Wednesday, June 18, 2014

எல்லை தாண்டும் "பயங்கர வாதம்"


வாதமானது, வாக்குவாதம், விதண்டாவாதம், பக்கவாதம் என்று பலவாக வகைப்பட்டிருந்தாலும், இந்தப் பதிவில் நான் பதிய இருப்பது 'பயங்கர வாதம்' பற்றியது. இது 'பயங்கரவாதம் பற்றியது அல்ல, "பயங்கர-வாதம்" பற்றியது. ரஜினி ஒரு படத்தில் சொன்னதுபோல, தமிழனுக்குத்தான் பேசப்பிடிக்குமே. எனவே, நம் அனைவருக்குமே இது பரீட்சயமான ஒன்றுதான்.

பொதுவாக ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டுமெனில், அவருடைய நண்பனைப் பற்றிச்சொல் என்பார்கள். ஏனென்றால், ஒருமித்த எண்ணங்களைக் கொண்டவர்களே நண்பர்களாக இருப்பது வழக்கம். ஆனால், இந்த 'வாதம்' விசயத்தில் அது சற்றே தவறானதாகும். பொதுவாக ஒரு நண்பர் கூட்டமென்றால், ஒருவர் பேசுவதற்கு காசு கேட்பார், ஒருவரோ அவருடைய பேச்சை நிறுத்துவதற்கு காசு கேட்பார், ஒருவர் அளவோடு அளவளாவுவார். இப்படி, 'பல வாதங்களும்' கலந்த கலவையாகத்தான் அந்தக் கூட்டம் இருக்கும். வாக்குவாதம் என்றால், நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.


இதுபொதுவாக, ஒரே நண்பர்கள் கூட்டத்திற்குள்தான் அதிகம் காணப்படும். பொதுவாக, ஒருவனிடம் எப்படிப் பேசினால் அவன் கடுப்பாவானோ, அப்படிப் பேசித்தான் இந்த வாக்குவதததை ஆரம்பிப்பார்கள். இதைப் பெரும்பாலும், பொழுது போவதற்காகவேச் செய்வார்கள் உதாரணத்திற்கு, கிரிக்கெட்டில் ஒருவருக்கு சச்சின் அதிகம் பிடிக்குமென்றால், மற்றவருக்கு, ட்ராவிட்டைப் பிடித்திருக்கலாம். அன்றைய போட்டியில், எவரேனும் ஒருவர் அதிக ரன் எடுக்காமல் அவுட்டாகிவிட்டால்போதும்;. உடனே, அவர்களை வெறுப்பேற்றுவதற்கு, அந்த விளையாட்டுவீரரை மட்டம் தட்டுவர். உடனே நம்மவர்களும் பொங்கிவிட ஒரு அருமையான வாக்குவதாம் நடந்துவிடும்...அவரவர் பொறுமைக்கு எல்லையுண்டு, அந்த எல்லையினைமீறி வரம்பு மீறி வாக்குவாதம் செய்யும்போதுதான் இது 'எல்லை தாண்டும் பயங்கர-வாதமாகிறது'.

எங்கெல்லாம் இந்த 'எல்லை தாண்டும் பயங்கர வாதம்' நிகழ்கிறது என்பதை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.


குழாயடிச் சண்டை: பெண்கள் இந்த 'பயங்கர-வாதத்திற்கு' பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இருப்பார்கள் என்றே எண்ணத்தோன்றும் அளவிற்கு இவர்களது குழாயடி சண்டையிருக்கும். யாராவது ஒருவர், வேறொரு தெருவிலிருந்து, இந்தத் தெருவிற்கு தண்ணீர்பிடிக்க வந்துவிட்டால் போதும், சும்மா கிடந்த வாய்க்கு அவுள் கிடைத்த மாதிரி சும்மா வசைந்து தள்ளிவிடுவார்கள். சும்மா சொல்லக்கூடாது, என்னமா 'வாதம்' செய்கிறார்கள் இந்தப் 'பயங்கர-வாதிகள்'???

நாய்கள் இராஜ்ஜியம்:

தெருவிலிருக்கும் நாய்கள் இருக்கிறதே, இவை மனிதர்களைக் காட்டிலும் எல்லைச் சண்டையில் சிறந்தவர்கள். அதுவும் குறிப்பாக, இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். அடுத்த தெருவிலிருக்கும் நாயானது இரவு நேரத்தில், பக்கத்துத் தெருவிற்குச் சென்றுவிட்டால் போதும். உடனே அந்தத் தெருவிலிருக்கும் அனைத்து நாய்களும் ஒன்றுகூடி அதை நோக்கிக் குரைக்க ஆரம்பித்துவிடும். அது நாயாக மட்டுமல்ல, நாமாக இருந்தாலும் இதே கதிதான்.


இரவு நேரங்களில், அவைகளுக்கு ஏதோ அடிமை சிக்குவதுபோல, எவரேனும் தனியாகச் சிக்கிவிட்டால் போதும், அப்படியே குரைத்து, குரைத்து அவர்களை ஒருவழியாக்கிவிடும். இவற்றில் சில நாய்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம், அவை, அப்படிச் சிக்கியவர்களைத் துரத்துவது போலவே பாவலா காட்டிக் கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் அவருடைய மனதில் இதுதான் ஓடிக் கொண்டிருக்கும் "நான் அப்படியே சாக் ஆயிட்டேன்." என்னமோ இதைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம், வடிவேலுவின் ஒரு காமெடிதான் நினைவுக்கு வரும்; நாம அடிச்ச டீக்கடைக்காரன், இருக்கானா, இல்லையான்னு பாருன்னு சொல்வார். அந்த டீக்கடைக்காரர் இவருக்குப் பயந்து, ஓட்டமெடுப்பதைப் பார்த்ததும் சொல்வார், நமக்கும் ஒரு அடிமை சிக்கிட்டான்டா... அதயேதான் இவைகளும் பின்பற்றுகின்றனவோ என்னவோ?

சரி, நாய்களுக்குத்தான் 'எல்லை தாண்டிய பயங்கர-வாதம்' என்றால், பேய்களுக்குமா? அட, ஆமாங்க. நம்ம ஊர்ல கேட்டுப்பாருங்க, டேய், அந்தக் கிணத்துல குளிக்காத, அங்கதான் அவரோட ஆவி சுத்துதுன்னு சொல்லுவாங்க; அடப்பாவிங்களா, உயிரோட இருக்கும்போதுதான் எல்லைக்குப் பிரச்சனை பன்றானுங்கன்னா, செத்த பிறகுமா? நடத்துங்கடா,,,


பேருந்து நிறுத்தச் சண்டைகள்:

மதுரையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம், திண்டுக்கல்லில் மதுரை மார்க்க பேருந்து நிறுத்தங்களில், நீங்கள் இதை சர்வ சாதரணமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் அரசுப் பேருந்துக்கும், தனியார் பேருந்துகளுக்கும் இடையேதான் இந்தச் சண்டை நடக்கும். இளசுகள் பெரும்பாலும், தனியார் பேருந்தைத்தான் விரும்புவார்கள். அதனால், பெரும்பாலானோர், அரசுப் பேருந்தைத் தவிர்த்து, அதற்கு அடுத்துப் புறப்படத் தயாராக இருக்கும் தனியார் பேருந்தில் ஏற முயர்சித்துவிட்டால் போது. உடனெ இரு பெருந்து நடத்துனர்களுக்கும் இடையே பெரிய களேபரம் ஆகிவிடும். அப்பொழுதுதான், அவர்கள் நொடிகளைக் கண்க்கிட்டுச் சொல்வார்கள். "இன்னும் 30 நொடிகள் இருக்கு, அதுக்குள்ள நீ ஏன் வண்டியில் ஆள் ஏஏற்றுகிறாயென்று". சீரியசாகச் சண்டையிட்டுக் கொள்ளும் அவர்களைப் பார்த்தால், எனக்கு என்னவோ சிரிப்புதான் வரும். இது, நேரத்திற்கான, 'எல்லை தாண்டும் பயங்கர-வாதம்'.


சாலையோரங்களில் எல்லைதாண்டும் பயங்கர-வாதம்:

சமீபத்தில், அருப்புக்கோடடை அருகிலிருக்கும் இருக்கன்குடி கோயிலுக்குச் சென்று திரும்புகையில் ஒரு நுங்குக் கடையில் வண்டியினை நிறுத்தினோம். மழைக்கு ஆங்காங்கே காளான் முளைப்பது போல, வெயிலுக்கு ஆங்காங்கே நுங்கு, பழரசக் கடைகள் முளைக்கின்றன; நுங்குகளை வெட்டச்சொல்லிவிட்டு, அவரிடம், "எத்தனையென்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவரோ, "நீங்களே எத்தனை சாப்பிடுகிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார், கடின வேலைதான் எனக்கு.


அவர் ஒவ்வொன்றாக சீவித்தர, அப்படியே எடுத்து வாயில் இலபக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் வந்து, அவரிடம் வாக்குவாதம் செய்தார். என்னவென்று கவனித்தால், அவர் 100 அடி தூரத்தில், கரும்பு சாறு கடை வைத்து இருக்கிறாராம், அதனால் இவரது கடையினை இன்னும் பல அடிதூரம் தள்ளிவைத்து கொள்ளச் சொல்கிறார். சரிதான், இங்கேயுமா இந்த எல்லைப் பிரச்சினை என்று காசை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். இதுவும் ஒரு "எல்லை தாண்டும் பயங்கர-வாதம்தான்".

இப்படியாக, எல்லை தாண்டும் பயங்கர-வாதங்கள் பலவாக இருந்தாலும், எல்லாவற்றையும் இந்தப் பதிவில் இட இயலாது எனபதாலும், அப்படி நான் நிறுத்தவில்லையெனில், உங்களுக்கும் எனக்கும் இந்தப் பதிவில் எல்லைதாண்டும் பயங்கர-வாதம் வந்துவிட்டும். என்பதாலும், இந்த வாதத்தினை இத்தோடு முடித்துகொள்கிறேன்...

இந்த Blog-ஐத் தாண்டி, நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது. "Comments-reply" ஆகத்தான் இருக்கனும்... வர்ர்ட்டா???

Tuesday, June 17, 2014

இரண்டாம் உலகம்


இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் பிறப்பென்பது முதல் உலகமென்றால், இறப்பென்பது இரண்டாம் உலகம்தான். இது உயிர் கொண்ட ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல உயிரற்ற பொருள்களுக்கும் பொருந்தும். என்னதான், இந்த உலகம் ஒரே மாதிரி இருந்தாலும், சிறுவர்களின் உலகமே தனிதான், அவர்களது உலகத்தில்தான் பலபொருள்களும் தமது இரண்டாமவது உலகத்தை அடைகின்றன. இந்தப் பதிவானது, நான் என் சிறு வயதில் அனுபவித்த பல பொருள்களைப் பற்றிய தொகுப்பே ஆகும், அனேகமாக இது நம் அனைவருக்கான பதிவாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால், எமது பகுதியில் இருந்த சிறுவர்களின் இரண்டாம் உலகம் பற்றியே இந்தப்பதிவு.

சைக்கிள் டயர்:




துள்ளித்திரிந்த அந்தக் காலத்தில், சிறுவர்கள் இருக்கும் எல்லோரது வீட்டிலும் கதவின் ஓரமோ, வீட்டின் பின்புறமோ இந்த சைக்கிள் டயரானது கண்டிப்பாக இருக்கும். பொதுவாக, இது ஒவ்வொரு சிறுவனின் அடையாளமாக்வே இருக்கும். ஒருசிலர், மிக உறுதியான சைக்கிள் டயர் வைத்து இருப்பார்கள். சிலர், இலகுவான சைக்கிள் டயரும், சிலரோ இரு டயர்களை இணைத்து ஒன்றாக வைத்தும் இருப்பார்கள். காலையில் அதை உருட்டிக் கொண்டு சென்றால் வீடு திரும்பும்வரை அதை வைத்துக் கொண்டுதான் பல வேலையும், விளையாட்டுக்களும் அரங்கேறும். அந்தந்த டயருக்கு ஏற்றவாரு அதைச் செலுத்துவதற்கு ஒரு குச்சியினையும் தயார் செய்து வைத்திருப்போம். தவில்காரனுக்கு எப்படி தவிலும், குச்சியும் இரு கண்களோ அது மாதிரி எங்களுக்கு இவ்விரண்டும் இரு கண்கள். யாருடைய டயர் வலுவானது என்பதைக் காட்ட போட்டிகள் நடக்கும். அதில் முதன்மையானது, ஒன்றோடொன்று மொதச் செய்வது. போட்டியிடும் இருவர் எதிரெதிராக நின்று கொண்டு அவர்களது டயர்களை எதிரில் நிற்பவரது டயரை நோக்கிவிட வேண்டும், எதிரில் இருப்பவரும் அவ்வாறே செய்வார். அப்போது ஒன்றோடொன்று மொதிக்கொண்டு, யாருடைய டயரானது கடைசியில் கீழே விழுகிறதோ, அந்த டயர் வெற்றிபெற்றதாகக் கருதப்படும். சேவல் சண்டையே எங்களது விளையாட்டைப் பார்த்துத்தான் வைத்திருக்கக் கூடும். டயரினை வைத்துக்கொண்டு ஓட்டப்பந்தயம் நடக்கும், அதற்கு முன்பாக அனைவரும் டயரினைப் பிடித்துக் கொண்டு தரையில் வேகமாகத் தேய்க்கும்வண்ணம் அதைப் பின்னோக்கி இயக்குவோம். அப்போது அதைப் பார்ப்பதற்கு எதோ மிகப்பெரிய கார் ரேசில் டயர்கள் உரசிக்கொளவது போல இருக்கும். இப்படிப்பட்ட இந்த டயரானது எங்கள் கைகளில் கிடைப்பதே ஒரு வேடிக்கைதான், ஏதாவதொரு சைக்கிள் கடைக்கு அருகில் தூக்கியெறியப்பட்ட எதேனும் ஒரு பழைய டயர்தான் இப்படி எங்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும். முதல் உலகத்தில் உழைத்ததோ இல்லையோ எங்களது இரண்டாம் உலகத்தில் நிறையவே உழைத்திருக்கிறது...

சிகரெட் அட்டை:

காலியான சிகரெட் அட்டையினைக் கொண்டு ஒரு விளையாட்டு விளையாடியது உண்டு. ஒவ்வொரு அட்டைக்கும் ஒவ்வொரு மதிப்புண்டு. வெளிப்புற அட்டையானது அதிக மதிப்புடையாதாக இருக்கும். உதாரணமாக, "Wills" வெளிப்புற அட்டையின் மதிப்பு 20, "Panama"என்ற சிகரெட் அட்டையின் மதிப்பு 40, மஞ்சள்நிற சிகரெட் அட்டையின் மதிப்பு 10.


அட்டையினை ஒரு சதுர வடிவமாக செய்து கொள்வோம். பின்னர், ஒருவட்டம் வரைந்துகொண்டு, பந்தயத்திற்கு இத்தனையென்று ஆளாளுக்கு அந்த வட்டத்தில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கொள்வோம். பின்னர் 15 அடியளவிலிருக்கும் எல்லைக்குச் சென்று ஒரு செதுக்கிக் கல்லால் அந்த வட்டத்தை நோக்கி வீச வேண்டும். அப்படிவீசும்போது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அட்டைகளானது, எத்தனை வெளியேறுகிறதோ அவை அத்தனையும் அவருக்குச் சொந்தம். இதைத் தடுப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது வீசியவரது கல்லினை, எவராவது எல்லைக் கோட்டிலிருந்து அவரது கல்லால் தொடும்படிச் செய்துவிட வேண்டும். இதற்கு சொட்டி போடுவது என்று பெயர். அப்படிச் செய்துவிட்டால், அவர் எடுத்த அத்தனை அட்டைகளையும் அந்த வட்டத்திற்குள் மீண்டும் வைத்துவிட வேண்டும். இப்படி எல்லோரும் கற்களைக் கொண்டு எறிந்தபிறகு, வட்டத்திலிருந்து அதிகமான தூரத்தில் எவரது கல் உள்ளதோ அவர் முதலில் மீண்டும் அந்த இடத்திலிருந்து அந்த அட்டைகளை அடிக்க வேண்டும். இப்போது திரும்பப்பெரும் வாய்ப்பு கிடையாது. அவரது ஒருமுயற்சி தோற்கும்வரை அல்லது கட்டத்திலுள்ள அட்டைகள் காலியாகுவரை அவருக்கு வாய்ப்பு உண்டு. அப்படி எல்லாரும் முயற்சித்தபிறகு மிஞ்சிடும் அட்டைகளை மீண்டும் அடுக்கிவைத்து எல்லையிலிருந்து மறுபடியும் ஆரம்பிப்போம். இந்த விளையாட்டுக்காக, ஒவ்வொருவரும் செதுக்கிக் கல்லினைத் தேடி அழைவோம், நல்ல நண்பனைப் போன்றது, உறுதியான ஒரு செதுக்கிக் கல்.

அநேகமாக இப்போதெல்லாம் இந்த விளையாட்டு முற்றிலும் விளையாடப்படுவதில்லை என்பது எனது திடமான நம்பிக்கை.இந்த எண்ணங்களை மட்டுமே இப்போது என்னால் திரும்பப் பெற முடிகிறது...

சலசலக்கும்...ஓலை:

இப்போதெல்லாம் ஓலையென்று சொன்னால் அது என்னவென்று பலரும் கேட்கும் நிலை வந்துவிட்டது. அப்போதெல்லாம், எங்களோடு மிகவும் ஒட்டி உறவாடிய ஒன்றுதான் இந்த பனைஓலை. அனைத்து ஓடைகளின் இருபுறங்களிலும் இவை இருக்கும். எமது ஊரானது வறட்சிக்கு பிடித்தமான இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ளது, இங்கு பனைமரங்கள் மிக அதிகம்.


கோடை காலம் வந்துவிட்டால், காலை ஏழுமணிக்கெல்லாம் சைக்கிளில் பதனீர் கொண்டுவந்து விற்க ஆரம்பித்துவிடுவார்கள். பதனீருக்குச் சுவையூட்டுவதும் அழகூட்டுவதும் அந்தப்பனை ஓலைதான். ஒரு கீற்று பனைஒல்லையினை மடித்து, அதன் நடுவில் செம்பு நிறைய பதனீர் ஊற்றித்தருவார்கள். அப்படிக் குடித்துமுடித்த பனை ஓலைகளைக் கொண்டு காத்தாடி, கைக்கடிகாரம் என விளையாட்டுப்பொருள்களைச் செய்துகொள்வோம். இதன் ஆயுட்காலம் என்னவோ அன்றைய நாள் மட்டும்தான். ஏனென்றால், பனை ஓலை சீக்கிரமாகக் காய்ந்துவிடும். காத்தாடியென்றால், + போன்று வடிவம் வருவதற்காக நாட்டுக் கருவேல மரத்தின் முள்ளினை நடுவில் வைத்து பினைத்துவிடுவோன். பின்னர் அந்த முள்ளின் கொண்டைப்பகுதியினைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஒடுவோம், அப்போது அந்தக் காத்தாடியானது வேகமாகச் சுழலும், மேலும், சுழலும் வேகமனாது நம் கைகளில் உணர முடியும்...

புளிய முத்து:

முன்பெல்லாம் சாலையின் இருபுறமும் வெயில்படாத அளவிற்கு புளிய மரங்கள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும். பள்ளி சென்று திரும்பும்போதும், விடுமுறை நாட்களிலும், வேறு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் புளியம்பழங்களைச் சுவைக்க முடிந்தது.


அப்படிச் சாப்பிட்டுவிட்டு கீழே போட்டுவிட்டுச் செல்லும் புளியங் கொட்டைகளைச் சேர்த்து வைத்துக் கொள்வோம், விளையாட்டிற்காகத்தான். எங்கள் பகுதியில் புளியங்கொட்டையினை, புளியமுத்தென்றே அழைப்போம். ஆகவே நானறிந்த முதல் முத்து இந்தக் கருப்பு முத்துதான். தாயம் விளையாடுவெதன முடிவு செய்துவிட்டால், சிமெண்ட் தரையிருக்கும் வீடுதேடிச் சென்று, சொற சொறப்பான இடத்தில், குதிங்காளில் அந்த கொட்டையினை வைத்து தேய்த்துக் கொள்வோம். சில சமயங்களில், ஒற்றையா, இரட்டையா என்று கைகளுக்குள் புளியமுத்துக்களை வைத்து விளையாடுவோம், எதிரில் இருப்பவர் அதைச் சரியாகக் கணித்துவிட்டால் அது அவருக்குச் சொந்தம். இப்படியாகச் சேர்த்த புளியமுத்துக்களை அவ்வப்போது சிறிது உப்பு போட்டு தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டுவிடுவோம். பெண்கள் விளையாடும் பல்லாங்குழி மரப்பழகையில் இந்த முத்துக்கள்தான் அலங்கரித்திருக்கும்

சிங்கி:

எமது பருவத்தில், எமது பகுதியில் சோடா பாட்டில் மூடியினை சிங்கி என்றுதான் அழைப்போம். இது எல்லா நாட்களிலும் எளிதாக கிடைக்கும் பொருளென்பதாலோ என்னவோ நாங்கள் இதை அவ்வப்போதுதான் கண்டுகொள்வோம். பெரும்பாலும் இதை வைத்து உடைந்த பலூனைக் கொண்டு விசில் செய்துவிளையாடிக் கொள்வோம். ஈர மணலில், இட்லி செய்வதற்கு, இது மிகவும் சரியான தேர்வு. மினி இட்லி என்று நாம் தற்போது உண்பதெல்லாம், இந்த விளையாட்டில் விளைந்ததாகத்தான் இருக்கும். கார்த்திகை மாத்ததில் மெழுவர்த்தி வைப்பதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வோம். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடைக்கும் உருகிய மெழுகுகளைச் சேர்த்து இந்தச் சிங்கியில் வைத்து உருக்கி, அதில் திரி வைத்து ஒரு விளக்காக மாற்றுவோம். வாழ்விழந்தவற்கு வாழ்வழித்த பெருமையினைத் தேடிக்கொண்டோம். இதில் வேடிக்கை என்னவென்றால், பல நிற மெழுகுகளும் சேர்ந்து இருப்பதால், இது புதுவித நிறத்தில் ரம்மியமாக காட்சி அளிக்கும். அப்படி உருக்கும்போது, கைகளில் தெரித்து விழும் அந்த உருகிய மெழுகில், என் நினைவுகளும் உருகிக் கொண்டுதான் இருக்கிறது....

சிற்பியின் கைபட்டால் கல்லானது ஒரு சிலையாகத்தான் ஆகும், ஆனால் சிறுவர்களின் கைகளில் கிடைக்கும் பொருளுக்கு புது உலகமே கிடைத்துவிடுகின்றது... "இரண்டாம் உலகம்"...!