Saturday, April 13, 2024

சாப்பாட்டு ராமன் - தொடர் கட்டுரை

ஏற்கனவே சாப்பிட்டு ராமன் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன், அதன் தொடர்ச்சியினை இங்கு பார்ப்போம்.

இந்த கட்டுரை எழுதுவதற்கு மிக முக்கிய காரணம், என்னுள் எழுந்த கேள்விதான். அது என்னவெனில், சமீப காலமாக மிக அதிகமான அளவில் அதிகரித்து வரும் பலதரப்பட்ட உணவு வகைகள்தான் அது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், ஒவ்வொரு உணவினையும், வெவ்வேறுவிதமான கலவையாக கொடுப்பதில் பல உணவகங்களும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன, அது உணவின் தரத்தினையும், நமது ஆரோக்கியத்தினையும் பாதிக்காத வகையில் இருந்தால் நலம். ஆனால் , பார்க்கும் பல்வேறு புதிய உணவு காம்போக்களும் சற்று பயமுறுத்துவதாகத்தான் இருக்கிறது. 

அன்றாடம் நாம் உண்ணும் இட்லியில் இருந்து அதன் வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்துக் கெடுத்துக் கொண்டிருப்பதாக எண்ணுகிறேன். அதாவது அந்த இட்லியினை மேற்கத்திய கலாச்சார உணவுகளின் சுவையினையும் பிணைத்து கொடுப்பது. உதாரணமாக, இட்லி-பர்கர் மாதிரியான முயற்சி. நான் ஏற்கனவே கூறியது போல, அந்தந்த இடங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக அந்தந்த பகுதிகளுக்கென சிறப்பு உணவுகள் உண்டு. அது அந்த வட்டார மக்களுக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் ஒத்துப் போவதாலும் பிடித்துப் போவதாலும் அது அவர்களுக்கென ஒரு உணவாகிறது. அதை எல்லோருக்குமென மாறுவது சற்று கடினம்தான், இருந்தாலும் சற்று முயற்சித்தால் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

இருப்பினும், இந்த முயற்சிகள், மிக நல்ல முறையில் இருப்பின் உணவு ருசி பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். புதுப்புது உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு சொல்கிறேன். 

எனக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சி தொடரில் வரும் ஒரு பகுதியினை குறிப்பிட விரும்புகிறேன். அந்த நிகழ்ச்சியானது உணவினை பற்றியது. வாரம்தோறும் ஒரு ஒளிபரப்புவதால் அதை ஒரு தொடர் எனவும் சொல்லலாம். அந்த நிகழ்சியில் வரும் புகழ் பெற்ற சமையல் கலைஞர், அவர் தேடி சென்று பல இடங்களில் கிடைக்கும் அற்புத உணவுகளின் வரலாறு, அதன் மூலப்பொருட்கள், செய்யும் முறை என பலவற்றையும் விரிவாக சொல்வார். அந்த பகுதி முடிந்த பிறகு, அவருடைய சமையல்கூடத்திற்கு வந்து, அவரது ரசனையில் அவர் சமீபத்தில் தெரிந்து கொண்ட அந்த உணவில் சிறு வித்தியாசத்தை புகுத்தி அதை செய்து காண்பிப்பார். அப்படிப்பட்ட நிகழ்வுகளைத்தான் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது, முயற்சியானது நல்லதொரு ஆரோக்கியமான சிந்தனையில் இருந்து வந்தால் அது நிச்சயம் வெற்றி பெரும். நான் குறிப்பிட்டு யாரையும் குறை சொல்லவில்லை, 

அதேநேரம் ஒரு மாற்றத்திற்கான முயற்சியானது எந்தவொரு இடத்தில் இருந்தும், யாரிடம் இருந்தும் வரலாம். அது சிறிய ஒரு உணவகம் ஆக இருக்கலாம், அல்லது பெரிய சமையல் நிபுணரிடம் இருந்து வரலாம். எப்படி இருப்பினும், அதற்கு முறையான வரவேற்பு இருந்தால் மட்டுமே அது அடுத்த கட்டத்த்தை நோக்கி செல்ல முடியும்.

இதில் அடுத்து ஒரு முக்கியமான ஒரு காரணியை சொல்லியே ஆக வேண்டும், அது "தேவை". ஒருவருடைய அல்லது பலரது தேவையினை பூர்த்தி செய்தாலும்கூட அந்த உணவு மிக விரைவில் அனைவரிடமும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிடும். அதற்கு மிக சிறந்த உதாரணம், சென்னையில் அநேக இடங்களில் பிரபலமாக இருக்கும் "வடகறி". இதன் ஆரம்பம் எதுவாக இருக்கும் என்பதை, நம்மால் மிக எளிதாக கணிக்க முடியும். மீந்து போன வடையினை வீணாக்க விரும்பாமல், அதில் ஒரு முயற்சி செய்ததன் விளைவுதான் தற்போதைய "வடகறி". இது முற்றிலும் "தேவை" என்பதற்காக விளைந்த ஒரு உணவு பதார்த்தம்தான். இந்த வரிசையில் கொத்து ப்ரோட்டா போன்ற உணவுகளையும் அடக்கலாம். ஒருவருடைய தேவையினை மட்டும் வைத்து ஒரு உணவின் பரிமாணத்தை அளவிட முடியாது, அது அநேகம் நபர்களால் தேடப்படும் ஒரு உணவாக இருந்தால் மட்டுமே அதற்கான சாத்தியம் சாத்தியப்படும். 

ஒருவருடைய ருசியின் பசிக்கு பலவித புது உணவுகள் கிடைக்க கூடும். இருப்பினும் அது பலராலும் விரும்பப்பட்டால் மட்டுமே அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பதில் திடமான நம்பிக்கை உள்ளது. மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம், அதுவரை ருசியின் பசியோடு காத்திருங்கள்.