Tuesday, January 21, 2020

பனை


தலை நனைக்க,
மழை மறுக்கவே,
தலை மழித்து
மயிரறுந்து நிற்கிறது -
யாரோ எவரோ,
இதற்கோ எதற்கோ,
நட்டு வைத்தோ,
விட்டு வைத்தோ
வளர்ந்த பனை...

Monday, January 20, 2020

என்னடா விளம்பரம் - II

நீண்ட இடைவேளைக்குப் பிறகு எனது பதிவினைப் பதிவிடுவதற்கு  ஏற்றாற்போல, இந்தக் கட்டுரையின் தலைப்பும் பொருத்தமாக வந்துள்ளதாகக் கருதி இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

சமீபத்திய விளம்பரங்களில் என்னை மிக வெகுவாகக் கவர்ந்த விளம்பரம் என்றால் அது, Fevicol விளம்பரம்தான். இந்த விளம்பரத்தில் கிட்டத்தட்ட மூன்று நான்கு தலைமுறைகளைக் காட்டியிருப்பார்கள், நமது கலாச்சார மாற்றங்களையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாடல் வரிகளும் இவ்விளம்பரத்திற்கு ஒரு உயிரோட்டம் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

விளம்பரத்தின் ஆரம்பத்தில், கருப்பு வெள்ளையிலிருந்து தொடங்கியிருப்பார்கள். அப்போதைய கலாச்சாரத்தையும் காட்டியிருப்பார்கள். அந்தக் காட்சியானது 10-15 வினாடிகள் வரும், அந்த மிகக் குறுகிய இடைவெளியில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியிருப்பார்கள். வீட்டிற்கு வந்த மருமகள் அவ்வளவு அடக்கமாக, கட்டுப்பாடாக இருப்பது போல அந்தக் காட்சியானது இருக்கும். புது மணப்பெண் பவ்வியமாக தரையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார், அவரது மாமனாரோ அருகில் ஒரு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருப்பார். அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நாம் கடந்து வந்த காலங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

கணவனும் மனைவியும் கை கோர்த்து நடிப்பதை அநாகரிகமாக கருதிய காலத்தில் ஆரம்பித்து, இருவரும் அன்யோன்யமாக ஒரே "Sofa"வில் அமர்ந்து இருப்பதுவரை காட்சிப்படுத்தியிருப்பதைத்தான் நான் குறிப்பிட்டு சொல்கிறேன்.


நாட்டாமை வீட்டுக்கு புதுப்பொண்ணு வந்தா...
கூடவே வந்தது "Two Seater Sofa"...
 
நாட்டாமை வீட்டுக்கு வந்தது "Sofa",
நாட்டாமைகாரம்மா "Sofa" ஆச்சுது...
 
நாட்டாமை தங்கச்சி மணக்கோலம் போட்டா
"Sofa"வும் மாறிச்சி கெட்டப்பை மாத்தி...
 
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
..
..

என்னதான் பல தலைமுறைகளைக் கடந்தாலும், காலங்களைக் கடந்தாலும் பல சூழ்நிலைகளைக் கடந்தாலும் - இவை அனைத்தையும் தாண்டி உறுதியாய் நிற்கும் அந்த "அசைக்க முடியாத" நம்பிக்கையினை மிக அழகாக காட்சிப்படுத்தியது வெகுவாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  இத்தனை தலைமுறை/வருடங்கள் கடந்தும் நிலைத்திருக்கும் அந்த "Sofa" வின் உறுதித்தன்மைக்கு "Fevicol"தான் காரணம் என்பதை காட்சியின் மூலம் மட்டுமே கொடுத்திருப்பது இன்னொரு சுவாரசியம். ஒட்டுமொத்த சிறப்பையும், அவர்களுடைய பொருளுக்கு மட்டுமே கொடுக்காமல், அதைச் செய்பவரை முன்னிலைப்படுத்தி கொடுத்திருப்பது - மிகச் சிறப்பு. இறுதியாக பாடலை  முடிக்கும்போது மிகச் சிறப்பாக இருக்கும்.
அட கல்யாணம் பண்ணாலும் இல்லேன்னாலும்
"Sofa" வ பண்ணு மனசு விரும்பி...
  

Similar Previous Post

Monday, January 13, 2020

நம்ம ஊரு நாட்டாமைகள்

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் ஆகட்டும், நமது மன்னர் ஆடசிக் காலத்தில் ஆகட்டும் - பெரும்பாலும் பலரும், தர்ம நெறியில் வாழ்வு மேற்கொண்டதை நமக்கு   எடுத்துச் சொல்கின்றன.

"நம்முயிர்க்கு மேல - மான மரியாதை
மானம்  இழந்தாலே - வாழத் தெரியாதே"

உயிருக்கு மேலாக தமது மனத்தை பெரிதாய் கருதி வாழ்ந்தோர், வாழ்வோர் பலர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்கூட நஞ்சுதான். அதுபோலத்தான் இந்த மானப் பிரச்சினையும், அதீத கட்டுப்பாடானது - வறட்டு  கௌரவம் இன்னும் பல பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடுகிறது. தான் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, அதை மீற முடியாது போனதால்தான், அவையில் கட்டுண்டு கிடந்தார் பீஷ்மர், அன்றவர் - எது தர்மம் ( சூழ்நிலைக்கேற்றாற்போல) என்று அறிந்து - அவையில் வெகுண்டிருந்தால், பாரதப் போரொன்று நிகழாது போயிருக்கும். இந்த மானப் பிரசினைதான் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை மறுதலிக்க இயலாது. நான் இதை பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் எழுத எத்தனிக்கவில்லை.  இப்படிப்பட்டவர்கள் இன்னும் நம்மோடு இருக்கிறார்களா என்ற எனது கேள்வியே இக்கட்டுரையின் கரு.

சற்றே நிதானித்து யோசித்துப் பார்த்தால் - ஏன் இல்லை, என்ற பதில் என்னுள் விழுந்தது. சிறு வயதில், நாம் விளையாடும் பல போட்டிகளுக்கும் நடுவர் என்று ஒருவர் இருந்தே தீர வேண்டும். உதாரணத்திற்கு கிரிக்கெட் போட்டியை எடுத்துக் கொள்வோம். அப்படி நடுவராக இருப்பவரை எப்படித் தேர்வு செய்வோம், அதுவும் இரண்டு ஊர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியென்றால்?


இருதரப்புக்கும் பொதுவான ஒருவரைத்தான் தேர்வு செய்வோம். அவர் இருவருக்கும் பொதுவாகத்தான் இருப்பார். சில நேரங்களில் அவர் நமது எதிரணியினை சார்ந்தவராகக் கூட இருப்பார். இருந்தாலும் எந்நிலையிலும் நடுநிலை தவற மாட்டார். நடுவர் என்று இல்லை, விளையாடும் நபர்களில்கூட சிலர் இப்படித்தான் நியாயமாக நடந்து கொள்வர். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அவ்வளவுதான்.

நண்பர்கள் இருவருக்குள்ளோ, அல்லது பிடிக்காத இருவருக்குள்ளோ ஒரு பிரச்சனை என்றாலும் நடுநிலை செய்வதற்கு ஒருவர் இருப்பார். அவர் பெரும்பாலும் இருவரின் நண்பராகவும் இருப்பார்.  அவர் மத்தியஸ்த்தம் செய்து வைத்தால் இருவரும் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவிற்கு அவர் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள், அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய நடுநிலையாகத்தான் இருக்கும், மேலும் இருவர் மீதும் அவர் கொள்ளும் அக்கறையாகவும் இருக்கும்.

தன்னுடைய செயல் பிறரை காயம் செய்யக்கூடாது என்றெண்ணும் ஒவ்வொருவரும் நம்ம ஊர் நாட்டாமைகள்தான்...

நான் முன்பிருந்த இடத்தில், ஒருவர் ரிக்ஸா ஒட்டி பிழைத்துக் கொண்டிருந்தார், அவருக்கு ஒரு  கை இருக்காது. இருந்தாலும் அவர் எவர் தயவையும் நாடாது, தானாக உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்தாலே ஒரு "Energy" கிடைக்கும். அந்த அளவிற்கு அவர், சந்தோசமாக, தைரியமாக,  தெனாவெட்டாக, திமிராக தனது வழியில் வாழ்ந்து கொண்டிருப்பார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எவரைப் பற்றியும் வீணாக பேச மாட்டார். ஒய்வு நேரத்தில், இருக்கும் ஒரு கையில் பீடியை இழுத்துக் கொண்டு, தானாக சந்தோசமாக பாடி கொண்டிருப்பார்.

"நான்தான்டா என் நாட்டுக்கு ராஜா" அந்த மாதிரி இருப்பார். தன்மானம் இழக்காது அடுத்தவர் உழைப்பை சுரண்டாது வாழும் ஒவ்வொருவரும் "நம்ம ஊர் நாட்டாமைகளே".

எனது பேருந்து பயணத்தின்போது நான் சந்தித்த ஒரு நடத்துனர் என்னை வெகுவாகக் கவர்ந்தார். படியில் நிற்பவர்களை உள்ளே வர சொல்லிக் கொண்டேயிருந்தார், ஒவ்வொரு நிறுத்தத்திலும் "மெதுவாக இறங்குங்கள், பஸ் நின்ன பிறகு இறங்குங்க" என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இது எல்லாரும் செய்வதுதான் - இவர் இதை சொல்லும்போது பலரும் அவரை சட்டை செய்யவில்லை, இருந்தாலும் அவர் அவரது பணியில் கவனமாக இருந்தார், ஒருமுறைகூட எவரிடமும் கடிந்து கொள்ளவில்லை. அவரது வார்த்தையில் ஒரு கனிவு இருந்தது.

பயணத்தின்போது தவறவிட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்த நபர் என்று அவ்வபபோது செய்திகளில் அடிபடும்போது "இன்னும் நல்லோர் இருக்கிறார்கள்"  என்று மனம் ஆனந்தம் கொள்ளும்.


சில போக்குவரத்து காவலர்களை உற்று நோக்கினால் அவர்கள் எவ்வாறு தங்களது பணியில் மெனக்கெடுகிறார்கள் என்பது விளங்கும். நான் பயணித்த சாலைகளில் என்னை சிலர் கவர்ந்து இருக்கிறார்கள். ஒரு சிலர், ஒழிப்பு பெருக்கி வைத்துக் கொண்டு "நிதானமாக செல்லுங்கள், "Signal" பார்த்து அதற்கு மதிப்பளித்து செல்லுங்கள், வேகம் அதிகரிக்கும்போது உங்கள் வீட்டை நினைத்துப் பாருங்கள். "Helmat" தலையில் போடுவதற்குத்தான், "Petrol Tank"-கிற்கு அல்ல" என்பதை மணிக்கணக்காக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒரு சில  காவலர்கள்,  "Signal" இல்லாத இடங்களில், நடனமாடுவது போல செய்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவார்கள்.

தன் தொழிலை ஆத்மார்த்தமாக செய்யும் எவரும் ஒரு வகையில் "நம்ம ஊர் நாட்டமைதான்". அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அவ்வளவுதான்

Wednesday, January 8, 2020

அட ஞான சூனியம்

இசையினைப் பற்றிய எனது புரிதல் மிகக் குறைவுதான், அதை  ரசிப்பது மட்டுமே எனக்கு தெரிந்த விஷயம், அதுவும்   எனது  மனதிற்கு  பிடித்திருந்தால்  மட்டுமே . இசையறிவு இருந்தால்தான் இசையினை ரசிக்க வேண்டுமென்பதில்லை, ரசிப்பதற்கு பல வழிகள் உள்ளது, அதற்கு முதலாவதாக ரசிப்பதற்கு நாம் செவி சாய்த்தாலே போதும்.இந்தக் கட்டுரையில், இசை பற்றிய புரிதல் இல்லாமல் நான்  ஏதாவது எழுதியிருந்தால்  சுட்டிக்  காட்டவும். எனக்கு  மிகப் பிடித்த  பாடல்கள்  பலவற்றுக்கும், பாடல்  வரிகள்  வெகு சிலவற்றிற்கு மட்டுமே முழுதாகத் தெரியும்,  மற்ற பாடல்களுக்கெல்லாம்  வெறும்  இசை  மட்டும்தான்  நினைவில் இருக்கும். மிகப்  பிடித்தமான பாடல்களுக்கே அப்படியென்றால் , பிற  பாடல்களைச்  சொல்லவே  வேண்டாம்.

பாடல்களை  ரசிக்கும்  எனது  நண்பர்களில் பெரும்பாலோனோர், அவர்கள்  மனதுக்கு  நெருக்கமான  பாடலின் அனைத்து  வரிகளையும்  நினைவில்  வைத்து இருப்பதைக்  கண்டு ,எனக்கு  நானே  கேட்கும்  கேள்வி  இதுதான். நாம் பாடல்களை ரசிப்பேன்  என்று  சொல்வது உண்மைதானா? அப்படியெனில், ஏன் நம்மால் பாடல் வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை? ரசிகன் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா? அல்லது, இசையினை மட்டுமே ரசிக்கும் பழக்கம் உள்ளதா? நான் ரசிப்பது  இசையையா ? அல்லது  பாடல்  வரிகளையா ? அல்லது  இரண்டும்  கலந்ததா? சரி நிதானித்து யோசித்துப் பார்த்தால், இவை அனைத்தும்தான் எனது பதிலாக வந்தது, இதைத்தான் இந்தக் கட்டுரையில் நான் கொடுத்திருக்கிறேன். அதாவது  சில  பாடல்கள்  அதன்  வரிகளுக்காகவும், சில இசைக்காகவும்  சில இரண்டிற்காகவும்தான்.

மனதிற்கு நெருக்கமான பாடல்கூட, வரி மறந்து போகும்போது, அந்த இசையோடு "லா லா லா" என்று முணுமுத்து பாடலை நிறைவு செய்யும்போது தோன்றுகிறது - பாடகரும் ஒருவித இசைக் கருவிதான் என்று, அதனால்தான் பாடகர் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதவில்லை. பெரும்பாலான பாடல்களுக்கு உயிர்ப்பினைக் கொடுப்பவர்கள் பாடகர்கள்தான் என்றாலும், என்னை பொறுத்தவரை இசையினை முன்னதாகவும், பாடகரை அதற்கு அடுத்த இடத்திலும் வைக்கிறேன்.

ஒரு  சில  பாடல்களை , அது  பாடப்பட்ட  ராகத்தில்  (முறையில் ) இருந்து  வேறு  ஒரு  பாணியில், வேறு ஒரு முறையில், பாடினால் கூட ரசிக்கத்தக்கதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு , சதி  லீலாவதி  படத்தில்  கமல் அவர்கள் பாடுவது மாதிரி
மாறுகோ  மாறுகோ  மாறுகையி...
அடி ஜோருகோ ஜோருகோ..ஜோறுகயி
ஒரு சில ராகங்கள் மனதோடு லயித்துப் போகும்போது , அப்படி மனதோடு படுத்தூடும் பாடல்களுக்கு வேறு  சில வார்த்தைகளை  போட்டு  பாடும்  வழக்கமும்  உண்டு, என்னைப் போல் பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் . உதாரணமாக நாம் பார்க்கும் வாசகங்கள்கூட அந்தப் பாட்டாக பாடும் தருணங்களும் வருவதுண்டு. சாலையில் வாகனத்தில் செல்லும்போது அறிவிப்புப் பலகையில் காணும்  "பாலங்களில்  (நீங்கள்)  முந்தாதீர் , வளைவுகளில்  (நீங்கள்)  முந்தாதீர் " வாசகங்கள், "காலங்களில்  அவள்  வசந்தம்" பாடலாக பாட வைக்கிறது இந்த வாசகங்கள்.

அடுத்த பாடலுக்கான(குறளுக்கான) ராகம்/தாளம் மட்டும் கொடுத்துள்ளேன், அது என்ன பாடல் என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்  புருசல் தரும்
 
பாடல் ராகம்/தாளம்#
தண்-ணென்ன-நன்னா.....-தன்-னண்ணா....-நன்-னா
தன்னா....நா-னென்னா

இந்தக்  கட்டுரையில்  குறிப்பிட்டு  சொல்ல  வேண்டிய  ஒன்று , மிகப்  பிடித்த  பாடலை  வேறு ஒரு வாத்திய கருவியில் (பாடுபவரையும் சேர்த்துதான்) கேட்கும்போது  அது  ஒரு  புது  விதமான  ஒரு ஈர்ப்பினை தருகிறது. இதில் , மேலும் குறிப்பாக சொல்வதென்றால் , ஒரு  சில இடங்களில்  சில ஏற்ற இறக்கங்களோடு கேட்டாலும்  அத்தனை  இனிமையாக இருக்கும். உதாரணத்திற்கு சில பாடல்களின் இணைப்பினை கொடுத்திருக்கிறேன்.

"தென்றல்  வந்து  தீண்டும்  போது"# 
"சங்கத்தில்  பாடாத  கவிதை" #

பல இன்னிசைக் கச்சேரிகளில் பாடுபவர் அவருடைய ரசிப்பிற்கு ஏற்ப சில பாடல்களில், சில இடங்களில் பாடுவதுண்டு. இதற்கு சிறந்த உதாரணமாக விளக்கு வச்ச நேரத்துல என்ற பாடல் எவ்வாறு உருவானது என்பதைக் கேட்டுப்பாருங்கள், பாக்கியராஜ் அவர்கள் கொடுக்க நினைத்த ஒன்றை, இளையராஜா அவர்கள் எவ்வாறு மாற்றிக் கொடுத்திருப்பார் என்பது புரியும்.


எந்தவொரு பாடலையும் அதன் உயிர்ப்பு குறையாது பாடினால் நிச்சயமாக ரசிக்கலாம். அதைவிடுத்து, பாடலை வேறு மாதிரி பாடுகிறேன்/ இசைக்கிறேன் என்று கொல்ல கூடாது. பழைய பாடல்களை இப்போதைய "Trend"கு மாற்றி பாடி/இசைத்து கொல்லும் சில பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதுபோல பல பாடல்களை உதாரணமாக சொல்லலாம், ஒவ்வொரு பாடலுக்கும் அத்தனை மெனக்கெடல்கள் உண்டு. ஒரே பாடலை பலவிதமாக ஒரே படத்தில் கொடுத்து அசத்தி இருப்பார் நம்ம அவர்கள். சொன்னால்தான் காதலா படத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவில் கொடுத்திருப்பார்.
சொன்னால்தான் காதலா ... (மூன்று விதமாக)
தளபதியில் வரும் "சின்ன தாய் அவள்",வள்ளியில் வரும் "என்னுள்ளே  என்னுள்ளே" போன்ற என் மனதோடு நெருக்கமான பாடல்களை , மிக  மெதுவாக , அதுவும்  சிறிது  இடைவெளி  விட்டு  பாடும்போதோ, அதை  அப்படிக் கேட்கும்போதோ கூடுதலாக ஒருவித  உணர்வு  வருகிறது.

சில பாடல்களுக்கு "Humming" மட்டும் போதுமானது. அவதாரம் படத்தில் வரும் "தென்றல்  வந்து  தீண்டும்  போது" பாடலுக்கு "தன்ன-நன-நான-நான-நான-நான-நா......., தனன--நா" என்று முணுமுணுத்தாலே போதும், அந்த உயிர்ப்பு வந்துவிடும்.

பாடகரையும்/பாடலாசிரியரையும் இசையமைப்பாளரையும்  வேறுபடுத்தி காட்ட வேண்டுமென்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. உடல்மேல்  உயிர்  வந்து ஒன்றுவது இயல்பே  எனும் விதிப்படி  - இசையும் , வரிகளும் ஒன்றோடொன்று கலந்தால்தான் அதற்கு  மதிப்பு  வலுப்படும். இதில் உயிரெது, மெய்யெது என பிரிப்பது அவரவர் ரசனையினைப் பொறுத்தது.

பி .கு:  என்னதான் சிறந்த இசையாய் இருந்தாலும், சிறந்த வரிகள் இருந்தாலும், பாடும்விதத்தில்  பாடினால் ,இசைக்கும் விதத்தில்  இசைத்தால்  மட்டுமே  ரசிக்க  முடியும்-இல்லையெனில்  வெறுத்து  விடும். ஒருவேளை  இந்தக்  கட்டுரையும் , நான் எழுத  வேண்டிய  விதத்தில்  எழுதாமல்  வேறு  விதத்தில்  எழுதியிருந்தால்  உங்களுக்கு  ஏற்படும்  அந்த  உணர்வுதான்  "அட  ஞான சூனியம்".