Monday, April 20, 2020

நான் ரசித்தவை - திரைப்படக் காட்சிகள் (II)

இதற்கு முந்தைய பதிவில் ஒரு சில படங்களில் இருந்து சில காட்சிகளை பற்றி எழுதி இருந்தேன். இந்தப் பதிவிலும் அதுபோல சில காட்சிகளை பார்க்கலாம்.

நான் சென்ற பதிவில் சொன்னமாதிரி, இது எமது வாழ்க்கையினை பிரதிபலிப்பதாக சொல்லி இருந்தேன். சேரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த "வெற்றிக் கொடிகட்டு" படத்தில் பலகாட்சிகள் அப்படித்தான் இருக்கும். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று என்றால், அது வடிவேலு அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி, ஒருவருடன் பேசிக்கொண்டே வரும்போது பார்த்திபன் அவர்களை பார்த்ததும், இறங்கிய பேருந்திலேயே மீண்டும் ஏறி செல்வதுபோல படமாக்கப்பட்டிருக்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் நல்ல நகைச்சுவை காட்சியென்று எளிதாக கடந்துவிடலாம். இதில் ஏதேனும் காட்சிப்பிழையென்று பார்க்க நேர்ந்தால்,  இந்தக் காட்சியானது கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். அவ்வளவு நேரமாக பேருந்து எப்படி அங்கேயே நிற்கும் என சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். 


இதை எமது பகுதியில் நடக்கும் நிகழ்வோடு ஒப்பிட்டு விளக்கினால் அதுவும் சரியென்று படும். எமது ஊருக்கு அருப்புக்கோட்டையிலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ஜெயவிலாஸ் பேருந்தானது ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு பரளச்சி எனும் ஊரினை வந்தடையும். அங்கு வந்ததும் பேருந்தை அணைத்துவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் டீ கடைக்கு டீ அருந்த சென்று விடுவார்கள், அதோடு வடைகளும் அடங்கும். அவர்களோடு சேர்ந்து பேருந்தில் பயணித்த ஒருசிலரும் செல்வார்கள். கிட்டத்தட்ட பத்து நிமிட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பயணம் ஆரம்பிக்கும். அதே காட்சியினைத்தான் இந்தப் படத்திலும் எடுத்து இருப்பார்கள். சற்று, அந்தக் காட்சியின் பின்னால் தெரியும் காட்சிகளை உற்று நோக்கினால் அது விளங்கும். வடிவேலு அவர்கள் இறங்கியவுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இறங்கி டீ கடைக்கு செல்வதை தெளிவாகக் காண முடியும். இது ஒரு காமெடி காட்சிதானே, ஏன் இதற்கு மெனக்கெடனும் என்று இல்லாமல், அவ்வளவு கவனம் செலுத்தி படமாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தை அடுத்த முறை பார்க்கும்போது, பின்னால் தெரியும் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் உற்றுப் பாருங்கள். அவ்வளவு அழகாக எதார்த்தமாக படமாக்கி இருப்பார்கள். குறிப்பாக, பார்த்திபன் அவர்கள் "Given & take Policy" என்று சொல்லும் அந்தக் காட்சியினைப் பாருங்கள், பின்னால் தெரியும் "மாட்டு வண்டியினைப் பழுது பார்ப்பது" மற்றும் காட்சியில் தெரியும் அனைத்தும் அத்தனை யதார்த்தமாய் இருக்கும். 
காட்சியில் முன்னிலையில் வரும் நடிகர்களுக்கு மட்டுமல்ல அந்தக் காட்சி முழுவதும் வருபவர்களுக்கும் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பது எவ்வளவு சிரமம், அதற்கு ஏற்றாற்போல அந்த நேரத்தில் நடிப்பதும் சிரமம்தான்.
அடுத்து நான் குறிப்பிட விரும்புவது, சில கலைஞர்களுக்காவே வைக்கப்படும் காட்சிகள். திரைத்துறையில் வாய்ப்பு என்பது வெகுசிலருக்கு மட்டுமே கிடைக்கும், கிடைக்கும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள் மேலே வருகிறார்கள்,பிறர் மீண்டுமொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படி வாய்ப்பு கொடுப்பதற்கும் ஒரு மனம் வரவேண்டும், அப்படி மனம் இருந்தாலும் அதற்கான காட்சி வேண்டும், அப்படி இல்லாவிட்டாலும் தனியாக ஒரு காட்சியினை வைப்பதைப்பற்றி யோசிக்க வேண்டும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி பல உள்ளன, அந்த வரிசையில் நான் சுட்டிக் காட்ட விரும்புவது, அதிசய பிறவி படத்தில் வரும் ஒரு காட்சிதான்.



இந்தக் காட்சியில் காமெடி நடிகர் கிங் காங்க் என்று அழைக்கப்படும் ஷங்கர் அவர்கள், திறம்பட பிரேக் டான்ஸ் ஆடி இருப்பார். இப்பொழுது யோசித்துப் பார்த்தால், தனது உருவத்தினைப் பற்றிய கிண்டல் கேலிகளைத் தாண்டி தனக்கான ஒரு திறமையினை வளர்த்துக் கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். மேலும் இந்தக் காட்சியினை இவருக்காக மட்டுமே இயக்குனர் வைத்து இருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில் வேறு ஒன்றும் இருக்காது, ஒரு கலைஞனை வளர்த்துவிடமென்று எடுக்கப்பட்ட காட்சியாகத்தான் எனக்கு இது தோன்றுகிறது. இது போல், நிறைய இருக்கலாம், எனக்கு ஞாபகம் இருப்பதால் இதனை இந்தப் பதிவில் எழுதுகிறேன். 


அடுத்து ஒன்றே ஒன்றை மட்டும் பதிவு செய்து நிறைவு செய்கிறேன். ஒவ்வொரு படத்தையும் திரைக்கதை எழுதி அதை படமாக்கும்போது, அவர்கள் நினைத்தபடி வரவில்லையென்றாலோ, வேறு மாதிரி எடுக்க நினைத்துவிட்டாலோ எடுத்த அனைத்தையும் நீக்கிவிட்டு மீண்டும் முதலில் இருந்து எடுப்பார்கள், வெகு சிலர் மட்டுமே இவ்வாறு செய்கிறார்கள். அந்த வரிசையில், கமல் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் அடங்கும். முதலில், கிராமத்து பின்னணியில் ஒரு கதாப் பாத்திரத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதனை, சென்னையில் ஒரு சேரி கதாப்பாத்திரமாக மாற்றி இருப்பார்கள். முதலில் அந்த கிராமத்து பாத்திரத்தில் காந்திமதி அவர்கள் நடித்து இருப்பார்கள், பின்னாளில் மனோரமா அவர்களை நடிக்க வைத்து படமாக்கி இருப்பார்கள். முதலில் எடுக்கப்பட்ட காட்சியில் எத்தனை புது கலைஞர்கள் வாய்ப்பு கொடுக்கப்பட்டும் திரையில் காணாது போயினரோ? இப்படி எவ்வளவோ கடினப்பட்டு படம் எடுத்தாலும், பல நேரங்களில் எதிர்பார்த்ததுபோல அமையாது போய்விடக் கூடும். இதையெல்லாம் தாண்டித்தான் மீண்டும் மீண்டும் புதிய வார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நல்ல முறையில் எடுக்கப்படும் அனைத்துப் படங்களுக்கும் அதற்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும்.   

இதே மாதிரியான முந்தைய பதிவு #  https://anbanvinoth.blogspot.com/2020/04/blog-post_17.html

Friday, April 17, 2020

நான் ரசித்தவை - திரைப்படக் காட்சிகள்

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு அவசியமோ அதைவிட மிக அவசியம் அந்தக் கதைக்கான திரைக்கதை. அப்படி திரைக்கதை அமைக்கும்போது அந்தந்த பகுதிக்கு தேவையான காட்சிகளை வைப்பது மிக மிக அவசியம். ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை திரைத்துறையினரிடம் கேட்டால் நமக்கே ஆச்சரியம் எடுக்கும். இத்தனை சிரமப்பட்டுதான் படம் எடுக்கிறார்களோ என்று, அத்தனை மெனக்கெடல் இருக்கும். அப்படி அவர்கள் அவ்வளவு மெனக்கெட்டு எடுக்கும் பல காட்சிகள் "Editing" என்ற முறையில் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்படும். ஆக, நம் பார்வைக்கு வருவதற்கு முன்பே, அது பலரது பார்வையில் பட்டு, வெட்டுப்பட்டு, திருத்தப்பட்டுதான் நம் முன்னே திரைப்படமாக விரிகிறது.

இத்தனை பேர் பார்த்துமா மோசமான படங்கள் வருகிறது? என்று நம் அனைவர் மனதிலும் கேள்வி எழுவது  நியாயமானதுதான். இருந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்தி எடுக்க முடியாது. மிகச் சிலறால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் பொய்த்து விடுகிறது. அப்படி, நமக்கு காட்சிக்கு வரும் படங்களில், ஒரு திரைப்படமாக பார்க்கும்போது அந்தப் படத்துடன் ஒன்றியோ அல்லது ஒன்றாமலோ பல முக்கியமான காட்சிகளை நாம் நமது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தக் காட்சிகளை அவர்கள் எடுப்பதற்கு அவர்கள் எத்தனை முயற்சி செய்து இருப்பார்கள் என்று யோசித்தால், அடுத்தமுறை படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் இன்னும் கூர்ந்து கவனிக்கவும், படம் பார்த்த பிறகு அதை பற்றிய சிந்தனையும் வரக்கூடும்.

எத்தனையோ மிகச் சிறப்பான படங்களிலும், சுமாரான படங்களிலும் பல சிறப்பான காட்சிகள் இருக்கக்கூடும், இருப்பினும் நான் பலராலும் கவனிக்கப்பாடாது இருக்குமோ என்று எண்ணி ஒரு சில காட்சிகளை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

நமது கவுண்டமணி அவர்கள், ஒரு நாள் வழக்கம்போல படப்பிடிப்பிற்கு தனது காரில் பயணித்திருக்கிறார். அப்போது ஒரு இடத்தில், ஒரு பேருந்து இவரது வண்டியினை இலேசாக இடித்துவிடவே, இவர் கோபப்பட்டு வண்டியிலிருந்து இறங்கி அந்த ஓட்டுனரை நோக்கி விரைந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும் இவரை அடையாளம் கண்டு கொண்டு, அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை கண்டு கொள்ளாமல், அருகிலிருப்போரிடம் "இங்க பாருங்க நம்ம கவுண்டமணி சார், சார் வணக்கம், நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, உங்க காமெடிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்" அப்படின்னு அவரு பேசிக்கிட்டே இருக்காரு. அதற்கு கவுண்டமணி அவர்கள், "அதெல்லாம் இருக்கட்டும், வண்டிய பார்த்தது ஓட்ட மாட்டீங்களா? எனக்கு ரொம்ப கோபம் வருதுன்னு" சொன்னபிறகும், அந்த ஓட்டுநர் மற்றும் சுற்றி இருந்தவர்கள் இவரைப்பார்த்து சிரித்தவண்ணம் இருந்திருக்கிறார்கள். உடனே அவர் வெறுப்புடன் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார், அங்கு இயக்குனருடன் நடந்ததை பற்றி சொல்லி, "நான் என்ன சொன்னாலும், நான் சண்டைக்குப் போனாலும், சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க" என்று முடிக்க,  அந்தக் காட்சியினையே படத்தில் வைத்துவிட்டார்கள்.
அப்படி வைக்கப்பட்ட காட்சிதான் "டேய், யாரவது சண்டைக்கு வாங்கடா" என்று "உனக்காக எல்லாம் உனக்காக" படத்தில் இடம்பெற்று இருக்கும். 
இதை படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அவர்கள்  ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதுமாதிரி எண்ணிலடங்கா காட்சிகள் உள்ளன. எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சில காட்சிகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.


இதைப்போலவே வின்னர் படத்திலும், நடந்த நிகழ்வைக் கொண்டு படமாக்கியதாக இயக்குனர் கூறியதாக ஞாபகம். அந்தப் படத்தின்போது வடிவேலு அவர்களுக்கு காலில் எதோ பிரச்சனை இருந்ததாகவும், அதனால் அந்த படம் முழுவதும் அந்தப் பிரச்சினையினையே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு படம் முழுவதும் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது போல உருவாக்கியதாகவும் கூறிக் கேள்விப்பட்டதுண்டு.

முதன்முதலில் நான் எழுத நினைத்தது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பற்றியதுதான். அந்தப் படத்தில் நாகேஷ் அவர்கள், அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தையிடம், அவரது பெண்ணை படத்தில் நடிக்க வைத்தால் அவர் மிகப்பெரிய பணக்காரர் ஆகலாம், மேலும் தனது தந்தை முன்பே கால்மேல கால் போட்டு அமரலாம் என்று சொல்வார். அதற்கு அவர், உடனே "அய்யய்யோ, அதெல்லாம் தப்பு, என்னோட முதலாளி அவர் முன்னாடி அதெல்லாம் கூடாது, அது மரியாதை இல்லை " என்று சொல்வர். இதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு சாதாரண காட்சியினைப் போலத் தோன்றும். அனால், சற்று யோசித்துப் பார்த்தால், என்னதான் தன்னிடம் திடீரென பொருள் வந்து சேர்ந்தாலும், தான் இத்தனை நாட்களாய் வேலை பார்த்த தன்னுடைய முதலாளி முன்னாள் கால்போட்டு அமர்வதை, அவருக்கு செய்யும் அவமரியாதையாய் என்னும் ஒரு உண்மையான வேலையாள்/விசுவாசியின் எண்ணம் விளங்கும். இதை வேண்டுமென்று வைத்தார்களா அல்லது எதேச்சையாக அமைந்ததா என்று சொல்ல முடியாது, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுப்பது, அந்தவொரு வசனம்தான்.

அடுத்ததாக குணா படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பார்ப்போம். அந்தப் படத்தில் கமல் அவர்கள், அவரது காதலிக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிடச் சொல்வார். அவர் சாப்பிட்டு முடிக்கும்வரை பொறுமையாக காத்திருந்து பின்னர் அந்தப் பெண் சாப்பிட்டு முடித்தவுடன். "என்னது எனக்கு பசிக்கலையான்னா கேக்குற, பயங்கர பசி, என்ன செய்ய தட்டு ஒண்ணுதான் இருக்கு. அதனாலதான் காத்துக் கொண்டு இருந்தேன்" என்று சொல்வார். அதே வேகத்தில் அந்த பெண் சாப்பிட்டு மீதம் வைத்ததை கீழே தட்டிவிட்டு அதில் சாப்பாட்டை போட்டு சாப்பிடுவார். எனக்கு என்னவோ இது வழக்கத்திற்கு மாறான ஒரு காட்சியாகப்பட்டது. குணா எனும் கதாப்பாத்திரம் தான் உயிராய் நினைக்கும் காதலியின் மீத உணவை (கழிவை) கொட்டிவிட்டு அதே தட்டில் உணவு போட்டு சாப்பிடுவது. இதில் மேலும் கவனிக்க வேண்டிய மற்றொன்றுன்று, அவர் அந்த தட்டை சுத்தம் செய்ய மாட்டார்.  

இந்தக் காட்சி இடம்பெற்ற திரைப்படம் எதுவென்று ஞாபகம் இல்லை, அந்தக் காட்சியில் இளவரசு அவர்கள் மளிகைக்கடை நடத்திவருவார். அப்போது ஒரு சிறுவன் வந்து 10 ரூபாய் கொடுத்து "எங்க அம்மா புளி வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று சொல்வான். அதற்கு அவர் "இந்த காசுக்கு புளி கொடுக்க முடியாது" என்பார். அந்த சிறுவன் அடம்பிடித்து நிற்பான், உடனே அவர், கை நிறைய புளியினை உருட்டி எடுத்து வருவார். சிறுவனை ஒரு விரலை மட்டும் நீட்டச் சொல்வார். அவனும் நீட்டுவான், உடனே அந்த புளி உருண்டையில் அந்த விரலை குத்திக் கொண்டு செல்லச் சொல்வார், அதாவது அந்த காசுக்கு அவ்வளவுதான் புளிவரும் என்று சொல்வார். பணத்தின் மதிப்பை அழகாக காட்சிப்படுத்தியதோடு, நம்மவர்களின் குசும்புத் தனத்தையும் சிறப்பாக காட்டி இருப்பார்கள். குறிப்பாக இந்த மாதிரியான சிறு கடைகள், டீ கடைகள் என மக்கள் அடிக்கடி புழங்கும் இடங்களில் அதன் கடை முதலாளி ஆகட்டும், அங்கு வரும் மக்கள் ஆகட்டும் இதுபோல மிகவும் குறும்புத்தனமான நடந்துகொள்வார்கள். என்னை போன்ற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இதை நேரடியாக அனுபவித்து இருக்கக் கூடும். 

அடுத்த பதிவில் என்னை மிகவும் கவர்ந்த, எம்முடைய வாழ்க்கை முறையினை பிரதிபலித்த ஒரு காமெடி காட்சியினை பதிவு செய்கிறேன் மேலும் சில திரைக்காட்சிகளோடு.

Wednesday, April 15, 2020

இதையெல்லாமா எழுதுவாய்ங்க? - பாகம் இரண்டு

மனதிற்குள் எழும் எண்ணங்கள் பலவற்றையும், "இதையெல்லாமா எழுதுவாய்ங்க" என்று கட்டுரை எழுதாமல் விட்டது உண்டு. வெகு சிலவற்றை மட்டுமே ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதுண்டு, பின்னாளில் நேரம் கிடைக்கும்போது அதை விரிவாக எழுதலாம் என்று. அப்படிப்பட்ட கட்டுரையில் ஒன்றுதான் இது. ஏற்கனவே இந்த தலைப்பில் ஒரு பாகம் எழுதி இருந்தேன். ஆகவே இரண்டாம் பாகம் எழுத வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அது முதல் பாகத்தின் கருவாக இருக்க வேண்டும், உரு வேறாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். அன்றாட வேலைகளை முடித்துவிட்டு நமக்கென தனியாக நேரம் ஒதுக்கி தனிமையில் எழுதுவது ஒன்று. இப்போது இருக்கும் ஊரடங்கில்   குடும்பம் குடும்பமாக தனிமையில் இருப்பதால், தனியாக தனிமைப்படுத்திக கொண்டு எழுதுவது சிரமமாக இருக்கிறது. நம்முடைய எழுத்துக்களும் எண்ணங்களும் அனைவரோடும் ஒத்துப்போக வாய்ப்பில்லை. நமது மன நிலையினை ஒத்த சிலருக்கும், அதை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஒத்துப்போகும். அதனால் எழுதுவதென்று ஆகிவிட்டது,நமக்குத் பிடித்துப் போனால் பதிவிடலாம் என்று துணிந்து பதிவிட்டுவிட்டேன்.

நேரம் கிடைக்கும்போது ஏதாவதொரு "blog/website"இல் இருக்கும் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப் படிக்கும்போது, நமது அப்போதைய மன நிலையினையொத்த பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அதை ஏன் எழுதி இருப்பார் என்று யோசிக்க தோன்றும்?  நாம் எழுதுவது யாராவது ஒருவருக்காவது பிடித்து போக வாய்ப்பு உண்டு. அப்படி அவர் அந்தக் கட்டுரையினைப் படிக்கும்போது, எந்தமாதிரியான மன நிலையில் இந்த கட்டுரையினை எழுதியிருப்பார் என்று ஒரு சில வினாடிகள்,  யோசித்துப் பார்க்க துண்டினால் போதும், அந்தக் கட்டுரைக்கு அதுவே மிகப் பெரிய சன்மானம். குறைந்தபட்சம் இதையெல்லாம் ஒரு கட்டுரைன்னு இவன் எப்படி எழுதினான், அப்படின்னு திட்டினாலும் மனம் மகிழத்தான் செய்யும்.





சில நேரங்களில் நீங்களே இதை நேரடியாக அனுபவித்து இருக்கக் கூடும். அன்றாடம் செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள், பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்த செய்திகளை தேடி தேடி படிப்பார்கள். உதாரணத்திற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கடைசி பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். செய்தித்தாளை முழுவதும் படிக்கும் பழக்கம் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கும்.

அப்படி, சில பகுதிகளை ஒதுக்குபவர்கள்கூட, ஒரு சில சந்தர்ப்பங்களில், உதாரணத்திற்கு சலூன் கடையில் காத்திருக்கும்போது, கிடைக்கும் துண்டு பேப்பரில் அவர்கள் அதுவரை படிக்காத பகுதியாக இருந்தாலும் படிக்க நேரிடும். அப்படி அவர்கள் படிக்கும்போது, ஒருவேளை அதில் அவர்களுக்கு பிடித்துப் போனால், அன்றிலிருந்து நாளிதழ் வாசிக்கும்போது,அதுவரை ஒதுக்கிவைத்த பகுதியினையும் சேர்த்து படிப்பார்கள். அதுமாதிரி, எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன், அதை படிப்பதும் பிடிக்காது போவதும் அவரவர் முடிவிற்கே விட்டுவிட்டு நகர்ந்துவிட முடிவு செய்துதான் இதை பதிவு செய்கிறேன்.

தலைப்பு பிடித்தோ,
பொழுது பிடித்தோ (bore)
எதோ ஒன்று பிடித்து (my blog link)
இங்கு வந்தபின்,
இதை படித்துப் பிடித்
தாலும்,
பிடிக்காது படித்தாலும்,
பிடிக்காவிடிலும்
படிக்குமளவிற்கு சொற்களை
படி நிறைய வைத்திருக்கிறேன்,
வேண்டுமெனில் மடிநிறைய
அள்ளிச் செல்லுங்கள் - இல்லையெனில்
தட்டிவிட்டு செல்லுங்கள் (skip / comment)

பி.கு: நாளிதழின் அனைத்துப் பகுதியினையும் படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது, குறிப்பாக ஒரு நாளிதழில் வரும் வாசகர் பக்கம், ஒரு நாள் எதேச்சையாக படித்தபோது, எனக்கு பிடித்துப்போகவே, நான் தவறாது படிக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்றாகிப் போனது.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/06/blog-post_23.html

Monday, April 13, 2020

நான் ரசித்தவை - Tumbbad (2018)

"ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நிறைய நேரம் கிடைப்பதால் அதை குடும்பத்துடன் செலவிடும் நேரம்போக மீதமிருக்கும் நேரங்களில் நல்ல படங்கள் பார்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்". இப்படி எழுத வேண்டுமென்றுதான் ஆசை, ஆனால் நிலைமை தலைகீழ், சராசரி நாட்களைக் காட்டிலும் அதிக நேரம் அலுவலக வேலை பார்க்க வேண்டி உள்ளது. என்னதான் வீட்டில் தனித்து இருந்தாலும், அலுவலகப் பனி இருப்பதால் வழக்கமான நாட்களாகத்தான் செல்கின்றன பெரும்பாலான வார நாட்கள். வார இறுதியில் கிடைக்கும் நேரத்தில்தான் கொஞ்சம் இதுபோன்ற படங்களுக்கும், கட்டுரைகளுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. அந்த வகையில் நான் ஏற்கனவே பார்த்து ரசித்த படங்களும் அடங்கும். அவ்வாறு என்னை வெகுவாக கவர்ந்த ஒரு படத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் எழுதுகிறேன். 2018-ஆம் ஆண்டு "Hindi" மொழியில் வெளிவந்த "Tumbbad" படம்தான் அது. பேராசை பெரு நஷ்டம் என்ற மையக்கருவை தாங்கி வந்த படம் இது.

இந்தப் படம் எவ்வாறு உருவானது என்பது பற்றிய தகவல் சுவாரசியமானது, இந்த கதையினை எழுதியவர் அவருடைய நண்பரிடம் இருந்து ஒரு சிறு குறிப்பாக அவருடை பதின்வயதில் கேட்டு இருக்கிறார். பின்னர் அதை மெதுவாக மெருகேற்றி பல வருட கோர்ப்புகளுக்குப் பிறகு அதை ஒரு திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அதற்கு சரியான தயாரிப்பாளரை அணுகி அதை படமாக்கி பார்த்தும் திருப்தி அடையாமல், மீண்டும் கதையினை மெருகேற்றி கடைசியாக உருத்தரித்திருக்கும் படம்தான் இந்த "Tumbbad". தன்னுடைய கதையினை ஒரு ரசிகனாக அமர்ந்து பார்த்து திருப்தி ஆகாமல், மீண்டும் படைக்கப்பட்ட படம் இது. ஒரு படைப்பாளியிடம் இருந்து வரும் படைப்புகளானது, படைப்பாளியின் கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் அதை காண்பவராது/ரசிப்பவரது கோணத்திலும் பார்த்து அதை வார்த்தால்தான் அந்த படைப்பானது முழுமை பெறும்.

ஒரு படைப்பாளிக்கு, அவருடைய எண்ணங்களை அவருடைய விருப்பம்போல செய்யவிட்டால் அதற்கு பலனாக இதுபோன்றதொரு அற்புத படைப்புகள் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த படம். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை தெளிவாக, அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இந்தப் படத்தின் மிகப் பெரிய ஒரு சொத்து என்று சொன்னால் அது ஒளிப்பதிவுதான், அத்துணை அழகாக இருக்கும். ஒளிப்பதிவிற்கு எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறலாம், அந்த சின்னஞ் சிறு வீட்டில், கைவிளக்கு ஒளியில் அற்புதமாக படமாக்கியிருப்பார்கள். அந்த முதியவர் இறப்பை காட்சிப்படுத்தியிருப்பது, ஓடத்தில் பயணம் செய்வது, நகரத்து தெரு என் அடுக்கி கொண்டே போகலாம். கதைக்களமானது சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் அமைத்திருக்கும் காட்சி அமைப்புகள், அதனை ஒளிப்பதிவு செய்த விதம் - ஆகா அத்தனை பிரமாதம். இசையும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும்பங்காற்றி இருக்கிறது, இவை எல்லாவற்றையும் ஒரு அழகிய மாலையாக உருவாக்கிய பெருமை திரைக்கதை மற்றும் இயக்குனரை சேரும்

இந்த படத்திற்கு அவர்கள் எடுத்திருக்கும் இடம் மிக அற்புதமாக இருக்கும், சபிக்கப்பட்ட கிராமத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும், அந்த கிராமத்துக் கடசிகளைக் காணும்போது, நம் மீது மழை பொழிவது போல இருக்கும். அந்த அளவிற்கு, கதையினையும் காட்சியினையும் வைத்து இருப்பார்கள். நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்ததால் இதுபோன்ற மழை காட்சிகளை அதிகம் ரசிப்பதுண்டு (தாகம் அதிகம் :)).
ஆனால், மழையே பெய்யாதிருப்பது எப்படி ஒரு சாபமோ, அதுபோல மழை பொழிந்துகொண்டே இருப்பதும் ஒரு சாபம்தான். 
குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதிர் பருவம் என மூன்று காலங்ககளிலும் கதையினை நகர்த்தியிருப்பர். படத்தின் இறுதிக் கடசியில் தன்னுடைய தவறை உணரும் நேரத்தில் கதைநாயகன் எடுக்கும் முடிவும், அதன் பிறகு அவரது மகன் எடுக்கும் முடிவும் மிக அற்புதம். கதையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் ஆடை வடிவமைப்பும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசித்து வரவேற்க வேண்டிய ஒரு அற்புத படம்தான் இந்த "Tumbbad"

ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்து தரப்பும் தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து அற்புதமாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இது போன்றதொரு படைப்பை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.  பேராசை பெரு நஷ்டமாகாத்திருக்க வேண்டும்!!! :) 

மொட்டைக்கும் முழங்காலுக்கும் - பாகம் இரண்டு

வயதிற்கும், நமது அணுகுமுறைக்கும், எண்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டா என்பது தெரியவில்லை. ஒருவேளை, நமக்கு கிடைக்கும் அனுபவங்களை பொறுத்தே, இவை அனைத்தும் அமைகிறதா? எது எப்படியோ, இந்தக் கட்டுரையானது சில கருத்துக்கள் பற்றி, பலரும் ஒரேயொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க எனது மனம் மட்டும் வேறுமாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக எண்ணி எழுதப்பட்ட ஒன்று. அதனால், இது தவறெனத் தெரிந்தால், படித்தவுடன் உங்கள் மனதிலிருந்து அழித்து விடவும்.

இருபத்தொன்றாவது நூற்றாண்டில் இருக்கும் நம்மில் பலரும், சாதியினைப் பற்றி பேசுவதோ, அதில் பாகுபாடு பார்ப்பதோ மிகப் பெரும் பாவமாகவும், அதே வேளையில் பிற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் பார்க்கும் மனநிலையில் இருப்பதாகவே எண்ணுகிறேன். நாம் உண்மையில் அப்படித்தான் இருக்கிறோமா?, சற்று எனது மனதின் கேள்விகளை இங்க வைக்கிறேன்.


நாம் உண்மையில் அப்படி  பார்க்காமல்தான் இருக்கிறோமா? என்று எண்ணுகையில், ஒரு கேள்வி எனக்கு மனதில் பட்டது. காலையில் பல் துலக்கும்போது நாம் பயன்படுத்தும் தண்ணீரானது "Wash Basin"-இல் இருக்கும் குழாயில் அல்லாமல், கழிப்பறையில் கழிவறையின் அருகில் இருக்கும் குழாயில் இருந்து என்னால் வாய் கொப்பளிக்க முடியுமா? என்றால், அதற்கு என்ன விடை சொல்வதென்று தெரியவில்லை. இரண்டும் ஒரே தொட்டியிலிருந்து வரும் தண்ணீர்தான் என்றாலும், அதை மனது ஏன் ஏற்க மறுக்கிறது? சுத்தம், சுகாதாரம், நாகரிகம் என்று பல காரணங்களை அடுக்கலாம், ஒரு உதாரணத்திற்குத்தான் இதை எடுத்துரைத்தேன். அட, தண்ணீர் வேண்டாம், கழிவறையில் பயன்படுத்தும் "Cup" ஐ எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி முகம் கழுவகூட மனம் ஏன் ஏற்க மறுக்கிறது? மொட்டைக்கும் முழங்களுக்கும் முடிச்சு போடுகிறேனோ? அவரவற்கு அவரவர் கருத்து நியாயமாய்படுகிறது.

சாதியத்தை வெறுக்கிறோம் என மார்தட்டும் அனைத்து ஊடகங்களும் விளம்பர இடைவெளியில் ஒளிபரப்புவது என்னவோ "சாதி தாங்கிய "" விளம்பரங்களைத்தான். அந்த விளம்பரங்களை எடுத்தவர்களும்,அதில் நடித்தவர்களும், அதை வியாபாரமாக்கியவர்களும் என யாவரும் நவயுக நாயகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக எதையும் நான் உயர்த்திப் பிடிக்கச் சொல்லவில்லை. தீவிர பற்று கூடாது, அப்படியே இருந்தாலும் அது பிறரைப் பாதிக்கக் கூடாது. ஒன்றை தீர்க்கமாக எதிர்ப்பதால் மட்டுமே நாம் நம்மை ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர்களாக, தொலைநோக்கு பார்வையாளர்களாக கருத்தாக கூடாது என்பதுதான் எனது வாதம். ஒவ்வொருவருடைய பார்வையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

சாதி / மதம் என்று இன்னும் பெயரிடப்படாத பல பாரபட்சங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

காலத்திற்கு ஏற்ப மக்களும் அவர்களது பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. சிலர் அவர்களாக மாறுகிறார்கள், பிறர் காலப் போக்கில், மாற்றம் அடைவது தெரியாமலே மாறிவிடுகின்றனர். இப்பொழுது சரியென்றுப்டுவது, பின் வரும் காலங்களில் தவறாகாது தெரியலாம். அதுபோல இப்போது தவறாகபடுவது பின்னாளில் சரியாகப்படலாம். ஆகவே, வாழும் காலத்தில் மனதிற்கு பிடித்தபடி, பிறரை நோக செய்யாது வாழ்வதே பெரு வாழ்வாக இருக்கும். சக மனிதர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கவும், அன்பு பாராட்டவும் கற்றுக் கொள்ள சொல்கிறேன்.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/11/blog-post_11.html

Tuesday, January 21, 2020

பனை


தலை நனைக்க,
மழை மறுக்கவே,
தலை மழித்து
மயிரறுந்து நிற்கிறது -
யாரோ எவரோ,
இதற்கோ எதற்கோ,
நட்டு வைத்தோ,
விட்டு வைத்தோ
வளர்ந்த பனை...

Monday, January 20, 2020

என்னடா விளம்பரம் - II

நீண்ட இடைவேளைக்குப் பிறகு எனது பதிவினைப் பதிவிடுவதற்கு  ஏற்றாற்போல, இந்தக் கட்டுரையின் தலைப்பும் பொருத்தமாக வந்துள்ளதாகக் கருதி இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

சமீபத்திய விளம்பரங்களில் என்னை மிக வெகுவாகக் கவர்ந்த விளம்பரம் என்றால் அது, Fevicol விளம்பரம்தான். இந்த விளம்பரத்தில் கிட்டத்தட்ட மூன்று நான்கு தலைமுறைகளைக் காட்டியிருப்பார்கள், நமது கலாச்சார மாற்றங்களையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாடல் வரிகளும் இவ்விளம்பரத்திற்கு ஒரு உயிரோட்டம் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

விளம்பரத்தின் ஆரம்பத்தில், கருப்பு வெள்ளையிலிருந்து தொடங்கியிருப்பார்கள். அப்போதைய கலாச்சாரத்தையும் காட்டியிருப்பார்கள். அந்தக் காட்சியானது 10-15 வினாடிகள் வரும், அந்த மிகக் குறுகிய இடைவெளியில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியிருப்பார்கள். வீட்டிற்கு வந்த மருமகள் அவ்வளவு அடக்கமாக, கட்டுப்பாடாக இருப்பது போல அந்தக் காட்சியானது இருக்கும். புது மணப்பெண் பவ்வியமாக தரையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார், அவரது மாமனாரோ அருகில் ஒரு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருப்பார். அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நாம் கடந்து வந்த காலங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

கணவனும் மனைவியும் கை கோர்த்து நடிப்பதை அநாகரிகமாக கருதிய காலத்தில் ஆரம்பித்து, இருவரும் அன்யோன்யமாக ஒரே "Sofa"வில் அமர்ந்து இருப்பதுவரை காட்சிப்படுத்தியிருப்பதைத்தான் நான் குறிப்பிட்டு சொல்கிறேன்.


நாட்டாமை வீட்டுக்கு புதுப்பொண்ணு வந்தா...
கூடவே வந்தது "Two Seater Sofa"...
 
நாட்டாமை வீட்டுக்கு வந்தது "Sofa",
நாட்டாமைகாரம்மா "Sofa" ஆச்சுது...
 
நாட்டாமை தங்கச்சி மணக்கோலம் போட்டா
"Sofa"வும் மாறிச்சி கெட்டப்பை மாத்தி...
 
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
..
..

என்னதான் பல தலைமுறைகளைக் கடந்தாலும், காலங்களைக் கடந்தாலும் பல சூழ்நிலைகளைக் கடந்தாலும் - இவை அனைத்தையும் தாண்டி உறுதியாய் நிற்கும் அந்த "அசைக்க முடியாத" நம்பிக்கையினை மிக அழகாக காட்சிப்படுத்தியது வெகுவாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  இத்தனை தலைமுறை/வருடங்கள் கடந்தும் நிலைத்திருக்கும் அந்த "Sofa" வின் உறுதித்தன்மைக்கு "Fevicol"தான் காரணம் என்பதை காட்சியின் மூலம் மட்டுமே கொடுத்திருப்பது இன்னொரு சுவாரசியம். ஒட்டுமொத்த சிறப்பையும், அவர்களுடைய பொருளுக்கு மட்டுமே கொடுக்காமல், அதைச் செய்பவரை முன்னிலைப்படுத்தி கொடுத்திருப்பது - மிகச் சிறப்பு. இறுதியாக பாடலை  முடிக்கும்போது மிகச் சிறப்பாக இருக்கும்.
அட கல்யாணம் பண்ணாலும் இல்லேன்னாலும்
"Sofa" வ பண்ணு மனசு விரும்பி...
  

Similar Previous Post

Monday, January 13, 2020

நம்ம ஊரு நாட்டாமைகள்

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் ஆகட்டும், நமது மன்னர் ஆடசிக் காலத்தில் ஆகட்டும் - பெரும்பாலும் பலரும், தர்ம நெறியில் வாழ்வு மேற்கொண்டதை நமக்கு   எடுத்துச் சொல்கின்றன.

"நம்முயிர்க்கு மேல - மான மரியாதை
மானம்  இழந்தாலே - வாழத் தெரியாதே"

உயிருக்கு மேலாக தமது மனத்தை பெரிதாய் கருதி வாழ்ந்தோர், வாழ்வோர் பலர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்கூட நஞ்சுதான். அதுபோலத்தான் இந்த மானப் பிரச்சினையும், அதீத கட்டுப்பாடானது - வறட்டு  கௌரவம் இன்னும் பல பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடுகிறது. தான் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, அதை மீற முடியாது போனதால்தான், அவையில் கட்டுண்டு கிடந்தார் பீஷ்மர், அன்றவர் - எது தர்மம் ( சூழ்நிலைக்கேற்றாற்போல) என்று அறிந்து - அவையில் வெகுண்டிருந்தால், பாரதப் போரொன்று நிகழாது போயிருக்கும். இந்த மானப் பிரசினைதான் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை மறுதலிக்க இயலாது. நான் இதை பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் எழுத எத்தனிக்கவில்லை.  இப்படிப்பட்டவர்கள் இன்னும் நம்மோடு இருக்கிறார்களா என்ற எனது கேள்வியே இக்கட்டுரையின் கரு.

சற்றே நிதானித்து யோசித்துப் பார்த்தால் - ஏன் இல்லை, என்ற பதில் என்னுள் விழுந்தது. சிறு வயதில், நாம் விளையாடும் பல போட்டிகளுக்கும் நடுவர் என்று ஒருவர் இருந்தே தீர வேண்டும். உதாரணத்திற்கு கிரிக்கெட் போட்டியை எடுத்துக் கொள்வோம். அப்படி நடுவராக இருப்பவரை எப்படித் தேர்வு செய்வோம், அதுவும் இரண்டு ஊர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியென்றால்?


இருதரப்புக்கும் பொதுவான ஒருவரைத்தான் தேர்வு செய்வோம். அவர் இருவருக்கும் பொதுவாகத்தான் இருப்பார். சில நேரங்களில் அவர் நமது எதிரணியினை சார்ந்தவராகக் கூட இருப்பார். இருந்தாலும் எந்நிலையிலும் நடுநிலை தவற மாட்டார். நடுவர் என்று இல்லை, விளையாடும் நபர்களில்கூட சிலர் இப்படித்தான் நியாயமாக நடந்து கொள்வர். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அவ்வளவுதான்.

நண்பர்கள் இருவருக்குள்ளோ, அல்லது பிடிக்காத இருவருக்குள்ளோ ஒரு பிரச்சனை என்றாலும் நடுநிலை செய்வதற்கு ஒருவர் இருப்பார். அவர் பெரும்பாலும் இருவரின் நண்பராகவும் இருப்பார்.  அவர் மத்தியஸ்த்தம் செய்து வைத்தால் இருவரும் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவிற்கு அவர் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள், அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய நடுநிலையாகத்தான் இருக்கும், மேலும் இருவர் மீதும் அவர் கொள்ளும் அக்கறையாகவும் இருக்கும்.

தன்னுடைய செயல் பிறரை காயம் செய்யக்கூடாது என்றெண்ணும் ஒவ்வொருவரும் நம்ம ஊர் நாட்டாமைகள்தான்...

நான் முன்பிருந்த இடத்தில், ஒருவர் ரிக்ஸா ஒட்டி பிழைத்துக் கொண்டிருந்தார், அவருக்கு ஒரு  கை இருக்காது. இருந்தாலும் அவர் எவர் தயவையும் நாடாது, தானாக உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்தாலே ஒரு "Energy" கிடைக்கும். அந்த அளவிற்கு அவர், சந்தோசமாக, தைரியமாக,  தெனாவெட்டாக, திமிராக தனது வழியில் வாழ்ந்து கொண்டிருப்பார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எவரைப் பற்றியும் வீணாக பேச மாட்டார். ஒய்வு நேரத்தில், இருக்கும் ஒரு கையில் பீடியை இழுத்துக் கொண்டு, தானாக சந்தோசமாக பாடி கொண்டிருப்பார்.

"நான்தான்டா என் நாட்டுக்கு ராஜா" அந்த மாதிரி இருப்பார். தன்மானம் இழக்காது அடுத்தவர் உழைப்பை சுரண்டாது வாழும் ஒவ்வொருவரும் "நம்ம ஊர் நாட்டாமைகளே".

எனது பேருந்து பயணத்தின்போது நான் சந்தித்த ஒரு நடத்துனர் என்னை வெகுவாகக் கவர்ந்தார். படியில் நிற்பவர்களை உள்ளே வர சொல்லிக் கொண்டேயிருந்தார், ஒவ்வொரு நிறுத்தத்திலும் "மெதுவாக இறங்குங்கள், பஸ் நின்ன பிறகு இறங்குங்க" என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இது எல்லாரும் செய்வதுதான் - இவர் இதை சொல்லும்போது பலரும் அவரை சட்டை செய்யவில்லை, இருந்தாலும் அவர் அவரது பணியில் கவனமாக இருந்தார், ஒருமுறைகூட எவரிடமும் கடிந்து கொள்ளவில்லை. அவரது வார்த்தையில் ஒரு கனிவு இருந்தது.

பயணத்தின்போது தவறவிட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்த நபர் என்று அவ்வபபோது செய்திகளில் அடிபடும்போது "இன்னும் நல்லோர் இருக்கிறார்கள்"  என்று மனம் ஆனந்தம் கொள்ளும்.


சில போக்குவரத்து காவலர்களை உற்று நோக்கினால் அவர்கள் எவ்வாறு தங்களது பணியில் மெனக்கெடுகிறார்கள் என்பது விளங்கும். நான் பயணித்த சாலைகளில் என்னை சிலர் கவர்ந்து இருக்கிறார்கள். ஒரு சிலர், ஒழிப்பு பெருக்கி வைத்துக் கொண்டு "நிதானமாக செல்லுங்கள், "Signal" பார்த்து அதற்கு மதிப்பளித்து செல்லுங்கள், வேகம் அதிகரிக்கும்போது உங்கள் வீட்டை நினைத்துப் பாருங்கள். "Helmat" தலையில் போடுவதற்குத்தான், "Petrol Tank"-கிற்கு அல்ல" என்பதை மணிக்கணக்காக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒரு சில  காவலர்கள்,  "Signal" இல்லாத இடங்களில், நடனமாடுவது போல செய்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவார்கள்.

தன் தொழிலை ஆத்மார்த்தமாக செய்யும் எவரும் ஒரு வகையில் "நம்ம ஊர் நாட்டமைதான்". அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அவ்வளவுதான்

Wednesday, January 8, 2020

அட ஞான சூனியம்

இசையினைப் பற்றிய எனது புரிதல் மிகக் குறைவுதான், அதை  ரசிப்பது மட்டுமே எனக்கு தெரிந்த விஷயம், அதுவும்   எனது  மனதிற்கு  பிடித்திருந்தால்  மட்டுமே . இசையறிவு இருந்தால்தான் இசையினை ரசிக்க வேண்டுமென்பதில்லை, ரசிப்பதற்கு பல வழிகள் உள்ளது, அதற்கு முதலாவதாக ரசிப்பதற்கு நாம் செவி சாய்த்தாலே போதும்.இந்தக் கட்டுரையில், இசை பற்றிய புரிதல் இல்லாமல் நான்  ஏதாவது எழுதியிருந்தால்  சுட்டிக்  காட்டவும். எனக்கு  மிகப் பிடித்த  பாடல்கள்  பலவற்றுக்கும், பாடல்  வரிகள்  வெகு சிலவற்றிற்கு மட்டுமே முழுதாகத் தெரியும்,  மற்ற பாடல்களுக்கெல்லாம்  வெறும்  இசை  மட்டும்தான்  நினைவில் இருக்கும். மிகப்  பிடித்தமான பாடல்களுக்கே அப்படியென்றால் , பிற  பாடல்களைச்  சொல்லவே  வேண்டாம்.

பாடல்களை  ரசிக்கும்  எனது  நண்பர்களில் பெரும்பாலோனோர், அவர்கள்  மனதுக்கு  நெருக்கமான  பாடலின் அனைத்து  வரிகளையும்  நினைவில்  வைத்து இருப்பதைக்  கண்டு ,எனக்கு  நானே  கேட்கும்  கேள்வி  இதுதான். நாம் பாடல்களை ரசிப்பேன்  என்று  சொல்வது உண்மைதானா? அப்படியெனில், ஏன் நம்மால் பாடல் வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை? ரசிகன் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா? அல்லது, இசையினை மட்டுமே ரசிக்கும் பழக்கம் உள்ளதா? நான் ரசிப்பது  இசையையா ? அல்லது  பாடல்  வரிகளையா ? அல்லது  இரண்டும்  கலந்ததா? சரி நிதானித்து யோசித்துப் பார்த்தால், இவை அனைத்தும்தான் எனது பதிலாக வந்தது, இதைத்தான் இந்தக் கட்டுரையில் நான் கொடுத்திருக்கிறேன். அதாவது  சில  பாடல்கள்  அதன்  வரிகளுக்காகவும், சில இசைக்காகவும்  சில இரண்டிற்காகவும்தான்.

மனதிற்கு நெருக்கமான பாடல்கூட, வரி மறந்து போகும்போது, அந்த இசையோடு "லா லா லா" என்று முணுமுத்து பாடலை நிறைவு செய்யும்போது தோன்றுகிறது - பாடகரும் ஒருவித இசைக் கருவிதான் என்று, அதனால்தான் பாடகர் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதவில்லை. பெரும்பாலான பாடல்களுக்கு உயிர்ப்பினைக் கொடுப்பவர்கள் பாடகர்கள்தான் என்றாலும், என்னை பொறுத்தவரை இசையினை முன்னதாகவும், பாடகரை அதற்கு அடுத்த இடத்திலும் வைக்கிறேன்.

ஒரு  சில  பாடல்களை , அது  பாடப்பட்ட  ராகத்தில்  (முறையில் ) இருந்து  வேறு  ஒரு  பாணியில், வேறு ஒரு முறையில், பாடினால் கூட ரசிக்கத்தக்கதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு , சதி  லீலாவதி  படத்தில்  கமல் அவர்கள் பாடுவது மாதிரி
மாறுகோ  மாறுகோ  மாறுகையி...
அடி ஜோருகோ ஜோருகோ..ஜோறுகயி
ஒரு சில ராகங்கள் மனதோடு லயித்துப் போகும்போது , அப்படி மனதோடு படுத்தூடும் பாடல்களுக்கு வேறு  சில வார்த்தைகளை  போட்டு  பாடும்  வழக்கமும்  உண்டு, என்னைப் போல் பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் . உதாரணமாக நாம் பார்க்கும் வாசகங்கள்கூட அந்தப் பாட்டாக பாடும் தருணங்களும் வருவதுண்டு. சாலையில் வாகனத்தில் செல்லும்போது அறிவிப்புப் பலகையில் காணும்  "பாலங்களில்  (நீங்கள்)  முந்தாதீர் , வளைவுகளில்  (நீங்கள்)  முந்தாதீர் " வாசகங்கள், "காலங்களில்  அவள்  வசந்தம்" பாடலாக பாட வைக்கிறது இந்த வாசகங்கள்.

அடுத்த பாடலுக்கான(குறளுக்கான) ராகம்/தாளம் மட்டும் கொடுத்துள்ளேன், அது என்ன பாடல் என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்  புருசல் தரும்
 
பாடல் ராகம்/தாளம்#
தண்-ணென்ன-நன்னா.....-தன்-னண்ணா....-நன்-னா
தன்னா....நா-னென்னா

இந்தக்  கட்டுரையில்  குறிப்பிட்டு  சொல்ல  வேண்டிய  ஒன்று , மிகப்  பிடித்த  பாடலை  வேறு ஒரு வாத்திய கருவியில் (பாடுபவரையும் சேர்த்துதான்) கேட்கும்போது  அது  ஒரு  புது  விதமான  ஒரு ஈர்ப்பினை தருகிறது. இதில் , மேலும் குறிப்பாக சொல்வதென்றால் , ஒரு  சில இடங்களில்  சில ஏற்ற இறக்கங்களோடு கேட்டாலும்  அத்தனை  இனிமையாக இருக்கும். உதாரணத்திற்கு சில பாடல்களின் இணைப்பினை கொடுத்திருக்கிறேன்.

"தென்றல்  வந்து  தீண்டும்  போது"# 
"சங்கத்தில்  பாடாத  கவிதை" #

பல இன்னிசைக் கச்சேரிகளில் பாடுபவர் அவருடைய ரசிப்பிற்கு ஏற்ப சில பாடல்களில், சில இடங்களில் பாடுவதுண்டு. இதற்கு சிறந்த உதாரணமாக விளக்கு வச்ச நேரத்துல என்ற பாடல் எவ்வாறு உருவானது என்பதைக் கேட்டுப்பாருங்கள், பாக்கியராஜ் அவர்கள் கொடுக்க நினைத்த ஒன்றை, இளையராஜா அவர்கள் எவ்வாறு மாற்றிக் கொடுத்திருப்பார் என்பது புரியும்.


எந்தவொரு பாடலையும் அதன் உயிர்ப்பு குறையாது பாடினால் நிச்சயமாக ரசிக்கலாம். அதைவிடுத்து, பாடலை வேறு மாதிரி பாடுகிறேன்/ இசைக்கிறேன் என்று கொல்ல கூடாது. பழைய பாடல்களை இப்போதைய "Trend"கு மாற்றி பாடி/இசைத்து கொல்லும் சில பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதுபோல பல பாடல்களை உதாரணமாக சொல்லலாம், ஒவ்வொரு பாடலுக்கும் அத்தனை மெனக்கெடல்கள் உண்டு. ஒரே பாடலை பலவிதமாக ஒரே படத்தில் கொடுத்து அசத்தி இருப்பார் நம்ம அவர்கள். சொன்னால்தான் காதலா படத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவில் கொடுத்திருப்பார்.
சொன்னால்தான் காதலா ... (மூன்று விதமாக)
தளபதியில் வரும் "சின்ன தாய் அவள்",வள்ளியில் வரும் "என்னுள்ளே  என்னுள்ளே" போன்ற என் மனதோடு நெருக்கமான பாடல்களை , மிக  மெதுவாக , அதுவும்  சிறிது  இடைவெளி  விட்டு  பாடும்போதோ, அதை  அப்படிக் கேட்கும்போதோ கூடுதலாக ஒருவித  உணர்வு  வருகிறது.

சில பாடல்களுக்கு "Humming" மட்டும் போதுமானது. அவதாரம் படத்தில் வரும் "தென்றல்  வந்து  தீண்டும்  போது" பாடலுக்கு "தன்ன-நன-நான-நான-நான-நான-நா......., தனன--நா" என்று முணுமுணுத்தாலே போதும், அந்த உயிர்ப்பு வந்துவிடும்.

பாடகரையும்/பாடலாசிரியரையும் இசையமைப்பாளரையும்  வேறுபடுத்தி காட்ட வேண்டுமென்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. உடல்மேல்  உயிர்  வந்து ஒன்றுவது இயல்பே  எனும் விதிப்படி  - இசையும் , வரிகளும் ஒன்றோடொன்று கலந்தால்தான் அதற்கு  மதிப்பு  வலுப்படும். இதில் உயிரெது, மெய்யெது என பிரிப்பது அவரவர் ரசனையினைப் பொறுத்தது.

பி .கு:  என்னதான் சிறந்த இசையாய் இருந்தாலும், சிறந்த வரிகள் இருந்தாலும், பாடும்விதத்தில்  பாடினால் ,இசைக்கும் விதத்தில்  இசைத்தால்  மட்டுமே  ரசிக்க  முடியும்-இல்லையெனில்  வெறுத்து  விடும். ஒருவேளை  இந்தக்  கட்டுரையும் , நான் எழுத  வேண்டிய  விதத்தில்  எழுதாமல்  வேறு  விதத்தில்  எழுதியிருந்தால்  உங்களுக்கு  ஏற்படும்  அந்த  உணர்வுதான்  "அட  ஞான சூனியம்".