Thursday, March 23, 2017

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - 1

கேட்பதற்கு மிக அருமையாக இருக்கும் சினிமா பாடல்களில் சில பாடல்கள் மிக அபத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில பாடல்கள் இசைக்கும், காட்சிக்கும் ஓர் உயிர்ப்பு இல்லாதது போல இருக்கும் . வெகு சில பாடல்கள்தான் பாடலின் இசை, பாடலின் குரல், பாடலின் காட்சியமைப்பு, பாடலின் வரிகள் என அனைத்தும் வெகு பொருத்தமாக அமைந்து இருக்கும். இப்படி ஒரு பாடலுக்குண்டான அழகுடன் அமைந்த பாடல்தான்  "டிக் டிக் டிக்" படத்தில் வரும் "பூ மலர்ந்திட நடமிடும் பெண் மயிலே" என்ற பாடல்.

பாடலின் ஆரம்பத்தில், கதாநாயகியின் கைகளைப் பற்றி, கதாநாயகன் வீணை வாசிப்பது போல ஆரம்பிக்கும். இசைக்கும், அந்தக் காட்சியமைப்புக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கும். அதன் பிறகு பரத நாட்டிய இசையுடன் - பாடலின் இசை பயணிக்கும். கதாநாயகி ஆடும் நடனத்தை, கேமிராவில் பதிவு செய்வார் கதாநாயகன். இயக்குனர் பாரதிராஜா மற்றும் இளையராஜா இருவரும் சினிமா வாழ்க்கையினை ஆரம்பிக்கும் முன்பிருந்தே நல்ல நண்பர்கள் என்பதால், ஒருவரைப் பற்றி மற்றோருவர் நன்கு புரிந்து வைத்து இருக்கக் கூடும். இதனால், அவரவர் ரசனையினை இருவரும் நன்கு அறிந்த்திருப்பர். படத்தின் பெயரை ஒரு இசையாக அமைத்து இருப்பார்கள் இந்தப் பாடலில்.

மேலும் இயக்குனர் ஒரு படி மேலே சென்று, அந்த "டிக் டிக்" இசையினை புகைப்படக் கருவியில் இருந்து வருவது போலவும் காட்சியினைப் பிரமாதமாக பொருத்தியிருப்பார். கதாநாயகன் கதாநாயகியின் நடனத்தை கேமிராவில் பதிவு செய்யும்போது, கேமிராவில் அழுத்தும் அந்த பொத்தான் மற்றும் கேமிரா ஒளியின் ஒலி என அனைத்தையும், பாடலின் இசையோடு சேர்த்திருப்பார்கள். பாடலைப் பார்க்கும் அனைவருக்கும் அந்த சப்தமானது கேமிராவில் இருந்து வருவது போல அவ்வளவு அற்புதமாக அமைத்து இருப்பார்கள் இவ்விருவரும். இதை போலவே "ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ" என்று பாடல் வரி வரும் சில சமயங்களில் கதாநாயகியின் விழி அசைவுகளால் ஒரு நடனமாக கொடுத்து இருப்பார்கள் .

வயலின் ஓசை வரும்  சில இடங்களில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரது முகங்களையும் அடுத்தடுத்து, திரும்ப திரும்ப காண்பித்து அந்த இசையின் வேகத்தோடு பயணிக்க வைத்து இருப்பார் இயக்குனர் பாரதிராஜா அவர்கள். இப்படிஅந்தப் பாடல் முழுவதும் - இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருக்கும் உள்ள ஒரு புரிதலை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதைத்தான் நான் "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு" என்று தமிழின் இலக்கணத்தையே - ஒரு பாடலின் இலக்கணமாக கூறுகிறேன். இதில் உடல் எது, உயிர் எது  என்பது அவரவரின் ரசனையினை பொறுத்தது!!!

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
---
---
---
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
சநிதபமபதநி
---
---
சுடச்சுட ஆசை வருகுது
இவள் மனம் தீயில் நனையுது
---


இப்படியொரு அழகிய தமிழில், ராஜாவின் இசையில் பாடலைக் கேட்கையில் "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே"!!!