்லது அவர் அந்தப் பாடலில் சொன்னதெல்லாம் கேட்கச் சகிக்காமல் கணைக்கிறதா? என்பதை காட்சிப்படுத்தியவர் சொல்லியிருக்கமாட்டார். அதைப் போலவே, "Inception" படத்திலும் கடைசிக் காட்சியில் அந்தப் பம்பரமானது சுழன்று கொண்டு இருப்பதோடு நிறைவடையும். அதாவது, அதுவரை நடந்த அனைத்துமே கனவா? படம் முழுவதுமே கனவா? அல்லது எந்தப் பாதிவரை கனவு? என்பதை சொல்லியிருக்கமாட்டார். இதையெல்லாம் நமக்குப் பின்னால்வரும் சந்ததிகள் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று இயக்குனர் அதை நம்மிடமே விட்டுவிடுவார்.

அப்பப்பா, எங்கையோ ஆரம்பித்து ஒருவழியாக முடித்துவிட்டேன். மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்...

மரம் வளர்ப்போம்

சமீபத்திய வனத்துறையினரின் செயல்பாடு மிகவும் பாராட்டுகுறியதாகவே இருக்கிறது. கடந்த வாரம், பள்ளிக்கரனையின் சதுப்பு நிலப் பகுதியில் பூவரசம் மரங்களை சாலையின் ஒரங்களில் நடவு செய்ய முடிவு செய்து அதைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நேற்றைய தினத்தில், தேவையான அளவு மரங்கள் நடப்பட்டு இருந்தன. இன்று பார்க்கையில், அதற்கு சிறிய அளவில் முள் வேலியினை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.

"...பலவகையான தினங்களைக் கொண்டாடும் விதமாக, எங்கேயோ ஓர் மூலையில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன" என்று செய்தியாகக் கேட்டுக் கேட்டு சலித்துப் போன எனக்கு, இன்று நேரில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் போலவே, தற்போது அகன்று விரிந்திருக்கும் நமது தேசிய நெடுஞ்சாலையி(களி)ன் நடுவிலோ அல்லது இரு மருங்கிலோ இவ்வாறான, நமது சூழலுக்குப் பயனுள்ள (மழை மேகங்களை ஈர்த்து மழையினைத் தரவல்லது இந்த பூவரச மரம்) மரங்களை நடவு செய்தால் மிக்க நன்றாக இருக்கும்.

நீங்கள் வசிக்கும் இடத்தில் ஒரு மரம் வளர்க்க இடம் இருந்தால், உங்கள் மனதில் இதற்கென ஒரு இடம் அளித்து, ஏதேனும் ஒரு மரம் வளருங்கள்.