Monday, April 20, 2020

நான் ரசித்தவை - திரைப்படக் காட்சிகள் (II)

இதற்கு முந்தைய பதிவில் ஒரு சில படங்களில் இருந்து சில காட்சிகளை பற்றி எழுதி இருந்தேன். இந்தப் பதிவிலும் அதுபோல சில காட்சிகளை பார்க்கலாம்.

நான் சென்ற பதிவில் சொன்னமாதிரி, இது எமது வாழ்க்கையினை பிரதிபலிப்பதாக சொல்லி இருந்தேன். சேரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த "வெற்றிக் கொடிகட்டு" படத்தில் பலகாட்சிகள் அப்படித்தான் இருக்கும். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று என்றால், அது வடிவேலு அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி, ஒருவருடன் பேசிக்கொண்டே வரும்போது பார்த்திபன் அவர்களை பார்த்ததும், இறங்கிய பேருந்திலேயே மீண்டும் ஏறி செல்வதுபோல படமாக்கப்பட்டிருக்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் நல்ல நகைச்சுவை காட்சியென்று எளிதாக கடந்துவிடலாம். இதில் ஏதேனும் காட்சிப்பிழையென்று பார்க்க நேர்ந்தால்,  இந்தக் காட்சியானது கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். அவ்வளவு நேரமாக பேருந்து எப்படி அங்கேயே நிற்கும் என சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். 


இதை எமது பகுதியில் நடக்கும் நிகழ்வோடு ஒப்பிட்டு விளக்கினால் அதுவும் சரியென்று படும். எமது ஊருக்கு அருப்புக்கோட்டையிலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ஜெயவிலாஸ் பேருந்தானது ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு பரளச்சி எனும் ஊரினை வந்தடையும். அங்கு வந்ததும் பேருந்தை அணைத்துவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் டீ கடைக்கு டீ அருந்த சென்று விடுவார்கள், அதோடு வடைகளும் அடங்கும். அவர்களோடு சேர்ந்து பேருந்தில் பயணித்த ஒருசிலரும் செல்வார்கள். கிட்டத்தட்ட பத்து நிமிட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பயணம் ஆரம்பிக்கும். அதே காட்சியினைத்தான் இந்தப் படத்திலும் எடுத்து இருப்பார்கள். சற்று, அந்தக் காட்சியின் பின்னால் தெரியும் காட்சிகளை உற்று நோக்கினால் அது விளங்கும். வடிவேலு அவர்கள் இறங்கியவுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இறங்கி டீ கடைக்கு செல்வதை தெளிவாகக் காண முடியும். இது ஒரு காமெடி காட்சிதானே, ஏன் இதற்கு மெனக்கெடனும் என்று இல்லாமல், அவ்வளவு கவனம் செலுத்தி படமாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தை அடுத்த முறை பார்க்கும்போது, பின்னால் தெரியும் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் உற்றுப் பாருங்கள். அவ்வளவு அழகாக எதார்த்தமாக படமாக்கி இருப்பார்கள். குறிப்பாக, பார்த்திபன் அவர்கள் "Given & take Policy" என்று சொல்லும் அந்தக் காட்சியினைப் பாருங்கள், பின்னால் தெரியும் "மாட்டு வண்டியினைப் பழுது பார்ப்பது" மற்றும் காட்சியில் தெரியும் அனைத்தும் அத்தனை யதார்த்தமாய் இருக்கும். 
காட்சியில் முன்னிலையில் வரும் நடிகர்களுக்கு மட்டுமல்ல அந்தக் காட்சி முழுவதும் வருபவர்களுக்கும் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பது எவ்வளவு சிரமம், அதற்கு ஏற்றாற்போல அந்த நேரத்தில் நடிப்பதும் சிரமம்தான்.
அடுத்து நான் குறிப்பிட விரும்புவது, சில கலைஞர்களுக்காவே வைக்கப்படும் காட்சிகள். திரைத்துறையில் வாய்ப்பு என்பது வெகுசிலருக்கு மட்டுமே கிடைக்கும், கிடைக்கும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள் மேலே வருகிறார்கள்,பிறர் மீண்டுமொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படி வாய்ப்பு கொடுப்பதற்கும் ஒரு மனம் வரவேண்டும், அப்படி மனம் இருந்தாலும் அதற்கான காட்சி வேண்டும், அப்படி இல்லாவிட்டாலும் தனியாக ஒரு காட்சியினை வைப்பதைப்பற்றி யோசிக்க வேண்டும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி பல உள்ளன, அந்த வரிசையில் நான் சுட்டிக் காட்ட விரும்புவது, அதிசய பிறவி படத்தில் வரும் ஒரு காட்சிதான்.



இந்தக் காட்சியில் காமெடி நடிகர் கிங் காங்க் என்று அழைக்கப்படும் ஷங்கர் அவர்கள், திறம்பட பிரேக் டான்ஸ் ஆடி இருப்பார். இப்பொழுது யோசித்துப் பார்த்தால், தனது உருவத்தினைப் பற்றிய கிண்டல் கேலிகளைத் தாண்டி தனக்கான ஒரு திறமையினை வளர்த்துக் கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். மேலும் இந்தக் காட்சியினை இவருக்காக மட்டுமே இயக்குனர் வைத்து இருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில் வேறு ஒன்றும் இருக்காது, ஒரு கலைஞனை வளர்த்துவிடமென்று எடுக்கப்பட்ட காட்சியாகத்தான் எனக்கு இது தோன்றுகிறது. இது போல், நிறைய இருக்கலாம், எனக்கு ஞாபகம் இருப்பதால் இதனை இந்தப் பதிவில் எழுதுகிறேன். 


அடுத்து ஒன்றே ஒன்றை மட்டும் பதிவு செய்து நிறைவு செய்கிறேன். ஒவ்வொரு படத்தையும் திரைக்கதை எழுதி அதை படமாக்கும்போது, அவர்கள் நினைத்தபடி வரவில்லையென்றாலோ, வேறு மாதிரி எடுக்க நினைத்துவிட்டாலோ எடுத்த அனைத்தையும் நீக்கிவிட்டு மீண்டும் முதலில் இருந்து எடுப்பார்கள், வெகு சிலர் மட்டுமே இவ்வாறு செய்கிறார்கள். அந்த வரிசையில், கமல் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் அடங்கும். முதலில், கிராமத்து பின்னணியில் ஒரு கதாப் பாத்திரத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதனை, சென்னையில் ஒரு சேரி கதாப்பாத்திரமாக மாற்றி இருப்பார்கள். முதலில் அந்த கிராமத்து பாத்திரத்தில் காந்திமதி அவர்கள் நடித்து இருப்பார்கள், பின்னாளில் மனோரமா அவர்களை நடிக்க வைத்து படமாக்கி இருப்பார்கள். முதலில் எடுக்கப்பட்ட காட்சியில் எத்தனை புது கலைஞர்கள் வாய்ப்பு கொடுக்கப்பட்டும் திரையில் காணாது போயினரோ? இப்படி எவ்வளவோ கடினப்பட்டு படம் எடுத்தாலும், பல நேரங்களில் எதிர்பார்த்ததுபோல அமையாது போய்விடக் கூடும். இதையெல்லாம் தாண்டித்தான் மீண்டும் மீண்டும் புதிய வார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நல்ல முறையில் எடுக்கப்படும் அனைத்துப் படங்களுக்கும் அதற்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும்.   

இதே மாதிரியான முந்தைய பதிவு #  https://anbanvinoth.blogspot.com/2020/04/blog-post_17.html

Friday, April 17, 2020

நான் ரசித்தவை - திரைப்படக் காட்சிகள்

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு அவசியமோ அதைவிட மிக அவசியம் அந்தக் கதைக்கான திரைக்கதை. அப்படி திரைக்கதை அமைக்கும்போது அந்தந்த பகுதிக்கு தேவையான காட்சிகளை வைப்பது மிக மிக அவசியம். ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை திரைத்துறையினரிடம் கேட்டால் நமக்கே ஆச்சரியம் எடுக்கும். இத்தனை சிரமப்பட்டுதான் படம் எடுக்கிறார்களோ என்று, அத்தனை மெனக்கெடல் இருக்கும். அப்படி அவர்கள் அவ்வளவு மெனக்கெட்டு எடுக்கும் பல காட்சிகள் "Editing" என்ற முறையில் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்படும். ஆக, நம் பார்வைக்கு வருவதற்கு முன்பே, அது பலரது பார்வையில் பட்டு, வெட்டுப்பட்டு, திருத்தப்பட்டுதான் நம் முன்னே திரைப்படமாக விரிகிறது.

இத்தனை பேர் பார்த்துமா மோசமான படங்கள் வருகிறது? என்று நம் அனைவர் மனதிலும் கேள்வி எழுவது  நியாயமானதுதான். இருந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்தி எடுக்க முடியாது. மிகச் சிலறால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் பொய்த்து விடுகிறது. அப்படி, நமக்கு காட்சிக்கு வரும் படங்களில், ஒரு திரைப்படமாக பார்க்கும்போது அந்தப் படத்துடன் ஒன்றியோ அல்லது ஒன்றாமலோ பல முக்கியமான காட்சிகளை நாம் நமது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தக் காட்சிகளை அவர்கள் எடுப்பதற்கு அவர்கள் எத்தனை முயற்சி செய்து இருப்பார்கள் என்று யோசித்தால், அடுத்தமுறை படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் இன்னும் கூர்ந்து கவனிக்கவும், படம் பார்த்த பிறகு அதை பற்றிய சிந்தனையும் வரக்கூடும்.

எத்தனையோ மிகச் சிறப்பான படங்களிலும், சுமாரான படங்களிலும் பல சிறப்பான காட்சிகள் இருக்கக்கூடும், இருப்பினும் நான் பலராலும் கவனிக்கப்பாடாது இருக்குமோ என்று எண்ணி ஒரு சில காட்சிகளை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

நமது கவுண்டமணி அவர்கள், ஒரு நாள் வழக்கம்போல படப்பிடிப்பிற்கு தனது காரில் பயணித்திருக்கிறார். அப்போது ஒரு இடத்தில், ஒரு பேருந்து இவரது வண்டியினை இலேசாக இடித்துவிடவே, இவர் கோபப்பட்டு வண்டியிலிருந்து இறங்கி அந்த ஓட்டுனரை நோக்கி விரைந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும் இவரை அடையாளம் கண்டு கொண்டு, அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை கண்டு கொள்ளாமல், அருகிலிருப்போரிடம் "இங்க பாருங்க நம்ம கவுண்டமணி சார், சார் வணக்கம், நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, உங்க காமெடிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்" அப்படின்னு அவரு பேசிக்கிட்டே இருக்காரு. அதற்கு கவுண்டமணி அவர்கள், "அதெல்லாம் இருக்கட்டும், வண்டிய பார்த்தது ஓட்ட மாட்டீங்களா? எனக்கு ரொம்ப கோபம் வருதுன்னு" சொன்னபிறகும், அந்த ஓட்டுநர் மற்றும் சுற்றி இருந்தவர்கள் இவரைப்பார்த்து சிரித்தவண்ணம் இருந்திருக்கிறார்கள். உடனே அவர் வெறுப்புடன் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார், அங்கு இயக்குனருடன் நடந்ததை பற்றி சொல்லி, "நான் என்ன சொன்னாலும், நான் சண்டைக்குப் போனாலும், சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க" என்று முடிக்க,  அந்தக் காட்சியினையே படத்தில் வைத்துவிட்டார்கள்.
அப்படி வைக்கப்பட்ட காட்சிதான் "டேய், யாரவது சண்டைக்கு வாங்கடா" என்று "உனக்காக எல்லாம் உனக்காக" படத்தில் இடம்பெற்று இருக்கும். 
இதை படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அவர்கள்  ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதுமாதிரி எண்ணிலடங்கா காட்சிகள் உள்ளன. எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சில காட்சிகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.


இதைப்போலவே வின்னர் படத்திலும், நடந்த நிகழ்வைக் கொண்டு படமாக்கியதாக இயக்குனர் கூறியதாக ஞாபகம். அந்தப் படத்தின்போது வடிவேலு அவர்களுக்கு காலில் எதோ பிரச்சனை இருந்ததாகவும், அதனால் அந்த படம் முழுவதும் அந்தப் பிரச்சினையினையே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு படம் முழுவதும் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது போல உருவாக்கியதாகவும் கூறிக் கேள்விப்பட்டதுண்டு.

முதன்முதலில் நான் எழுத நினைத்தது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பற்றியதுதான். அந்தப் படத்தில் நாகேஷ் அவர்கள், அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தையிடம், அவரது பெண்ணை படத்தில் நடிக்க வைத்தால் அவர் மிகப்பெரிய பணக்காரர் ஆகலாம், மேலும் தனது தந்தை முன்பே கால்மேல கால் போட்டு அமரலாம் என்று சொல்வார். அதற்கு அவர், உடனே "அய்யய்யோ, அதெல்லாம் தப்பு, என்னோட முதலாளி அவர் முன்னாடி அதெல்லாம் கூடாது, அது மரியாதை இல்லை " என்று சொல்வர். இதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு சாதாரண காட்சியினைப் போலத் தோன்றும். அனால், சற்று யோசித்துப் பார்த்தால், என்னதான் தன்னிடம் திடீரென பொருள் வந்து சேர்ந்தாலும், தான் இத்தனை நாட்களாய் வேலை பார்த்த தன்னுடைய முதலாளி முன்னாள் கால்போட்டு அமர்வதை, அவருக்கு செய்யும் அவமரியாதையாய் என்னும் ஒரு உண்மையான வேலையாள்/விசுவாசியின் எண்ணம் விளங்கும். இதை வேண்டுமென்று வைத்தார்களா அல்லது எதேச்சையாக அமைந்ததா என்று சொல்ல முடியாது, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுப்பது, அந்தவொரு வசனம்தான்.

அடுத்ததாக குணா படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பார்ப்போம். அந்தப் படத்தில் கமல் அவர்கள், அவரது காதலிக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிடச் சொல்வார். அவர் சாப்பிட்டு முடிக்கும்வரை பொறுமையாக காத்திருந்து பின்னர் அந்தப் பெண் சாப்பிட்டு முடித்தவுடன். "என்னது எனக்கு பசிக்கலையான்னா கேக்குற, பயங்கர பசி, என்ன செய்ய தட்டு ஒண்ணுதான் இருக்கு. அதனாலதான் காத்துக் கொண்டு இருந்தேன்" என்று சொல்வார். அதே வேகத்தில் அந்த பெண் சாப்பிட்டு மீதம் வைத்ததை கீழே தட்டிவிட்டு அதில் சாப்பாட்டை போட்டு சாப்பிடுவார். எனக்கு என்னவோ இது வழக்கத்திற்கு மாறான ஒரு காட்சியாகப்பட்டது. குணா எனும் கதாப்பாத்திரம் தான் உயிராய் நினைக்கும் காதலியின் மீத உணவை (கழிவை) கொட்டிவிட்டு அதே தட்டில் உணவு போட்டு சாப்பிடுவது. இதில் மேலும் கவனிக்க வேண்டிய மற்றொன்றுன்று, அவர் அந்த தட்டை சுத்தம் செய்ய மாட்டார்.  

இந்தக் காட்சி இடம்பெற்ற திரைப்படம் எதுவென்று ஞாபகம் இல்லை, அந்தக் காட்சியில் இளவரசு அவர்கள் மளிகைக்கடை நடத்திவருவார். அப்போது ஒரு சிறுவன் வந்து 10 ரூபாய் கொடுத்து "எங்க அம்மா புளி வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று சொல்வான். அதற்கு அவர் "இந்த காசுக்கு புளி கொடுக்க முடியாது" என்பார். அந்த சிறுவன் அடம்பிடித்து நிற்பான், உடனே அவர், கை நிறைய புளியினை உருட்டி எடுத்து வருவார். சிறுவனை ஒரு விரலை மட்டும் நீட்டச் சொல்வார். அவனும் நீட்டுவான், உடனே அந்த புளி உருண்டையில் அந்த விரலை குத்திக் கொண்டு செல்லச் சொல்வார், அதாவது அந்த காசுக்கு அவ்வளவுதான் புளிவரும் என்று சொல்வார். பணத்தின் மதிப்பை அழகாக காட்சிப்படுத்தியதோடு, நம்மவர்களின் குசும்புத் தனத்தையும் சிறப்பாக காட்டி இருப்பார்கள். குறிப்பாக இந்த மாதிரியான சிறு கடைகள், டீ கடைகள் என மக்கள் அடிக்கடி புழங்கும் இடங்களில் அதன் கடை முதலாளி ஆகட்டும், அங்கு வரும் மக்கள் ஆகட்டும் இதுபோல மிகவும் குறும்புத்தனமான நடந்துகொள்வார்கள். என்னை போன்ற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இதை நேரடியாக அனுபவித்து இருக்கக் கூடும். 

அடுத்த பதிவில் என்னை மிகவும் கவர்ந்த, எம்முடைய வாழ்க்கை முறையினை பிரதிபலித்த ஒரு காமெடி காட்சியினை பதிவு செய்கிறேன் மேலும் சில திரைக்காட்சிகளோடு.

Wednesday, April 15, 2020

இதையெல்லாமா எழுதுவாய்ங்க? - பாகம் இரண்டு

மனதிற்குள் எழும் எண்ணங்கள் பலவற்றையும், "இதையெல்லாமா எழுதுவாய்ங்க" என்று கட்டுரை எழுதாமல் விட்டது உண்டு. வெகு சிலவற்றை மட்டுமே ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதுண்டு, பின்னாளில் நேரம் கிடைக்கும்போது அதை விரிவாக எழுதலாம் என்று. அப்படிப்பட்ட கட்டுரையில் ஒன்றுதான் இது. ஏற்கனவே இந்த தலைப்பில் ஒரு பாகம் எழுதி இருந்தேன். ஆகவே இரண்டாம் பாகம் எழுத வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அது முதல் பாகத்தின் கருவாக இருக்க வேண்டும், உரு வேறாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். அன்றாட வேலைகளை முடித்துவிட்டு நமக்கென தனியாக நேரம் ஒதுக்கி தனிமையில் எழுதுவது ஒன்று. இப்போது இருக்கும் ஊரடங்கில்   குடும்பம் குடும்பமாக தனிமையில் இருப்பதால், தனியாக தனிமைப்படுத்திக கொண்டு எழுதுவது சிரமமாக இருக்கிறது. நம்முடைய எழுத்துக்களும் எண்ணங்களும் அனைவரோடும் ஒத்துப்போக வாய்ப்பில்லை. நமது மன நிலையினை ஒத்த சிலருக்கும், அதை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஒத்துப்போகும். அதனால் எழுதுவதென்று ஆகிவிட்டது,நமக்குத் பிடித்துப் போனால் பதிவிடலாம் என்று துணிந்து பதிவிட்டுவிட்டேன்.

நேரம் கிடைக்கும்போது ஏதாவதொரு "blog/website"இல் இருக்கும் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப் படிக்கும்போது, நமது அப்போதைய மன நிலையினையொத்த பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அதை ஏன் எழுதி இருப்பார் என்று யோசிக்க தோன்றும்?  நாம் எழுதுவது யாராவது ஒருவருக்காவது பிடித்து போக வாய்ப்பு உண்டு. அப்படி அவர் அந்தக் கட்டுரையினைப் படிக்கும்போது, எந்தமாதிரியான மன நிலையில் இந்த கட்டுரையினை எழுதியிருப்பார் என்று ஒரு சில வினாடிகள்,  யோசித்துப் பார்க்க துண்டினால் போதும், அந்தக் கட்டுரைக்கு அதுவே மிகப் பெரிய சன்மானம். குறைந்தபட்சம் இதையெல்லாம் ஒரு கட்டுரைன்னு இவன் எப்படி எழுதினான், அப்படின்னு திட்டினாலும் மனம் மகிழத்தான் செய்யும்.





சில நேரங்களில் நீங்களே இதை நேரடியாக அனுபவித்து இருக்கக் கூடும். அன்றாடம் செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள், பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்த செய்திகளை தேடி தேடி படிப்பார்கள். உதாரணத்திற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கடைசி பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். செய்தித்தாளை முழுவதும் படிக்கும் பழக்கம் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கும்.

அப்படி, சில பகுதிகளை ஒதுக்குபவர்கள்கூட, ஒரு சில சந்தர்ப்பங்களில், உதாரணத்திற்கு சலூன் கடையில் காத்திருக்கும்போது, கிடைக்கும் துண்டு பேப்பரில் அவர்கள் அதுவரை படிக்காத பகுதியாக இருந்தாலும் படிக்க நேரிடும். அப்படி அவர்கள் படிக்கும்போது, ஒருவேளை அதில் அவர்களுக்கு பிடித்துப் போனால், அன்றிலிருந்து நாளிதழ் வாசிக்கும்போது,அதுவரை ஒதுக்கிவைத்த பகுதியினையும் சேர்த்து படிப்பார்கள். அதுமாதிரி, எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன், அதை படிப்பதும் பிடிக்காது போவதும் அவரவர் முடிவிற்கே விட்டுவிட்டு நகர்ந்துவிட முடிவு செய்துதான் இதை பதிவு செய்கிறேன்.

தலைப்பு பிடித்தோ,
பொழுது பிடித்தோ (bore)
எதோ ஒன்று பிடித்து (my blog link)
இங்கு வந்தபின்,
இதை படித்துப் பிடித்
தாலும்,
பிடிக்காது படித்தாலும்,
பிடிக்காவிடிலும்
படிக்குமளவிற்கு சொற்களை
படி நிறைய வைத்திருக்கிறேன்,
வேண்டுமெனில் மடிநிறைய
அள்ளிச் செல்லுங்கள் - இல்லையெனில்
தட்டிவிட்டு செல்லுங்கள் (skip / comment)

பி.கு: நாளிதழின் அனைத்துப் பகுதியினையும் படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது, குறிப்பாக ஒரு நாளிதழில் வரும் வாசகர் பக்கம், ஒரு நாள் எதேச்சையாக படித்தபோது, எனக்கு பிடித்துப்போகவே, நான் தவறாது படிக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்றாகிப் போனது.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/06/blog-post_23.html

Monday, April 13, 2020

நான் ரசித்தவை - Tumbbad (2018)

"ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நிறைய நேரம் கிடைப்பதால் அதை குடும்பத்துடன் செலவிடும் நேரம்போக மீதமிருக்கும் நேரங்களில் நல்ல படங்கள் பார்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்". இப்படி எழுத வேண்டுமென்றுதான் ஆசை, ஆனால் நிலைமை தலைகீழ், சராசரி நாட்களைக் காட்டிலும் அதிக நேரம் அலுவலக வேலை பார்க்க வேண்டி உள்ளது. என்னதான் வீட்டில் தனித்து இருந்தாலும், அலுவலகப் பனி இருப்பதால் வழக்கமான நாட்களாகத்தான் செல்கின்றன பெரும்பாலான வார நாட்கள். வார இறுதியில் கிடைக்கும் நேரத்தில்தான் கொஞ்சம் இதுபோன்ற படங்களுக்கும், கட்டுரைகளுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. அந்த வகையில் நான் ஏற்கனவே பார்த்து ரசித்த படங்களும் அடங்கும். அவ்வாறு என்னை வெகுவாக கவர்ந்த ஒரு படத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் எழுதுகிறேன். 2018-ஆம் ஆண்டு "Hindi" மொழியில் வெளிவந்த "Tumbbad" படம்தான் அது. பேராசை பெரு நஷ்டம் என்ற மையக்கருவை தாங்கி வந்த படம் இது.

இந்தப் படம் எவ்வாறு உருவானது என்பது பற்றிய தகவல் சுவாரசியமானது, இந்த கதையினை எழுதியவர் அவருடைய நண்பரிடம் இருந்து ஒரு சிறு குறிப்பாக அவருடை பதின்வயதில் கேட்டு இருக்கிறார். பின்னர் அதை மெதுவாக மெருகேற்றி பல வருட கோர்ப்புகளுக்குப் பிறகு அதை ஒரு திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அதற்கு சரியான தயாரிப்பாளரை அணுகி அதை படமாக்கி பார்த்தும் திருப்தி அடையாமல், மீண்டும் கதையினை மெருகேற்றி கடைசியாக உருத்தரித்திருக்கும் படம்தான் இந்த "Tumbbad". தன்னுடைய கதையினை ஒரு ரசிகனாக அமர்ந்து பார்த்து திருப்தி ஆகாமல், மீண்டும் படைக்கப்பட்ட படம் இது. ஒரு படைப்பாளியிடம் இருந்து வரும் படைப்புகளானது, படைப்பாளியின் கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் அதை காண்பவராது/ரசிப்பவரது கோணத்திலும் பார்த்து அதை வார்த்தால்தான் அந்த படைப்பானது முழுமை பெறும்.

ஒரு படைப்பாளிக்கு, அவருடைய எண்ணங்களை அவருடைய விருப்பம்போல செய்யவிட்டால் அதற்கு பலனாக இதுபோன்றதொரு அற்புத படைப்புகள் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த படம். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை தெளிவாக, அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இந்தப் படத்தின் மிகப் பெரிய ஒரு சொத்து என்று சொன்னால் அது ஒளிப்பதிவுதான், அத்துணை அழகாக இருக்கும். ஒளிப்பதிவிற்கு எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறலாம், அந்த சின்னஞ் சிறு வீட்டில், கைவிளக்கு ஒளியில் அற்புதமாக படமாக்கியிருப்பார்கள். அந்த முதியவர் இறப்பை காட்சிப்படுத்தியிருப்பது, ஓடத்தில் பயணம் செய்வது, நகரத்து தெரு என் அடுக்கி கொண்டே போகலாம். கதைக்களமானது சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் அமைத்திருக்கும் காட்சி அமைப்புகள், அதனை ஒளிப்பதிவு செய்த விதம் - ஆகா அத்தனை பிரமாதம். இசையும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும்பங்காற்றி இருக்கிறது, இவை எல்லாவற்றையும் ஒரு அழகிய மாலையாக உருவாக்கிய பெருமை திரைக்கதை மற்றும் இயக்குனரை சேரும்

இந்த படத்திற்கு அவர்கள் எடுத்திருக்கும் இடம் மிக அற்புதமாக இருக்கும், சபிக்கப்பட்ட கிராமத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும், அந்த கிராமத்துக் கடசிகளைக் காணும்போது, நம் மீது மழை பொழிவது போல இருக்கும். அந்த அளவிற்கு, கதையினையும் காட்சியினையும் வைத்து இருப்பார்கள். நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்ததால் இதுபோன்ற மழை காட்சிகளை அதிகம் ரசிப்பதுண்டு (தாகம் அதிகம் :)).
ஆனால், மழையே பெய்யாதிருப்பது எப்படி ஒரு சாபமோ, அதுபோல மழை பொழிந்துகொண்டே இருப்பதும் ஒரு சாபம்தான். 
குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதிர் பருவம் என மூன்று காலங்ககளிலும் கதையினை நகர்த்தியிருப்பர். படத்தின் இறுதிக் கடசியில் தன்னுடைய தவறை உணரும் நேரத்தில் கதைநாயகன் எடுக்கும் முடிவும், அதன் பிறகு அவரது மகன் எடுக்கும் முடிவும் மிக அற்புதம். கதையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் ஆடை வடிவமைப்பும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசித்து வரவேற்க வேண்டிய ஒரு அற்புத படம்தான் இந்த "Tumbbad"

ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்து தரப்பும் தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து அற்புதமாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இது போன்றதொரு படைப்பை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.  பேராசை பெரு நஷ்டமாகாத்திருக்க வேண்டும்!!! :) 

மொட்டைக்கும் முழங்காலுக்கும் - பாகம் இரண்டு

வயதிற்கும், நமது அணுகுமுறைக்கும், எண்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டா என்பது தெரியவில்லை. ஒருவேளை, நமக்கு கிடைக்கும் அனுபவங்களை பொறுத்தே, இவை அனைத்தும் அமைகிறதா? எது எப்படியோ, இந்தக் கட்டுரையானது சில கருத்துக்கள் பற்றி, பலரும் ஒரேயொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க எனது மனம் மட்டும் வேறுமாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக எண்ணி எழுதப்பட்ட ஒன்று. அதனால், இது தவறெனத் தெரிந்தால், படித்தவுடன் உங்கள் மனதிலிருந்து அழித்து விடவும்.

இருபத்தொன்றாவது நூற்றாண்டில் இருக்கும் நம்மில் பலரும், சாதியினைப் பற்றி பேசுவதோ, அதில் பாகுபாடு பார்ப்பதோ மிகப் பெரும் பாவமாகவும், அதே வேளையில் பிற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் பார்க்கும் மனநிலையில் இருப்பதாகவே எண்ணுகிறேன். நாம் உண்மையில் அப்படித்தான் இருக்கிறோமா?, சற்று எனது மனதின் கேள்விகளை இங்க வைக்கிறேன்.


நாம் உண்மையில் அப்படி  பார்க்காமல்தான் இருக்கிறோமா? என்று எண்ணுகையில், ஒரு கேள்வி எனக்கு மனதில் பட்டது. காலையில் பல் துலக்கும்போது நாம் பயன்படுத்தும் தண்ணீரானது "Wash Basin"-இல் இருக்கும் குழாயில் அல்லாமல், கழிப்பறையில் கழிவறையின் அருகில் இருக்கும் குழாயில் இருந்து என்னால் வாய் கொப்பளிக்க முடியுமா? என்றால், அதற்கு என்ன விடை சொல்வதென்று தெரியவில்லை. இரண்டும் ஒரே தொட்டியிலிருந்து வரும் தண்ணீர்தான் என்றாலும், அதை மனது ஏன் ஏற்க மறுக்கிறது? சுத்தம், சுகாதாரம், நாகரிகம் என்று பல காரணங்களை அடுக்கலாம், ஒரு உதாரணத்திற்குத்தான் இதை எடுத்துரைத்தேன். அட, தண்ணீர் வேண்டாம், கழிவறையில் பயன்படுத்தும் "Cup" ஐ எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி முகம் கழுவகூட மனம் ஏன் ஏற்க மறுக்கிறது? மொட்டைக்கும் முழங்களுக்கும் முடிச்சு போடுகிறேனோ? அவரவற்கு அவரவர் கருத்து நியாயமாய்படுகிறது.

சாதியத்தை வெறுக்கிறோம் என மார்தட்டும் அனைத்து ஊடகங்களும் விளம்பர இடைவெளியில் ஒளிபரப்புவது என்னவோ "சாதி தாங்கிய "" விளம்பரங்களைத்தான். அந்த விளம்பரங்களை எடுத்தவர்களும்,அதில் நடித்தவர்களும், அதை வியாபாரமாக்கியவர்களும் என யாவரும் நவயுக நாயகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக எதையும் நான் உயர்த்திப் பிடிக்கச் சொல்லவில்லை. தீவிர பற்று கூடாது, அப்படியே இருந்தாலும் அது பிறரைப் பாதிக்கக் கூடாது. ஒன்றை தீர்க்கமாக எதிர்ப்பதால் மட்டுமே நாம் நம்மை ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர்களாக, தொலைநோக்கு பார்வையாளர்களாக கருத்தாக கூடாது என்பதுதான் எனது வாதம். ஒவ்வொருவருடைய பார்வையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

சாதி / மதம் என்று இன்னும் பெயரிடப்படாத பல பாரபட்சங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

காலத்திற்கு ஏற்ப மக்களும் அவர்களது பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. சிலர் அவர்களாக மாறுகிறார்கள், பிறர் காலப் போக்கில், மாற்றம் அடைவது தெரியாமலே மாறிவிடுகின்றனர். இப்பொழுது சரியென்றுப்டுவது, பின் வரும் காலங்களில் தவறாகாது தெரியலாம். அதுபோல இப்போது தவறாகபடுவது பின்னாளில் சரியாகப்படலாம். ஆகவே, வாழும் காலத்தில் மனதிற்கு பிடித்தபடி, பிறரை நோக செய்யாது வாழ்வதே பெரு வாழ்வாக இருக்கும். சக மனிதர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கவும், அன்பு பாராட்டவும் கற்றுக் கொள்ள சொல்கிறேன்.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/11/blog-post_11.html