Tuesday, May 24, 2011

என்றேனும் நானும் ஒரு நாள்...







இன்று நாளிதழ் ஒன்றில் எதேச்சையாக படித்த ஒன்றினை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.



படிப்பிற்கும் - செய்யும் தொழிலுக்கும்முன்பெல்லாம் எப்படிச் சொன்னார்கள் என்றால் "விவசாயி பிள்ளை விவசாயம்தான் செய்ய வேண்டும?" என்றார்கள். அது மாறித்தான் போனது ஆனால் தற்போது அதே நிலையானது சற்றே மேம்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.




இப்போதைய காலகட்டத்தில் என்ன நினைக்கிறார்கள் என்றால் "ஒரு பொறியாளரின் பிள்ளை பொறியாளனாகத்தான் ஆக வேண்டுமென்பது" போல தற்போதைய கால நிலை உள்ளது.


ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்த நாட்டின் இளைஙர்களின் கையில்தான் உள்ளது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் "படித்தவர்கள் ஒவ்வொருவரும், அடுத்தவர் நிறுவனத்தில் பணிபுரிவதைத் தவிர்த்து, தனியாக தொழில் தொடங்க வேண்டும் [i.e. Entrepreneurship]" சொன்னது போல அனைத்து இளைஞர்களும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்று.


இதோ அவருடைய எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்தது போல கீழே காணும் செய்தித் துளிகளைப் படிக்கவும்




பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் இன்ஜினியர்கள் நான்கு பேர், கர்நாடகாகிராமத்தில் பால்பண்ணை தொடங்க முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் சாஷிகுமார், ரஞ்சித் முகுந்தன், வெங்கடேஷ் சேஷாசாயி மற்றும் பிரவீன் நலே ஆகிய நான்கு பேர் சாப்ட்வேர்இன்ஜினியர்களாக பணியாற்றினர். கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இவர்களுக்கு கம்ப்யூட்டர்தொழில் அலுத்துவிட்டது. இதனால் வேறு தொழில் செய்வது பற்றி ஆலோசித்தனர். பால்பண்ணைஆரம்பிக்கலாம், நல்ல தொழில் என்ற முடிவுக்கு வந்தனர்.




பால் பண்ணை தொழிலில் ஏற்கனவே அனுபவம் மிக்க ஜி.என்.எஸ். ரெட்டி மற்றும் பிரசன்னா ஆகியோரை சந்தித்துஆலோசனை பெற்றனர். 21 பேரை பங்குதாரர்களாக சேர்த்து "அக்ஷயாகல்ப பார்ம்ஸ் அண்ட் புட்ஸ் லிமிடெட்" என்றபால் பண்ணையை கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சன்னாராயபட்டின தாலுகாவில் உள்ள கோடிஹல்லிகிராமத்தில் தொடங்க முடிவு செய்துள்ளனர். 24 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியில் இந்த பால்பண்ணை அமையஉள்ளது.

நவீன முறையில் பசுக்கள் வளர்ப்பு, மேய்ச்சலை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி மற்றும் சென்சார்கள், இயந்திரங்கள் மூலம் பால் கறப்பது, மாடுகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ சோதனை, பால் கறக்கும் அளவைகண்காணித்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படவுள்ளன. கிராம மக்கள் 500 பேருக்கு இவர்களதுபால்பண்ணையில் வேலை கிடைக்கவுள்ளது.
இது தவிர சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் சிறு சிறு பால் பண்ணைகள் நடத்தவும் ஏற்பாடுசெய்துள்ளனர்.





மாடுவாங்க கடன் ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்கள் கறக்கும் பாலை தரகர் இல்லாமல் நேரடியாக கொள்முதல்செய்து விற்கவும் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சாஷி குமார் கூறுகையில், " வேளாண் துறையில் தொழிலைதொடங்கி` கிராம வேலை வாயப்பு திட்டத்தை அதிகரித்து கிராமங்களை வளம்பெறச் செய்வதே எங்கள் நோக்கம். இதன் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்கள் விவசாய தொழிலை கைவிட்டு நகரங்களுக்கு செல்வதைதடுக்கலாம்" என்றார்



பி.கு: இது போன்று தொழில் தொடங்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை, என்றேனும் கண்டிப்பாக தொடங்குவேன்.



செய்திகள்: தினகரன் நாளிதழ்

Saturday, May 14, 2011

நினைவாணிகள் - பாகம் ஆறு



அழகர்சாமியின்
"டீ"க்கடை






என்னுடைய
தந்தையின் மளிகைக் கடயின் எதிரில் "டீ"க்கடை கடை வைத்திருந்தவரின் பெயர் "அழகர்சாமி", எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அங்கு கடை வைத்திருந்தார். அவரை "சித்தப்பா" என்றுதான் நானும் என்னுடைய அண்ணனும் அழைப்போம். அப்போது அவருடைய கடையினைப் பார்ப்பதர்க்கே மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், அப்போதெல்லாம் அவருடைய கடையானது ஆல மரம் போலத் தோற்றம் கொண்ட, ஒரு புளிய மரத்துக்கு அடியில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் கிளைகள் அனைத்தும் மிக அடர்த்தியாக இருந்ததால் அவ்வாறான தோற்றத்துடன் காணப்பட்டது.



அவருடைய கடையில் காலை நேரம் மட்டும் இட்லி, மசாலா மொச்சைப் பயறுகளை விற்று வந்தார். எங்களுடைய வீட்டில் என்றாவது காலை சமைக்கவில்லையென்றால் நாங்கள் நாடிச் செல்லும் கடை இவருடையதுதான். அவருடைய கடையானது என்னைப் ஒறுத்தவரை "எங்கள் ஊர் இருட்டுக் கடைதான்", ஏனென்றால் எப்போதுமே அந்தக் கடையின் உள்புறம் கொஞ்சம் இருளாகவே இருக்கும். எதிரெதிராக இரண்டு "திண்டு"களும், அவைகளுக்கு எதிராக, சாப்பிடுவதற்கு இரண்டு "மேசை"களும் போடப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக ஆறுபேர் அமர்ந்து சாப்பிடலாம். அவருடைய கடையில் மட்டும் குடிக்கும் தண்ணீரானது, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அதற்கு அந்த புளிய மரத்தைத் தவிர, தண்ணிரைச் சேகரித்து வைக்க அவர் பயன்படுத்திய மண் தொட்டிகளும் மிக முக்கியக் காரணிகள்.


திருச்செந்தூரில் - கோயிலானது, ஒரு சாய்வாக அமைந்து இருப்பதுபோல, இவருடைய கடையும் அமைந்து இருக்கும், குறிப்பாக கை கழுவும் இடம் மிகச் சாய்வாக இருக்கும். அவருடைய மனைவி, அந்தக்கடையின் ஒரு "கோடியில்" அமர்ந்து "பூ" கட்டிக்கொண்டு இருப்பார். அவர் அன்றிலிருந்து இன்றுவரை "பூ" கட்டி வியாபாரம் செய்து வருகிறார்.


அவருடைய கடையின் சிறப்பே இந்த "மசாலா மொச்சை"தான் [என்னைப் பொறுத்தவரை"]. அந்த மொச்சையானது வெளிர் மஞ்சள் நிறத்தில், கிட்டத்தட்ட "கிளிப் பச்சை" நிறத்தில் அழகாக இருக்கும். அதை இலாவகமாக அவர் எடுத்துப் பரிமாறுவதும் அழகுதான். அதாவது ஒரு பெரிய கரண்டியில், மலைபோல் குவித்து வைத்திருக்கும் அந்த "மசாலா மொச்சையினை"ச் "சுரண்டி சுரண்டி" ஒரு சிறிய இலையில் வைத்து அவர் எடுத்து வருவது அவருக்கே உரியதொறு தனி அழகு.


எனக்குத் தெரிந்தவரை அங்கு நான் சாப்பிட்டபோதெல்லாம் ஒரு இட்லியின் விலை "முக்கால் ரூபாய்" அன்ற அளவிலும், மசாலா மொச்சையின் விலையானது "மூன்று ரூபாய்" என்ற நிலையிலும் இருந்தது. நான் அங்கு சாப்பிடும் போதெல்லாம் 5 முதல் ஆறு இட்லிகள் சாப்பிடுவேன், அதனோடு ஒரு "மசாலா மொச்சையும்" சாப்பிட்டுவிடுவேன். நாங்காள் வீட்டிலிருந்து மிக விரைவாக கிளம்பிவிட்டால் எங்கள் அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவோம், இல்லையென்றால் சாப்பிட்டு விட்டு அவரை எங்களது கடையில் வாங்கிக்கச் சொல்லி விடுவோம். ஏனென்றால் முதல் போணிக்கு கடனோ, கண்க்கோ வைப்பது இல்லை என்பதால்.


பஞ்சு போன்ற அந்த இட்லியின் மீது, அவருடைய கடைக்கே உரிய வாசனையூடன் கூடிய, அந்த சாம்பாரினை [தண்ணியாக இருக்கும்] உற்றிச் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். ஆனால் சத்தியமாக சொல்கிறேன் இதுவரை அவருடைய கடையினைப் போன்ற சாம்பாரைச் சுவைத்தது இல்லை. அப்படிச் சாப்பிடும்போது, சற்றே சூடு தணிந்த அந்த "மசாலா மொச்சையினை"யும் சேர்த்து சுவைத்தால் ... ஆகா என்னே ஒரு ஆனந்தம்???


அவ்வப்போது "பால் பன்"களையும் விற்பனை செய்வார். "பன்னின்"-மீது சர்க்கரைப் பாகினை ஊற்றி வைத்து இருப்பார். அதுவும் அருமையாகத்தான் இருக்கும்.


ஆனால் இன்றோ, அந்த கடை காணாமல் போய் விட்டது. அவர் நொடிந்து போய் விட்டதால் அந்தக் கடையினை அவரால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய் விட்டது. இப்போது அந்தக் கடை இருந்த இடம் ஒரு கொட்டகையாக மாற்றப்பட்டுவிட்டது, அந்த மரமும் இப்போது வெட்டப்பட்டுவிட்டது.


இருப்பினும் அந்த கடையின் ஞாபகங்கள் இன்னும் என் மனதில் அவருடைய கடையின் "மசாலா மொச்சையினை"ப் போல பசுமையாக இருக்கிறது....

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

Friday, May 13, 2011

ஏனிந்த பாரபட்சம்?





"செய்யும் தொழிலே தெய்வம்",
"தொழில் தர்மம் காப்பது கடமை" - என்றும் சொல்வார்கள்.

இவையெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருக்கிறது என்றே எண்ணுகிறேன். அன்றொரு நாள் காலை வேலை, வழக்கம்போல சென்னை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துக்கொன்டிருந்தது. அதனுடன் நானும் இணைந்துகொண்டு வேலைக்குச் செல்ல ஆயத்தமானேன். எனது அலுவலகத்திற்கு கிண்டி வரை பேருந்தில் சென்றுவிட்டு அங்கிருந்து "Share Auto" - வில் செல்வது என் வழக்கம். அன்றும் அது போலதான் சென்றுகொண்டிருந்தேன். கிண்டியில் இறங்கி அருகில் நின்று கொண்டிருந்த "Share Auto" - வினை நோக்கிச் சென்றேன்.

ஏறும்போது வழக்கமாக நான் செல்லவிருக்கும் இடத்தை சொல்லி உறுதி செய்துகொண்டபின்புதான் ஏறுவேன். அன்றும் அவ்வாறுதான் செய்தேன், ஆனால் வழக்கத்திற்கு மாறாக அது செல்லும் கடைசி நிறுத்தத்தின் பெயரைச் சொன்னேன்.

"போரூர்?" என்று கேட்டேன்.

அதற்கு அவரோ "DLF" என்று கூறிவிட்டு அமைதியானார்.

நானும் "DLF?!" என்று கூறி ஏறிக்கொண்டேன்.


அதன்பிறகு என் மனம் அமைதி ஆகவில்லை. இந்த IT-யின் தாக்கத்தால் தெரிந்தோ தெரியாமலோ சாமானியர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்றெண்ணும்போது சற்று மனது சங்கடப்படத்தான் செய்கிறது. இங்கு இந்த நிலை இப்படி இருக்க, நான் வசிக்கும் தரமணிப் பகுதியில் வேறு விதமான தாக்கம்.


தரமணி பேருந்து நிலையத்தில் இருந்து, மத்திய கைலாசம் வரை செல்வதற்கு Share Auto- வில் வசூலிக்கப்படுவது 5 ரூபாய் மட்டுமே, அதே போலத்தான் அங்கிருந்து திரும்பி வருவதற்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், தரமணி பேருந்து நிறுத்தத்தில் ஏறுபவர்களுக்கு ஒரு தொகையும், அதைத் தாண்டி உள்ள "Ascendos" நிறுத்ததில் ஏறுபவர்களுக்கு ஒரு தொகையும் வசூலிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நிறுத்தத்தில் ஏறுபவர்களிடம் மட்டும் 2 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. [அதிலும் குறிப்பாக இளைஙர்களிடம் இருந்து].

இதில் யாருக்காக நொந்து கொள்வதென்று தெரியவில்லை.

அதிகமாக வசூல்செய்யப்படுபவர்களுக்காகவா?
அல்லது
தடம் மாறி, தரம் தாழ்ந்து, தொழில் தர்மம் தவறி வசூல் செய்பவர்களுக்காகவா?
அல்லது
இவர்களிடம் 2 ரூபாய் அதிகம் வாங்குவதற்காக வேரு எங்கும் பயணிகளை ஏற்றாமல் செல்பவர்களுக்காகவா?
அல்லது
இந்த 2 ரூபாயால் பாதிக்கப்படும் சாமானியர்களுக்காகவா???


ஏனிந்த பாரபட்சம்???...

மாற்றம் - மாற்றம் தருமா?







எப்படியோ ஒரு வழியாக, தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் அறிவித்தாகிவிட்டன. வரப்போகும் புதிய அரசானது இலவசங்களை
வழங்குகிறதோ இல்லையோ கடந்த ஆட்சியினைப் போல விலைவாசியினை உயரவிடாமல், கட்டுக்குள் கொண்டு வந்தால், அதுவே மிகப்பெரிய
சாதனையென்று நான் எண்ணுகிறேன்.


இந்த சமயத்தில் எனக்கு நம் மாநிலத்திற்காகச் செய்யவேண்டியவையென்று சில எண்ணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1. மிக அதிகமாக பெருகிவிட்ட மதுக்கடைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். லாட்டரி சீட்டுக்களைத் தடை செய்த இந்த அரசு, மது விலக்கினை அமுல்படுத்தினால் மிக நன்றாகவே இருக்கும்.

2. அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும், குறிப்பாக சென்னையில்.

3. சாலைகள் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

4. மேம்பால ரயில் நிருத்தங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். சுத்தமாகவும் மக்கள் அமைதியாகவும் பயணம் செய்யும் வகையில் அவை மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள நிருத்தங்கள் அச்சுறுத்தும் நிலையிலும் சரியாக பராமரிப்பின்றியும் உள்ளன. இவையெல்லாம் செம்மைப்படுத்தப்பட வேன்டும்.


உதாரணமாக என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. ரயில் நிறுத்தத்தின் அடித்தளம் முதல், ரயில் வந்து செல்லும் இடம்வரை கடைகளால் நிரப்ப வேண்டும், இதனால் அரசுக்கும் வருமானம் வரும். இந்தக்
கடைகளைத் தனியாரிடம் கொடுத்தால் இன்னும் செம்மையாக இருக்கலாம், சுத்தமாகவும் இருக்கும்.

2. ஒவ்வொரு நிறுத்தத்திலும் காவல் நிலையங்களை நிறுவலாம், இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும், மக்களுக்கு பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும்.

3. சுத்தம் செய்வதற்கென்றே தனியாக பணியாளர்களை நியமனம் செய்யலாம், இதுவும் வேலை வாய்ப்பைப் பெருக்கும். இதையும் தனியார்மயம் ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

4. இதுபோன்ற இடங்களில் நலிவடைந்து வரும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். உதாரணமாக கைவினைப் பொருள் அங்காடிகளை நிறுவலாம்.

5. போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க வேண்டும்

6. பேருந்து நிலையஙளை ஆக்கிரமித்து குடியிருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எல்லா பேருந்து நிலையங்களும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

"காப்பீட்டுத் திட்டம்" போன்ற மக்களுக்குப் பயன்படும் திட்டங்கள் அனைத்தும், எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்பட்டுவிடக் கூடாது. மாறாக அவை அனைத்திலும் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர் நீக்கப்பட்டு வெறும் திட்டங்களின் பெயர்களில் நீட்டிக்கப்பட வேண்டும்.


மின்வெட்டு நிறுத்தப்பட வேண்டும்; சென்னை மட்டுமே தமிழகம் என்ற நிலை மாற வேண்டும். தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்னையில் கிடைக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். [ உதாரணமாக அனைத்து மாநகரஙளிலும் மின்சார ரயில் போக்குவரத்து துவக்கப்பட வேண்டும்.]

கடந்த ஆட்சியில் வரி விலக்கு செய்யப்பட்ட சினிமா தொழிலுக்கு [அதாவது தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்காம்? தமிழ் வளர்ப்பாம்]. இந்த துறையின் மூலம் அதிகமான இழப்பு அரசுக்கு என்பதால், அந்த வரி விலக்கினை உடனடியாக நீக்க வேண்டும், வேண்டுமென்றால் தமிழில் பெயர் வைக்காத திரைப்படங்களுக்கு அதிகமான வரி விதிக்கலாம்.


"பசுமைத் தாயகம் " - என்று பெயரளவில் சொல்லிக்கொள்ளாமல், அதிகமான மரங்கள் நடப்பட வேண்டும், குறிப்பாக சாலை ஓரங்களில்; தற்போதெல்லாம் வெறும் அழகுக்காக மட்டுமே மரங்கள் நடப்படுகின்றன, அதைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு உதவும் விதமாகவும் நமக்கும் ஏற்ற வேம்பு, புளிய மரங்கள் நடப்பட வேண்டும். இதனாலும் வேலை வாய்ப்பு அளிக்கும் வாய்ப்பு உள்ளது, மேலும் அரசுக்கும் இதனால் பண வரத்து அதிகரிக்கும். அதாவது புளிய
மரங்களை ஏலத்திற்கு விடுவதன் மூலமாக அரசு பயனடைய முடியும்.


மாணவர்களுக்கு இலவசமாக தருவதாக கூறி உள்ள "மடிக் கணிணி"களை வழங்காமல், அந்த தொகையில் பள்ளியின் வசதிகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளலாம். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி கணிணிகளைப் பயன்படுத்தும் விதமாக ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுக்கலாம். அதாவது, அந்த வருட மாணவர்கள் மட்டுமல்லாமல் அடுத்து வருபவர்களும் இதனால் பயனடைய முடியும். மேலும் இதற்கான செலவும் மிக அதிகமாகக் குறையும். ஒருமுறை செலவு செய்தாலே மிக நீண்ட நாட்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும்.


விவசாயத்திற்காக இலவசமாக மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விலையினை அதிகரிக்கலாம். இதனால் கள்ளச் சந்தையினை ஓரளவு கட்டுப்படுத்த இயலும் என்றெண்ணுகிறென். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் வழக்கத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவ்வாறு தவறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றெண்ணுகிறேன்.


இலவச மின்சாரம் - இதற்கு ஆகின்ற செலவினை கீழ்க்கண்ட வழிகளில் செலவிடலாம் என்பது எனது எண்ணம்...

1. விவசாயிகளுக்கெனெ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் பணியிடங்களை நிரப்பலாம். உதாரணமாக "உழவு வண்டி ஓட்டுனர்", "மருந்து தெளிப்போர்" போன்றவற்றிற்கு ஆட்களை நியமித்து அவர்களை இலவசமாக விவசாயிகளுக்கு வேலை செய்து கொடுக்கச் செய்யலாம். இதனால் கிராமத்தில் உள்ளோர் பலர் பயனடைவார்கள்.

2. இயற்கை உரங்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க அனைத்து உரங்களையும் இலவசமாக வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அவ்வாறாக இயற்கை உரத்தில் விளைவிப்பதற்கு அதிகமான கொள்முதல் விலையினை அரசு வழங்கலாம்.

3. இவ்வாறாக வசதிகள் வழங்குவதால் அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்படும் என்று கருதினால், அவ்வாறாக விளையும் பயிர்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவினை, அரசு இலவசமாக விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.


சென்ற ஆட்சியின்போது தலைமீது கொட்டு வைத்து "மழை நீர் சேகரித்தது" போலவே இம்முறையும் அதை நடைமுறைப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும். [ நாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் இந்த வசதியினைச் செய்யவில்லை, ஒருவேளை முன்பே இது மிக வழுவாக கட்டாயமாக்கப்பட்டிருந்தால் நாங்கள் நிச்சயமாக செய்திருப்போம் என்றெண்ணுகிறேன்]


அடுத்ததாக "இந்தி" எதிர்ப்பு - நமது தேசிய மொழியான இந்தியினை எதிர்க்காமல் அதைக் கல்வியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எவரோ? என்றோ? எதற்காகவோ? செய்த எதிர்ப்பை (!!??) நாம் இன்னும் தொடராமல் நம் தேசிய மொழியினை கற்க ஆரம்பிக்க வேண்டும். இதுவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும், "BUDGET" கூட்டத்தொடர்களில் என்ன பேசிகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்வதற்காகவாவது இது பயனடையும்.


"தமிழ், தமிழன்" - என்று இன்னும் வெறுமென மார்தட்டிக்கொண்டு வெட்டியாகப் பேசிக்கொண்டிராமல் அதற்கான உருப்படியான வழிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒன்று "இட ஒதுக்கீடானது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்", அனேகமாக இதனை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.


இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகக்கூட இருக்கலாம், ஆனால் இவையெல்லாம் என்னுடைய நீண்ட நாள் ஆசைகள்.... இன்னும் நிறைய இருக்கிறது நேரம் கிடைக்கும்போது கிறுக்கிகிறேன்...


இந்த
மாற்றமாவது வழக்கத்திற்கு
மாறாக,
மாற்றம் கொண்டு வருமா??? -
மாறாமல்
ஏமாற்றமே தருமா?...

மாற்றம் - மாற்றம் தருமா?