Tuesday, July 22, 2014

ஹே ராம்...

மு.கு: ஹே ராம் - இந்தப் படத்தின்மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பின் நூற்றில் ஒரு பங்கினைத்தான் இங்கே ஒரு துரும்பாகப் பதிவு செய்கிறேன். 'ஹே ராம்' எனும் படத்தினைப் பற்றிய பதிவுகளில் ஒரு துரும்பாகவேனும் எனது இந்தப் பதிவு இருக்க வேண்டுமென்று இந்தப் பதிவினை நான் பதிவு செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும், திருத்திக் கொள்வேன்...

2000 - பிப்ரவரி மாதம், அந்த சமயத்தில் இந்தப் படம் வெளிவந்தது கூட பலருக்குத் தெரியாது. அந்தள விற்குப் படம் பயங்கரத் தோல்வியடைந்தது. அப்பொழுது எங்கள் பகுதியில், புதுப் படங்களைப் பார்க்க வேண்டுமென்றால் வெகுதூரம் செல்ல வேண்டும், என்னால் அப்போது அப்படத்தைப் பார்க்க இயலாமல் போனாலும் அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பிருந்தது. அந்தப் படத்தின் பாடல்களைக் கேசட்டில் பதிவு செய்து அவ்வப்போது கேட்பதுண்டு, அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்குமே தனித்தனியாக பல பதிவுகளை எழுதலாம் உருகி, உருகி... இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட முன்றாண்டுகளுக்குப் பிறகே என்னால் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது.


இந்தப் படத்தினை டீவியில் ஒளிபரப்பினால், பைத்தியக்காரனாய்ப் பார்க்கும் சில ரசிகர்களில் நானும் ஒருவன். படத்தின் நீளத்தைக் கேட்டவுடனே பலரும் படம் பார்க்கும் ஆவலைக் குறுக்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தப் படமானது கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியது.

படத்தின் ஆரம்பக் காட்சியானது, வயது முதிர்ந்த 'சாகேத் ராமின்'  இறுதி கால கட்டத்திலிருந்து தொடங்கும். அவரின் பின்னோட்டமாக நமக்கு முன்னால் படம் விரிந்து செல்லும். ஒவ்வொரு காட்சியிலும் கமலது முயற்சி மட்டுமல்ல, இந்தப் படத்தில் பங்கு பெற்ற எல்லோரது முயற்சியும் தெரியும் அளவிற்கு அத்தனை நேர்த்தியாக படமானது பயணிக்கும். குறிப்பாக அந்தப் படத்திற்கெனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலர், ஆடைகள், இடங்கள், ஆட்கள் என அனைத்தும் அழகாக,ஆழமாக இருக்கும்.. மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் படமானது, சாகேத் ராமின் முதல் மனைவியின், மரணத்திற்கு முன்னும் பின்னும், படுவேகத்தில் பயணிக்கும். அந்த வேகத்திற்கு அணை போட்டு தடுப்பது போல, சாகேத் ராமிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

இதனிடையே இரண்டு பாடல்களைப் படமானது கடந்து வந்திருக்கும், அதிலும் குறிப்பாக,
 நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
 நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
 அயராத இளமை சொல்லும் நன்றி, நன்றி...
ஆகா, எவ்வளவு ஒரு அற்புதமான பாடல். அப்படியே, ஒரு சோக இழை பின்னூட, காதல் ரசம் சொட்ட சொட்ட, விரக தாகம் தவிக்க தவிக்க, இசையினைக் கொட்டி, பாட்டாய் வடித்து... அடப் போங்க ராசா சார், உங்களை இந்தப் பாடல் இசை அமைத்ததற்கு பாரட்ட எனக்குத் தெரியவில்லை என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை... ஒன்றுமில்லை, ஒரேயொரு இசைக் கருவி கொண்டு பட்டையினைக் கிளப்பியிருப்பார்.

முதல் மனைவியின் மரணத்திற்குக் காரணம் அடுத்த மதத்தவர்களே, என்று மூளை சலவை செய்யப்படுவார் மேலும் இதற்கெல்லாம் ஆணி வேர் காந்தியென்றும் துண்டிவிடப்படுவார். பின்னர் காந்தியினைக் கொல்வதற்கும் மூளைச் சலவை செய்யப்பட்டு, அந்தக் கூட்டத்தினரின் சேர்கையோடு படம் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ராம நவமியில், அடுத்ததாக வரும் அந்தப் பாடல்.
இசையில் தொடங்குதம்மா.. விரக நாடகமே,
வசந்தம் கண்டதம்மா, வாழும் வாலிபமே...
ஆனால் படத்தோடு பார்க்கும்போது, அப்படி ஒரு பாடல் வருவதாகவே தெரியாது, அது அந்தப் படத்தோடு ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைத் தனியாகக் கேட்கும்போது, இதற்காக இளையாராஜாவும், இந்தப் பாடலையும் பாடிய அஜய் சக்கரவர்த்தியும் எப்படி இந்தப் பாடலோடு ஒன்றிப் போனார்கள் என்பதை உணர முடியும். எனக்கு, இந்தப் பாடலைப் பாடியவரைப் பற்றிய வேறு விவரம் தெரியாது, ஆனால், இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு உயிரோட்டமாகப் பாடியிருக்க இயலாது. மயக்கும் குரலில், மயங்கடித்திருப்பார் இவர். சில இடங்களில் பாடல் பாடுபவர் இசைக்காகப் பணிந்து போவார், சில இடங்களில் பாடுபவருக்காக இசையானது பணிந்து போகும். குறிப்பாக இந்த வரிகளில்
தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
இசைக்கும் வாயுண்டு என்பது இந்தப் பாடலைக் கேட்டால் புரியும். பிச்சுட்டீங்க ராசா சார்.

இதற்குப் பின்னர் சாகேத் ராம், தனது மனைவியிடமிருந்து பிரிந்து செல்லும்போது ஒரு கடிதம் எழுதி விட்டுச் செல்வார். அந்தக் கடிதம்கூட ஆயிரம் கவிதை சொல்லும், அதிலும் குறிப்பாகக் கடைசி வரிகள்... எப்படித்தான் இப்படியெல்லாம் முடியுதோ
 நீ எனக்கு வாய்த்தது, நான் செய்த புண்ணியம் என்றும்...
 நான் உனக்கு வாய்த்தது நீ என்றோ செய்த பாவம் என்றும் கொள்க...
பின்னர், அவர் தன் பூணூல் அறுத்து, காந்தியினைக் கொல்ல முனைவதும், பின்னர் நடக்கும் மற்றுமொரு மதக் கலவரத்தில் தன் மதத்தவராலேயே, தனது ஆறுயிர் நண்பன் கொல்லப்படுவதைக் கண்டதும் இது நாள்வரை, அடுத்த மதத்தவர்கள் மட்டும்தான் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற எண்ணத்திலிருந்து மாறுபடுகிறார். காந்தியினைக் கொல்லும் எண்ணத்திலிருந்தும் விடுபட்டு அவரிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் முன் காந்தி கோட்சேயால் சுட்டுக் கொல்லபடுகிறார்.

இத்தோடு, படமானது பின்னோட்டத்திலிருந்து நிகழ் காலத்திற்கு மீண்டும் பயணிக்கிறது. அப்போதும் அங்கு கலவரம்தான் இரு பிரிவினருக்கிடையே. நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் சாகேத் ராம், அந்தக் கலவரத்தால், மருத்துவமனை செல்ல இயலாமல் இறந்துபோக, கலவரமும் கட்டுக்குள் வருகிறது. இறுதியாக, அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்துவது தன் நாட்டிற்காகப் பாடுபடும் ஒரு முஸ்லீம் அதிகாரி என்பதை அவரின் பெயர் என்னவென்று சொல்வதோடு அந்தக் கலவரக் காட்சி நிறைவு பெறும். இந்திய ஒருமைப்பாட்டை இதைவிட நாசூக்காகக் காடுவது எப்படி?

படம் முடியும் தருவாயில், அவரது சேகரிப்புகளை, காந்தியின் பேரன் பார்வையிடுவதோடு படம் முடிவடையும், அப்போது அந்தப் பாடலானது ஒலிக்கும், கமலும் அவரது மகள் ஸ்ருதியும் பாடியிக்கும் அந்தப் பாடல்...

... ராம் ராம்... ராம் ராம்
நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு
அன்பெனும் ஓர் சொல் இது
ஆத்திகம் சொல் இன்பமாய்
இங்கே யாரும் இல்லையே

2 comments:

David said...

வினோத் .இதை படித்தபின் இன்னும் ஒரு முறை படைத்த பார்க்க தோணுது.

வினோத் குமார் இராமச்சந்திரன் said...

:) நானும்தான் பார்ப்பதற்கு ஆவலாய் உள்ளேன்