Tuesday, July 1, 2014

நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க-III

"நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க" - இதன் மூன்றாவது (III)  பாகத்திற்கு இந்தப் பதிவு மிகப் பொறுத்தமாக இருக்குமென்பதால், இதனை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். பிரம்ம முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த அந்த இளங்காலைப் பொழுதில், நானும் எனது நண்பன் சுப்ரமணியும் கீழ் திருப்பதியிலிருக்கும் அலிபரியிலிருந்து மேல் திருப்பதிக்கு மெல்ல மெல்ல வேகமெடுத்து படியேறிக் கொண்டிருந்தோம். காலை நான்கு மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிட்டது எங்களது இந்த பாதயாத்திரை. ஆங்காங்கே இருந்த சில சுவாமி சிலைகளுக்கு அருகில், சிலர் ஆரத்தித் தட்டுக்களை வைத்துக் கொண்டு இருந்தனர், சிலர் அவர்களிடம் சென்று திலகமிட்டுக் கொண்டு காசுகளை இழந்து வந்தனர். அதுதான் நாங்கள் முதன் முதலாக, திருப்பதிக்கு கீழிருந்து நடந்து செல்வது. எத்துனை தூரமென்பதும் தெரியாது, எத்துனை படிகள் என்பதும் தெரியாது.
தெரியாமல் ஒரு செயலில் நாம் இறங்கும்போது, அது எப்போது நிறைவு பெறும் என்ற கேள்வியானது நமது முதுகில் ஏறிக் கொண்டுவிடும். அன்று மலையேறும்போதும் இந்தக் கேள்வியானது எங்களது முதுகில் ஏறிச் சவாரி செய்தது. 
ஆரம்பத்தில் வேகமெடுத்த எங்களது கால்கள் சிறிது நேரத்திற்கெல்லாம், "இதெல்லாம் உனக்குத் தேவையா" என்பது போல, வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், பத்து நிமிடங்கள் நடந்தும் சில நிமிடங்கள் உட்கார்ந்தும் சென்று கொண்டிருந்தோம். ஒரு வழியாக 500 படிகளைக் கடந்து விட்டோம், பின்பு வந்த வரலாற்றை எங்களது கைப்பேசிகளில் படங்களாகப் பதிவு செய்து கொண்டோம். சரி, இன்னும் 500 அடி தூரம்தான் இருக்குமென்று எங்களுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடங்கினோம். கிட்டத்தட்ட 750 அடிகள் கடந்ததும் நாங்கள் மிகவும் கலைத்துவிட்டோம். பின்னால், திரும்பிப் பார்த்தால், கீழ் திருப்பதியானது, வெள்ளியினைப் பூமியில் கொட்டியது போல மின்னிக் கொண்டிருந்தது. முன்னோக்கிப் பார்த்தால், படிகள் எல்லாம் வளைந்து,உயர்ந்து சென்றது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை, அதன் முடிவு தெரியவில்லை.

மெதுவாக மனதினைத் தேற்றிக் கொண்டு, மெது மெதுவாக பயணத்தைத் தொடங்கினோம். திடீரெனெ, முன் சென்ற பலரும் வேகமெடுத்தனர், "ஆகா!, நெருங்கிவிட்டோமென்ற" மகிழ்ச்சியில் நாங்களும் வேகமெடுத்தோம். அங்கே, அனைவரும் டிக்கெட் கொடுக்கும் இடத்தினை மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள். சிலர், தண்ணீர் குடித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்களும் வேகமாகச் சென்று வரிசையில் நின்று எங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டோம். பிறகுதான் தெரிந்தது, இந்த இடத்திலிருந்து (காளி கோயில்) இன்னும் பல மைல்கள்கள் செல்லவேண்டுமென்று., அப்போது மணியானது ஆறினை நெருங்கிக் கொண்டிருந்தது.

காளி கோயிலைத் தாண்டும்போது, நீண்ட வரிசையில் பல உணவகங்கள் இருந்தன, எல்லாம், திரைச் சீலைகளையும், தார்ப்பாய்களையும் மேல் தளங்களாகக் கொண்டிருந்த, திறந்த வெளிக்கடைகள்தான். அங்கே, அநேகமாக எல்லாக் கடைகளிலும், ஆவி பறக்க இட்லி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆவி பறக்கும் இட்லியினைக் கண்டவுடன், வயிறு கிறங்க ஆரம்பித்துவிட்டது. சரி, அப்படியே சில பல இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டுச் செல்ல முடிவெடுத்து ஒரு கடையினில் நுழைந்தோம், மன்னிக்கவும் அமர்ந்தோம்.

என்ன விலையென்றெல்லாம் கேட்காமல் 'இட்லியென்று' மட்டும் சொல்லிவிட்டு காத்திருந்தோம். உடனே, இட்லிக் கொப்பறையிலிருந்து இட்லிகளைச் சூடாகக் கொண்டுவந்து தந்தார்கள். அதைக் கைகளில் வாங்கியதும் முதல் அதிர்ச்சி, இட்லி இந்த நிறத்திலும் இருக்குமாவென்று, இலேசாகக் கருத்து இருந்தது. மெதுவாகச் பிய்த்துப் பார்த்தால், மற்றொரு அதிர்ச்சி, இட்லி இப்படியும் கட்டியாக இருக்குமாவென்று. சரியென்று சாப்பிட்டால் அடுத்த அதிர்ச்சி, உவ்...உவ்வ்வ்வ்வே வென்று சுவையிருந்தது. சரி, ஏதாவது ஒரு இட்லியாவது நன்றாக இருக்கிறதாவென்று பார்க்க நான்கு இட்லிகளையும் சுவைத்துப் பார்த்தேன். எல்லாம் சொல்லிவைத்தாற்போல, கேவலமாக இருந்தது.
இந்த இட்லியில் நிறமில்லை,
நிறமிருந்தால் மெலிதாய் இல்லை,
மெலிதாய் இருந்தால் சுவையில்லை...
"இன்னிக்கு இவய்ங்களா?, சரிதான்" என்று சலித்துக் கொண்டேன். அருகில் என் நண்பன், பொதுவாக உண்வை வீணாக்க விரும்பாதவனென்பதால், இட்லிகளை மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் கவனித்தோம், அவர்கள் எப்படி இட்லி செய்கிறார்கள் என்று. மாவினை ஊற்றி வைத்துவிட வேண்டியது, பின்னர், யாராவது வரும்வரை, அதை அப்படியே அடுப்பில்விட்டுவிட வேண்டியது, எவரேனும் வந்தபிறகு, அல்லது கூட்டத்தாரைக் கண்டவுடன், அவர்கள் கண் முன்னால் சூடாக இருக்குமாறு ஆவி பறக்க எடுத்துத் தருவது. மேலும், அடுத்து ஒரு கூத்து நடந்தது. வெளியிலெடுத்த இட்லிகளை மீன்டும் இட்லி சட்டிக்குள் வைத்து வேக வைத்தார்கள். "அடப் பாவிகளா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?".
நண்பன் சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பினோம், எங்களுக்கு உள்ளூர மிகவும் கடுப்பாக இருந்தது, சரி இதுவும் ஒரு அனுபவம்தானென்று தேற்றிக்கொண்டோம்.

பின்னர் மணி ஏழினைத் தாண்டியபோது, டீ சாப்பிட முடிவெடுத்து ஒரு டீக்கடையில் நின்றோம். அந்தக் கடையில் டீ பாய்லருக்கு முன்பாக, பெரிய சட்டியில் இஞ்சியினை அடுக்கி வைத்து இருந்தார்கள். "இஞ்சி டீ போடுங்க" என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். எங்களுக்குத் தெரிந்தவரை அவர் இஞ்சியினைத் தட்டி, சட்டியில் இட்டதுபோலவே தெரியவில்லை, ஆனாலும் டீ வந்துவிட்டது.

குடிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் அதில் இஞ்சியினைப் போடவேயில்லையென்று. இஞ்சியினை மட்டுமா, டீத்தூள் கூடப் போடாததுபோலத்தான் இருந்தது. ஆக, வருபவர்களைக் கவருவதர்காகத்தான் இவர்கள், நம் கண்களைக் குருடாக்கி கட்சி பிழைகளை ஏற்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள்.


நீங்கள் யாராவது, திருப்பதிக்கு ந்டந்து செல்வதென்றால், இதுபோன்ற கடைகளில் ஏமாந்துவிடாதீர்கள். நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க...


பி.கு: இப்பொழுது இதே போன்றதொரு கண்கட்டு வித்தைகளை நமது மெரினா கடற்கரை டீக் கடைகளிலும் பார்க்கலாம். பெரும்பாலும், எல்லோரது கடைகளிலும் கடைக்கு வெளியே அனைவரது பார்வைக்கும் படும்படி, "1 கிலோ ப்ரூ பாக்கெட்" வைத்து இருக்கிறார்கள். நான், ஏற்கனவே ருசி கண்ட பூனை என்பதால், அந்தக் கடைகளைத் தவிர்த்துவிட்டேன், யாருக்காவது இந்தக் கடைகளில் அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். 

1 comment:

SaravanaKumar said...

"சிலர் அவர்களிடம் சென்று திலகமிட்டுக் கொண்டு காசுகளை இழந்து வந்தனர்" - Arumai