Thursday, July 11, 2013

நெஞ்சில் நின்றவை


சமீப காலங்களிலெல்லாம் நல்ல தரமான குறும்படங்கள் அதிகமாகவே வருகின்றன, அவற்றில் பார்க்கக் கிடைத்த சிலவற்றுள் என்னை வெகுவாகக் கவர்ந்த ஒரு குறும்படம்தான் இது.




இதில் நடித்திருக்கும் பெரியவர் என்று சொல்வதற்குப் பதில் இதில் பதிந்திருக்கும் அந்தப் பெரியவரின் ஒரு நாள் வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக அந்தக் கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விட்டார்.

இதில் ஒரு காட்சியினைக் குறிப்பிட்டுச் சொல்லியேதீர வேண்டும். வேலை முடிந்ததும் அந்தப் பெரியவருக்கு உணவுப் பொட்டலம் கொடுத்து அனுப்புவார் அந்தக் கடைக்காரர். அதை வாங்கியபிறகு என்னதான் அவர் அந்த வேலை செய்யக் கடினப்பட்டாலும், வேலைக்கு கூலியினை பெறும்போது மிகவும் பவ்வியமாக வாங்குவார்,மேலும் ஒரு வணக்கமும் செய்வார்.

"அன்பிற்கேது மொழி? உணர்விற்கேது மொழி?", இதனால்தான் என்னவோ இயக்குனர் இந்தப் படத்திற்கு வசனம் என்று தனியாக எதையும் வைக்கவில்லை. மாறாக நம்மையே வசனகர்த்தாவாக ஆக்கிவிட்டார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

சாலமன் பாப்பையா உரை: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்

::காட்சிகளே கவிதையாய் - குணா::

சில படங்களில் நல்ல கவிதைகள் கொண்ட பாடல்கள் தனியாய் தெரியும், சில படங்களில் பாடல்கள் ஏன் இருக்கிறது என்று தோன்றும். வெகு சில மட்டுமே அந்தப் படமே கவைதையாய் தெரியும். நல்ல படமென்றால் எப்பொழுதும் பார்க்கலாம், அதுவே நல்லவொரு கவிதையென்றால் பார்க்கும்போதெல்லாம் ரசிக்கலாம்,இலயிக்கலாம். அப்படி சமீபத்தில் பார்த்து ரசித்து, இலயித்த கவிதைதான் "குணா"...

இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதில் ஓடும் பாடல் இதுதான்; "பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க, காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க..."


இயல் இசையாய் ஒலித்ததும் இந்தப் படத்தில்தான், இசை இயலாய் மாறியதும் இந்தப் படத்தில்தான்...

தனக்கென ஒரு தேவதை போன்ற தெய்வப் பெண் துணையாய் வருவாள் என்று நம்பிக்கையூட்டப்பட்ட, மன நலம் பாதிக்கப்பட்ட (?) ஒருவரின் பைத்தியகாரத்தனமான காதல்தான் இந்தக் கதையின் கரு, மன்னிக்கவும் கவியின் கரு. குழந்தைக்கும்,வளர்ந்த பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசமே அவர்கள் நடந்துகொள்ளும் விதமும், சூழலுக்குத் தக்கவாறு தங்களை பாதுகாத்துக் கொள்வதும்தான். அப்படி இல்லாவிட்டால் சிறு வயதில் குழந்தையென்பர், வள்ர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் "மன நலம் குன்றியவர்" என்பர். அப்படிப்பட்ட ஒருவரது காதல்தான் இந்தக் கதையின் கரு.


சிலையும் சரி, கவிதையும் சரி ஒவ்வொரு அடியிலும் சிற்பியின் கைவண்ணம் இருக்கும், அடி அடியாக செதுக்கி இருப்பார்கள். அப்படித்தான் இந்தப் படமும், ஒவ்வொரு காட்சியும் செதுக்கி இருப்பார்கள். இது கலைமேல் கொண்ட காதலா? அல்லது காதல் மேல் வளர்த்த கலையா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் படம் முழுதும் என்னைக் கவர்ந்த பல காட்சிகள் இருக்கின்றன, அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவே இந்தப் பதிவு...


..காட்சியமைத்தவருக்கும் சரி, இசையமைத்தவருக்கும் சரி, வசனகர்த்தாவிற்கும் சரி அந்த சிவகாமியின் அருள் இருந்திருக்கத்தான் வேண்டும் (அவரவர் பணிமீது தீரா காதல்)...


சிட்டுக்குருவியையும் ஒரு பாத்திரமாக்கி அதனோடு பேசுவதும் கவிதைதான்.



மருத்துவ உதவிக்கு அழைத்துவரும் மருத்துவர், மலைக்கு வந்ததும் இவரைத் தாக்கிவிட்டு கதா நாயகியை அழைத்துச் செல்ல முற்படுவார். ஆனால் அவள் அதற்கு மறுக்கவே அவனைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிடுவார். அப்போது அவன்(குணா) சொல்லும் அந்த ஒற்றை வரியும் கவிதைதான்...


"எல்லாரும் என்னை அடிக்கிறாங்க..." என்று அழும்போது அவள் சொல்வாள் "... அவங்க பைத்தியக்காரங்க..." என்று...
ஒரு காட்சியில், நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒன்னும் இல்லை என்பார் கதா நாயகி. உடனே கமல் " நம்ம ரெண்டுபேருக்கும் இடையில் ஒன்னும் இல்லைன்னா, நீ ஏன் எனக்கு லட்டு கொடுத்த?அந்த வழிகாட்டிப் பலகை ஏன் உன்னைக் கை காண்பித்தது? இதெல்லாம் எழுதப்பட்ட விதி" என்பார். இதைத் தனித்துப் பார்த்தால், "ஏன்டா, லூசாடா நீ" என்றுதான் சொல்லத்தோன்றும். ஆனால், அப்படியே சில காட்சிகளுக்கு முன்னே சென்று பார்த்தால்,

அந்தக் கோவிலில் முதன் முதலாக கமல், கதாநாயகயியைப் பார்க்கும்போது இளையாராஜா கொடுத்திருக்கும் அந்த இசையினைக் கேட்கும்போது அப்படியே மனம் லயித்துப் போய்விடுகிறது. அந்த இடத்தில் அந்தக் கதாநாயகனது மனநிலை எப்படியிருந்திருக்கும், ஆனந்தக் கூத்தாடியிருக்கும் என்பதை இசையில் கொண்டு வந்திருப்பார். "இதுதான் இலை மறை காயோ?" என்றால் கண்டிப்பாக இல்லை, ஏனென்றால் இசை அவ்வளவு இனிமையாக இருக்கும் அதனால் இது "இலைமறை கனி".


அந்த இசையோடு நம்மையும் கைபிடித்து கோவிலின் கற்ப கிரகம்வரை நம்மை அழைத்துச் சென்றுவிடுவார் நம் "ஜேசுதாஸ்" அவர்கள் "பார்த்த விழி, பார்த்த வழி பூத்து இருக்க..." என்ற பாடலின் மூலமாக.


கதாநாயகி கையிலிருக்கும் கத்தியினைப் பறிக்க முயற்சித்து கையில் காயம்பட்டிருக்கும் கமல், ஆவேசமாக கை நீட்டிப் பேசுவார். அப்போது அவரது கையிலிருந்து ஒரு துளி ரத்தம் அவளின் நெற்றியில் படிந்து வழியும். அப்போது அவளை, அவளின் நெற்றியினைப் பார்ப்பார் பாருங்கள்... "ஆகா, கவிதை கவிதை..."


"கண்மனி அன்போட காதலன் நான், நான் எழுதும் ..." இந்தப் படத்தைத் தெரியாதவர்கள்கூட இருக்கலாம் ஆனால் இந்தப் பாடல் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு ஒரு ஈர்ப்பு உண்டு இந்தப் பாடலில்.


இந்தப் பாடல் உருவானவிதம் எப்படியென்று இந்த "Links"-இல் கேட்கவும்



http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=692 (listen Kanmani Anbodu - (Speech))


என்னடா இவன், நிறைய காட்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு ஒன்றிரண்டிலேயே முடிக்கிறான்னு நினைக்கிறீங்களா? இதற்கு இந்தப் படத்தோட சில வசங்களையே உவமையாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.

"இந்தப் படத்தோட ரசனை முழுதும் உள்ள இருக்கு, எழுத்தெல்லாம் வெளிய இருக்கு".

“எனக்குப் பிடித்த காட்சிகள் என்னன்னு சொல்ல சொல்ல, ரொம்ப இழுத்துகிட்டே போகுது, நான் இழுத்து அதை நீங்க படிக்காம போயிடுவீங்களோன்னு நினைக்கும்போது இழுக்கும் எழுத்துக்கள்கூட நின்னு போகுது.”

Wednesday, July 10, 2013

ஜிம்பளங்கு கொட்டு

எமது கிராமத்து பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் ஒருவித மேள வாத்தியம்... "ஜிம்பளங்கு கொட்டு". வழக்கம்போல, இந்த வருட திருவிழாற்கும் இந்த மேளதாளம் இடம்பெற்று இருந்தது.அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கிவிடும் அளவிற்கு மிகவும் அற்புதமாக அமைத்துவிடுவார்கள்.

கால்களில் சலங்கைகளைக் கட்டிக் கொட்டு இவர்கள் மேளத்துடன் நடனமும் ஆடுவார்கள். பொதுவாக ஐந்தாறு இசையமைப்புகள் செய்வார்கள், அதில் ஒன்றிரண்டு இங்கிருக்கிறது...



பகுதி-2


Tuesday, July 9, 2013

நுங்கு வண்டி


நாமிருவர்
நமக்கிருவராய்,
காய் விட்டுக்கொண்ட
கவட்டைக் குச்சியுடன்
பழம் விட்டுக் கொண்ட
பனங் கூடே;
எதிரும் புதிருமாய்
நீவிர்
நின்றாலும்,
ஏறிச் செல்வதென்னவோ
நேர் திசையில்தான்;

விழி பறித்தோர் முன்
விழிக்கிறாய் மீண்டும்,
விளையாட்டுத் தோழனாய்,இதை
விதியென்பதா?
இல்லை,
உம் பாரம் குறைத்தவர்களுக்கு
நீயிடும் பாசம் என்பதா?

கண்ணிழந்தபின்
பயணத்திற்குத் தயாராகும்
உன்னை,
உண்ணும்போது நுங்கென்பர்;
உண்டபின்
உன்னை எங்கென்பர்;
உன்னைக் கண்டதும்,
காளைகளைப் போல் பூட்டிக்
கடைக் கோடி முதல்
தெருக்கோடிவரை
இட்டுச் செல்வர்...
பணம் கூடாது,
பனங் கூட்டால்
படைப்பர் உன்னை,
பனை நுங்கு வண்டியாய்...

தடியெடுத்தவனெல்லாம்
தண்டல்காரனல்ல - உன்னிலிருந்து
விளைந்த விசயம்தானோ?
செய்வது எளிது,
செல்வதும் எளிது,
செய்ததையும்,
சென்றதையும்
மறப்பது மட்டும் கடினம்...