Monday, April 13, 2020

நான் ரசித்தவை - Tumbbad (2018)

"ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நிறைய நேரம் கிடைப்பதால் அதை குடும்பத்துடன் செலவிடும் நேரம்போக மீதமிருக்கும் நேரங்களில் நல்ல படங்கள் பார்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்". இப்படி எழுத வேண்டுமென்றுதான் ஆசை, ஆனால் நிலைமை தலைகீழ், சராசரி நாட்களைக் காட்டிலும் அதிக நேரம் அலுவலக வேலை பார்க்க வேண்டி உள்ளது. என்னதான் வீட்டில் தனித்து இருந்தாலும், அலுவலகப் பனி இருப்பதால் வழக்கமான நாட்களாகத்தான் செல்கின்றன பெரும்பாலான வார நாட்கள். வார இறுதியில் கிடைக்கும் நேரத்தில்தான் கொஞ்சம் இதுபோன்ற படங்களுக்கும், கட்டுரைகளுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. அந்த வகையில் நான் ஏற்கனவே பார்த்து ரசித்த படங்களும் அடங்கும். அவ்வாறு என்னை வெகுவாக கவர்ந்த ஒரு படத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் எழுதுகிறேன். 2018-ஆம் ஆண்டு "Hindi" மொழியில் வெளிவந்த "Tumbbad" படம்தான் அது. பேராசை பெரு நஷ்டம் என்ற மையக்கருவை தாங்கி வந்த படம் இது.

இந்தப் படம் எவ்வாறு உருவானது என்பது பற்றிய தகவல் சுவாரசியமானது, இந்த கதையினை எழுதியவர் அவருடைய நண்பரிடம் இருந்து ஒரு சிறு குறிப்பாக அவருடை பதின்வயதில் கேட்டு இருக்கிறார். பின்னர் அதை மெதுவாக மெருகேற்றி பல வருட கோர்ப்புகளுக்குப் பிறகு அதை ஒரு திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அதற்கு சரியான தயாரிப்பாளரை அணுகி அதை படமாக்கி பார்த்தும் திருப்தி அடையாமல், மீண்டும் கதையினை மெருகேற்றி கடைசியாக உருத்தரித்திருக்கும் படம்தான் இந்த "Tumbbad". தன்னுடைய கதையினை ஒரு ரசிகனாக அமர்ந்து பார்த்து திருப்தி ஆகாமல், மீண்டும் படைக்கப்பட்ட படம் இது. ஒரு படைப்பாளியிடம் இருந்து வரும் படைப்புகளானது, படைப்பாளியின் கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் அதை காண்பவராது/ரசிப்பவரது கோணத்திலும் பார்த்து அதை வார்த்தால்தான் அந்த படைப்பானது முழுமை பெறும்.

ஒரு படைப்பாளிக்கு, அவருடைய எண்ணங்களை அவருடைய விருப்பம்போல செய்யவிட்டால் அதற்கு பலனாக இதுபோன்றதொரு அற்புத படைப்புகள் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த படம். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை தெளிவாக, அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இந்தப் படத்தின் மிகப் பெரிய ஒரு சொத்து என்று சொன்னால் அது ஒளிப்பதிவுதான், அத்துணை அழகாக இருக்கும். ஒளிப்பதிவிற்கு எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறலாம், அந்த சின்னஞ் சிறு வீட்டில், கைவிளக்கு ஒளியில் அற்புதமாக படமாக்கியிருப்பார்கள். அந்த முதியவர் இறப்பை காட்சிப்படுத்தியிருப்பது, ஓடத்தில் பயணம் செய்வது, நகரத்து தெரு என் அடுக்கி கொண்டே போகலாம். கதைக்களமானது சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் அமைத்திருக்கும் காட்சி அமைப்புகள், அதனை ஒளிப்பதிவு செய்த விதம் - ஆகா அத்தனை பிரமாதம். இசையும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும்பங்காற்றி இருக்கிறது, இவை எல்லாவற்றையும் ஒரு அழகிய மாலையாக உருவாக்கிய பெருமை திரைக்கதை மற்றும் இயக்குனரை சேரும்

இந்த படத்திற்கு அவர்கள் எடுத்திருக்கும் இடம் மிக அற்புதமாக இருக்கும், சபிக்கப்பட்ட கிராமத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும், அந்த கிராமத்துக் கடசிகளைக் காணும்போது, நம் மீது மழை பொழிவது போல இருக்கும். அந்த அளவிற்கு, கதையினையும் காட்சியினையும் வைத்து இருப்பார்கள். நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்ததால் இதுபோன்ற மழை காட்சிகளை அதிகம் ரசிப்பதுண்டு (தாகம் அதிகம் :)).
ஆனால், மழையே பெய்யாதிருப்பது எப்படி ஒரு சாபமோ, அதுபோல மழை பொழிந்துகொண்டே இருப்பதும் ஒரு சாபம்தான். 
குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதிர் பருவம் என மூன்று காலங்ககளிலும் கதையினை நகர்த்தியிருப்பர். படத்தின் இறுதிக் கடசியில் தன்னுடைய தவறை உணரும் நேரத்தில் கதைநாயகன் எடுக்கும் முடிவும், அதன் பிறகு அவரது மகன் எடுக்கும் முடிவும் மிக அற்புதம். கதையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் ஆடை வடிவமைப்பும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசித்து வரவேற்க வேண்டிய ஒரு அற்புத படம்தான் இந்த "Tumbbad"

ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்து தரப்பும் தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து அற்புதமாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இது போன்றதொரு படைப்பை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.  பேராசை பெரு நஷ்டமாகாத்திருக்க வேண்டும்!!! :) 

மொட்டைக்கும் முழங்காலுக்கும் - பாகம் இரண்டு

வயதிற்கும், நமது அணுகுமுறைக்கும், எண்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டா என்பது தெரியவில்லை. ஒருவேளை, நமக்கு கிடைக்கும் அனுபவங்களை பொறுத்தே, இவை அனைத்தும் அமைகிறதா? எது எப்படியோ, இந்தக் கட்டுரையானது சில கருத்துக்கள் பற்றி, பலரும் ஒரேயொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க எனது மனம் மட்டும் வேறுமாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக எண்ணி எழுதப்பட்ட ஒன்று. அதனால், இது தவறெனத் தெரிந்தால், படித்தவுடன் உங்கள் மனதிலிருந்து அழித்து விடவும்.

இருபத்தொன்றாவது நூற்றாண்டில் இருக்கும் நம்மில் பலரும், சாதியினைப் பற்றி பேசுவதோ, அதில் பாகுபாடு பார்ப்பதோ மிகப் பெரும் பாவமாகவும், அதே வேளையில் பிற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் பார்க்கும் மனநிலையில் இருப்பதாகவே எண்ணுகிறேன். நாம் உண்மையில் அப்படித்தான் இருக்கிறோமா?, சற்று எனது மனதின் கேள்விகளை இங்க வைக்கிறேன்.


நாம் உண்மையில் அப்படி  பார்க்காமல்தான் இருக்கிறோமா? என்று எண்ணுகையில், ஒரு கேள்வி எனக்கு மனதில் பட்டது. காலையில் பல் துலக்கும்போது நாம் பயன்படுத்தும் தண்ணீரானது "Wash Basin"-இல் இருக்கும் குழாயில் அல்லாமல், கழிப்பறையில் கழிவறையின் அருகில் இருக்கும் குழாயில் இருந்து என்னால் வாய் கொப்பளிக்க முடியுமா? என்றால், அதற்கு என்ன விடை சொல்வதென்று தெரியவில்லை. இரண்டும் ஒரே தொட்டியிலிருந்து வரும் தண்ணீர்தான் என்றாலும், அதை மனது ஏன் ஏற்க மறுக்கிறது? சுத்தம், சுகாதாரம், நாகரிகம் என்று பல காரணங்களை அடுக்கலாம், ஒரு உதாரணத்திற்குத்தான் இதை எடுத்துரைத்தேன். அட, தண்ணீர் வேண்டாம், கழிவறையில் பயன்படுத்தும் "Cup" ஐ எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி முகம் கழுவகூட மனம் ஏன் ஏற்க மறுக்கிறது? மொட்டைக்கும் முழங்களுக்கும் முடிச்சு போடுகிறேனோ? அவரவற்கு அவரவர் கருத்து நியாயமாய்படுகிறது.

சாதியத்தை வெறுக்கிறோம் என மார்தட்டும் அனைத்து ஊடகங்களும் விளம்பர இடைவெளியில் ஒளிபரப்புவது என்னவோ "சாதி தாங்கிய "" விளம்பரங்களைத்தான். அந்த விளம்பரங்களை எடுத்தவர்களும்,அதில் நடித்தவர்களும், அதை வியாபாரமாக்கியவர்களும் என யாவரும் நவயுக நாயகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக எதையும் நான் உயர்த்திப் பிடிக்கச் சொல்லவில்லை. தீவிர பற்று கூடாது, அப்படியே இருந்தாலும் அது பிறரைப் பாதிக்கக் கூடாது. ஒன்றை தீர்க்கமாக எதிர்ப்பதால் மட்டுமே நாம் நம்மை ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர்களாக, தொலைநோக்கு பார்வையாளர்களாக கருத்தாக கூடாது என்பதுதான் எனது வாதம். ஒவ்வொருவருடைய பார்வையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

சாதி / மதம் என்று இன்னும் பெயரிடப்படாத பல பாரபட்சங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

காலத்திற்கு ஏற்ப மக்களும் அவர்களது பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. சிலர் அவர்களாக மாறுகிறார்கள், பிறர் காலப் போக்கில், மாற்றம் அடைவது தெரியாமலே மாறிவிடுகின்றனர். இப்பொழுது சரியென்றுப்டுவது, பின் வரும் காலங்களில் தவறாகாது தெரியலாம். அதுபோல இப்போது தவறாகபடுவது பின்னாளில் சரியாகப்படலாம். ஆகவே, வாழும் காலத்தில் மனதிற்கு பிடித்தபடி, பிறரை நோக செய்யாது வாழ்வதே பெரு வாழ்வாக இருக்கும். சக மனிதர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கவும், அன்பு பாராட்டவும் கற்றுக் கொள்ள சொல்கிறேன்.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/11/blog-post_11.html